Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியரான தமிழகத்தை சேர்ந்த அன்பு ரூபி…!
இந்தியாவிலேயே அரசு மருத்துவமனையில் பணியமர்த்தப்படும் முதல் திருநங்கை என்ற பெருமையை பெறுகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்பு ரூபி.
இந்தியாவிலேயே அரசு மருத்துவமனையில் பணியமர்த்தப்படும் முதல் திருநங்கை என்ற பெருமையை பெறுகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்பு ரூபி. பொது சமூகம் ஒதுக்கி வைக்கப்படுபவர்களில் திருநங்கைகளும் ஒருவர். இந்த சமூகத்தில் புறக்கணிப்பு, கேலி, கிண்டல்கள், அவல பேச்சுக்கள், பெற்றோரே வீட்டைவிட்டுத் துரத்தும் கொடுமை போன்ற பல துயர சம்பவங்களை அனுபவித்து வருபவர்கள் தான் திருநங்கை மற்றும் திருநம்பிகள்.

இவர்களின் வாழ்க்கை பாதையும் இதுதான் தீர்மானிக்கிறது. ஆனால், அன்பு ரூபி விஷயத்தில் அவரின் அம்மா இவருக்கு உறுதுணையாக இருந்துள்ளார். இந்த சமூகத்தில் ஆணாக பிறந்து உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் பெண்ணாக மாறிய ஒரு திருநங்கையின் மனநிலையை முதலில் ஒரு மனிதனாக உணர்ந்திருக்கிறார் அவரின் தாயார் தேன்மொழி. இவரின் மிகப்பெரிய முயற்சியால் இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் அன்பு ரூபி.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்
தூத்துக்குடி மாவட்டம் சேர்வைகாரன் மடத்திலுள்ள புதுமனைத் தெருவை சேர்ந்தவர் மாற்றுத் திறனாளியான ரத்ன பாண்டி - தேன்மொழி தம்பதியினர். இவர்களுக்கு மகனாக பிறந்தவர் அன்பு ராஜ். ஆணாக பிறந்த அன்பு ராஜ் தனது பதின்ம வயதில் அவருக்கு ஏற்பட்ட உளவியல் மாற்றமும், உடல்ரீதியான மாற்றத்தினாலும் திருநங்கையாக மாறினார். திருநங்கையாக மாறிய அன்புராஜ், தனது பெயரை அன்பு ரூபி என மாற்றிக் கொண்டார்.

புறக்கணித்த சமூகம்
அன்பு ரூபி ஒரு திருநங்கை என்பதால் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டார். கூடவே இந்த சமூகமும் அவரை ஒதுக்கி வைத்தது. ஆனால், அவரது தாய் தேன் மொழி அன்பு ரூபிக்கு உறுதுணையாக இருந்தார். பெற்றோரின் பாதுகாப்பு மற்றும் அரவணைப்பு இருந்ததால், அவரால் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை மேற்கொள்ள முடிந்தது.

பட்டபடிப்பு
பொது சமூகத்தின் புறக்கணிப்பு, உறவினர்களின் நிராகரிப்பு, நண்பர்களின் கேலி கிண்டல்கள் என அத்தனையையும் கண்டு ஒதுங்கி நிற்காமல், விடாமுயற்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் திருநெல்வேலியில் உள்ள நர்சிங் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்தார் அன்பு ரூபி. அதைத் தொடர்ந்து, அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் முடித்த அன்பு ரூபி, தூத்துக்குடி சக்ரடு ஹார்ட் மருத்துவமனையில் மூன்றரை ஆண்டுக்காலம் செவிலியராக பணி புரிந்துள்ளார்.

சொந்த ஊரிலேயே பணி
தான் சிறுவயது முதல் பட்ட அனைத்து கஷ்டங்களுக்கும் பலன் அளிக்கும் வகையில் தற்போது அன்பு ரூபிக்கு சொந்த ஊரிலேயே செவிலியர் பணி வழங்கி கவுரவித்திருக்கிறது தமிழக அரசு. தன்னுடைய கடும் உழைப்பால் தற்போது இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் அன்பு ரூபி. இவருக்கு தற்போது 25 வயது.

பணி நியமன ஆணை வழங்கும் விழா
மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலமாக பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா சென்னை நேரு விளையாட்டரங்கில் நேற்று (டிசம்பர் 2) நடைபெற்றது. இதில் 2,721 செவிலியர்கள், 1,782 கிராம சுகாதாரச் செவிலியர்கள், 96 மருத்துவ அலுவலர்கள், 524 ஆய்வக நுட்பநர்கள் உள்ளிட்ட 5,224 பேருக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதில், அன்பு ரூபியும் செவிலியர் பணி நியமன ஆணையை பெற்றுக் கொண்டார்.

பெருமையான தருணம்
"சுகாதாரத்துறை வரலாற்றில் நாட்டிலேயே முதன்முறையாக செவிலியர் பணிக்கு திருநங்கை ஒருவர் தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தமிழகத்திற்கு பெருமை தரும் விஷயம்." என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அந்நிகழ்வில் கூறியிருந்தார். திருச்சியில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியாராக பணி அமர்த்தப்பட்டுள்ளார் அன்பு ரூபி.

மகிழ்ச்சியாக உணர்கிறேன்
செவிலியராக தேர்வானது குறித்து திருநங்கை அன்பு ரூபி கூறியிருப்பதாவது, "தற்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இந்தியாவிலேயே நர்ஸாகும் முதல் திருநங்கை நானாக இருக்கிறேன். எனக்கு வாய்ப்பளித்த தமிழக முதல்வர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்." என்று கூறினார்.

வாழை இலைகளை விற்று படிக்க வைத்தார்
"நான் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். வாழ்க்கையில் பல போராட்டங்களையும் கஷ்டங்களையும் சந்தித்திருக்கிறேன். எனது இரண்டாவது வயதிலேயே தந்தையை இழந்துவிட்டேன். எனது தாயார் தான் வாழை இலைகளை விற்று அதன் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு என்னை படிக்க வைத்தார். எனது நண்பர்கள், பேராசிரியர்களும் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார்கள். ஒருசில நண்பர்கள் என்னை மிகவும் காயப்படுத்தினார்கள்." என்றார் அன்பு ரூபி.

திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு
"என்னோட பொற்றோர் என்னை ஏத்துக்கிட்டதால நான் அவங்களிடம் பாதுகாப்பா வளர்ந்தேன். ஆனா, எல்லா திருநங்கைகளுக்கும் இந்த வரம் கிடைக்கிறதில்ல. இத புரிஞ்சுக்காம பெற்றோரே திருநங்கைகளை வீட்டைவிட்டு அனுப்பிடுறாங்க. அதனால தான் அவங்க, பிச்சைக்காரங்களாவும், பாலியல் தொழிலாளியாகவும் ஆயிடுறாங்க. திருநங்கைகளும் மனிதர்கள் தான். இந்த சமூகம் திருநங்கைகளை புரிஞ்சிக்கனும். எங்களை இந்த சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த முயற்சி எடுப்பேன்." என்று தெரிவித்தார் ரூபி.

நர்ஸிங் துறை
மேலும் பேசிய அன்பு ரூபி, "முதலில் என்னைப் பற்றி தெரிஞ்சுக்கணும். எனக்குள்ள ஏற்படும் மாற்றங்களை நான் புரிஞ்சிக்கணும். எல்லோரிடமும் இதுபற்றி மருத்துவ ரீதியான புரிதலை ஏற்படுத்தணும். எனது சமூகத்திற்கு நான் ஒரு முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன். அவர்களில் பலர் வெளியே வந்து தங்கள் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும். என்னால் முடிந்தவரை சமூகத்திற்கு சேவை செய்ய விரும்புகிறேன். அதனால் தான் நான் நர்சிங்கைத் தேர்ந்தெடுத்தேன்." என்றார்.

தாய் தேன்மொழியின் பங்கு
அன்புரூபி இந்த நிலையை எட்டியதற்கு, அவரின் தாய் தேன்மொழியின் பங்கு மிகமிக முக்கியமானது. இந்த சமூகத்தில் திருநங்கை மற்றும் திருநங்கைகளாக இருப்பவர்கள் அனைவரையும் அவர்கள் பெற்றோரே முதலில் புறகணிக்கிறார்கள். திருநங்கையாக மாறிய தன் மகனின் மனநிலையை புரிந்து கொண்டு, அவரின் எதிர்கால வாழ்வுக்கும், வெற்றிக்கும் துணை நின்ற அவரின் தாயார் தேன்மோழி, "மாற்றுப் பாலினத்தவர்களைப் புறக்கணிக்கக்கூடாது. என் மகன் மகளாக மாறியதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்' என்று கூறி வியக்க வைக்கிறார்.
சாதிப்பதற்கு உழைப்பும் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் தான் தேவையே தவிர, பாலினம் என்ற ஒன்று தேவையில்லை என்பதை அன்பு ரூபி இவ்வுலகிற்கு நிரூபித்துள்ளார்.



Click it and Unblock the Notifications











