சொன்னா நம்பமாட்டீங்க.. இந்த ஹோட்டலில் பிளாஸ்டிக் குப்பைக்கு இலவச சாப்பாடு குடுப்பாங்களாம் - எங்கன்னு தெரியுமா?

Free Meals For Plastic Waste: மனிதன் உயிர் வாழ உணவு மிகவும் அவசியம். எனவே தான் உலகின் எந்த மூலை முடுக்கில் ஹோட்டல் வைத்தாலும், அந்த ஹோட்டல் தொழில் சிறப்பாக நடக்கிறது. அதுவும் உணவை சுவையாக வழங்கினால், எத்தனை கிலோமீட்டர் தூரம் இருந்தாலும், மக்கள் தேடி வந்து சாப்பிடுவார்கள். குறிப்பாக சாப்பிடும் சாப்பாட்டிற்கு காசு கொடுக்க தேவையில்லை என்றால், அங்கு கூட்டம் அலை மோதும் அல்லவா?

அப்படி சாப்பிடும் உணவுக்கு காசு வாங்காத ஒரு கஃபே உள்ளது. அதுவும் இந்த கஃபே சத்தீஸ்கரில் உள்ள அம்பிகாபூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த கஃபேயின் பெயர் Garbage Cafe ஆகும். இதன் ஸ்பெஷல் என்னவென்றால் பிளாஸ்டிக் கழிவுகள் அல்லது பிற பொருட்களை வழங்கினால் இலவச உணவு வழங்கப்படுவதாகும்.

India s First Garbage Cafe Offers Free Meals For Plastic Waste

கஃபேயின் நோக்கம்

இந்த கஃபேயின் நோக்கம் மக்களின் பசியை ஆற்றுவது மட்டுமின்றி, பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதையும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துவதுமாகும். தூய்மை பிரச்சாரத்தின் ஒரு முயற்சியாக தொடங்கப்பட்ட இப்படியான உணவகம் இந்தியாவில் முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மிகவும் தூய்மையான நகரங்களுள் ஒன்றான அம்பிகாபூர், அந்த நகரத்தை பிளாஸ்டிக் இல்லாத நகரமாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த உணவகம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அறிக்கைகளின் படி, இந்த கஃபேயில் ஒருவர் 1/2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுத்தால், காலை உணவை இலவசமாக சாப்பிடலாம். இந்த காலை உணவில் ஆலு சாப், இட்லி, சமோசா, பிரட் சாப் போன்றவைகள் இருக்கும். அதேப் போல் 1 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்தால், மதிய உணவை இலவசமாக சாப்பிடலாம். இந்த மதிய உணவில் 4 ரொட்டிகள், 2 வகையான காய்கறிகள், 1/2 கப் சாதம், தால், சாலட், தயிர், ஊறுகாய், மற்றும் அப்பளம் போன்றவை இருக்கும்.

மலிவு விலையில் உணவு

ஒருவேளை பிளாஸ்டிக் கழிவுகள் எதுவும் இல்லாவிட்டால், அவர்களுக்கு இந்த கஃபே குறைந்த விலையில் உணவுகளை வழங்குகிறது. காய்கறிகள், சாதம், தால், ஊறுகாய் மற்றும் சாலட் அடங்கிய ஒரு அளவு சாப்பாட்டின் விலை ரூ.40 ஆகும். அதேப் போல் ரூ. 50 தாலியில் 2 வகையான காய்கறிகள், 4 ரொட்டிகள், தால், சாதம், சாலட், அப்பளம், ஊறுகாய் போன்றவை இருக்கும். ரூ.70 தாலியில் பன்னீர் மசாலா, 2 வகையான காய்கறிகள், சாதம், தால், ஊறுகாய் மற்றும் சாலட் போன்றவை அடங்கும்.

உண்மையில், பிளாஸ்டிக் மாசுபாட்டை தவிர்க்க இது ஒரு நல்ல முயற்சி தான். இப்படியான முயற்சியை நாட்டின் பிற பகுதிகளிலும் மேற்கொண்டால், பிளாஸ்டிக் குப்பைகள் கண்ட இடங்களில் பரவி சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கலாம் அல்லவா? இப்படியான முயற்சி குறித்த உங்களின் கருத்து என்னவென்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Story first published: Wednesday, December 11, 2024, 13:18 [IST]
Desktop Bottom Promotion