இனி ஜெயிலில் பானிப்பூரி, ஐஸ் கிரீம் கிடைக்குமா? மஹாராஷ்டிர சிறைத்துறை போட்ட புது அசத்தலான ஆடர் என்ன தெரியுமா?

சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு என்ன மாதிரியான தண்டனைகள் கொடுக்கப்படுகிறது? கைதிகள் சிறையில் எவ்வளவு துன்பப்படுகிறார்கள்? அவர்களுக்கு அங்கு அத்தியாவசிய தேவைகள் கிடைக்கிறதா? போன்ற பல கேள்விகள் பொதுமக்களிடையே எழலாம்.

சிறைச்சாலையில் கைதிகளுக்கு கொடுக்கும் உணவுகள் தரமாக இருக்கிறதா? நல்ல உணவுகள் அவர்களுக்கு சாப்பிட கொடுக்கப்படுகிறதா? என்ற கேள்விகள் தொடர்ந்து கேட்கப்படும் சூழலில், இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு மகாராஷ்டிர சிறைத்துறை ஓர் அசத்தலான விஷயத்தை செய்துள்ளது.

Ice creams and Pani Puris will be provided to Maharashtra prisoners now that 173 new items are added to the list

ஆம், மஹாராஷ்டிர மாநிலத்தில் சிறை கைதிகளுக்கு கேன்டீனில் வழங்குவதற்காக பாணி பூரி, ஐஸ்கிரீம் மற்றும் கடலை மிட்டாய் போன்ற உணவு பொருட்களும், அத்தியாவசிய பொருட்களும் சேர்த்து மொத்தம் 173 பொருட்கள் கொண்ட அட்டகாசமான பட்டியலை அம்மாநில சிறைத்துறை நிர்வாகம் தயார் செய்துள்ளது.

கைதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் உட்பட பொழுதுபோக்குப் பொருட்களும் இந்த பட்டியலில் உள்ளன. சாட் மசாலா, ஊறுகாய், தேங்காய் தண்ணீர், சதுரங்க பலகைகள், ஓட்ஸ், காபி தூள், கடலை மிட்டாய், சர்க்கரை இல்லாத இனிப்புகள், ஐஸ்கிரீம், ஆர்கானிக் பழங்கள், வேர்க்கடலை, பானி பூரி, கலை புத்தகங்கள், வண்ண பொருட்கள் போன்றவை சிறை அட்டவணையில் சேர்க்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், சில ஆடைகள் மற்றும் உடல் பராமரிப்பு பொருட்களான ஃபேஸ் வாஷ், ஹேர் டைஸ், டி-ஷர்ட்கள் போன்ற பொருட்களும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. புகையிலைக்கான தூண்டுதலை குறைக்க, நிகோடின்-பிஆர்டி மாத்திரைகளும் சிறைக்குள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளன.

கைதிகளுக்கு வழங்கப்படும் சிறைப் பொருட்களில் ஏன் மாற்றங்கள் செய்யப்படுகின்றன என்பது பற்றி, ஏடிஜிபி (சிறைத்துறை அதிகாரி) அமிதாப் குப்தா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, 'கட்டுப்பாடுகள் பெரும்பாலான கைதிகளின் மனநிலையை மாற்றுகிறது' என்று கூறினார்.

மேலும், 'கைதிகளின் மன ஆரோக்கியத்தை நிர்ணயிக்கப்பட்ட ஒழுங்குமுறை அளவுருக்களுக்குள் பராமரிப்பது அவர்களை சீர்திருத்துவதற்கான ஒரு முக்கிய அம்சமாகும். கைதிகளின் உணவு விருப்பங்களை விரிவுபடுத்துவதன் மூலம் அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வில் இது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்," என்று அவர் தெரிவித்திருந்தார்.

சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறுகளை செய்து தண்டை அனுபவிக்கும் கைதிகள் ஏராளம். நான்கு சுவருக்குள் பூட்டப்பட்ட சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் வாழ்க்கை அதிக மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கலாம். மன அழுத்தத்துடன் போராடும் பல கைதிகளுக்கு உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்குவதன் மூலம், சிறிது குறைக்கலாம்.

மகாராஷ்டிர சிறைத்துறையின் இந்த செயல், மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது. கைதிகளின் உணர்வுகளை புரிந்து கொண்டு அத்தியாவசிய தேவைகளை கொடுப்பதன் மூலம், அவர்களின் வாழ்க்கையை மன அழுத்தம் இல்லாததாக மாற்றி, நல்ல மனிதர்களாக அவர்களை மாற்றும் இந்த முன்னெடுப்பு பாராட்டுக்குரியது.

Story first published: Sunday, December 3, 2023, 18:41 [IST]
Desktop Bottom Promotion