மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம்

இந்தியாவில் தற்போது பெரும்பாலான மக்களின் வீட்டில் குளிர்சாதனப் பெட்டி வந்துவிட்டது. சுட்டெரிக்கும் வெயில் காலத்தை குளிர்சாதனப் பெட்டி இல்லாமல் கடப்பது என்பது கொஞ்சம் சவாலான விஷயம்தான். ஆனால் சில நூற்றாண்டுகளுக்கு முன்னாள் வாழ்ந்த அரசர்கள் எப்படி இந்த வெயில்காலத்தை சமாளித்து இருப்பார்கள்.

How Mughal Emperors Got Ice Cubes In Summer Without Electricity

குளிர்சாதனப் பெட்டி இல்லாமலேயே அவர்கள் எப்படி ஜில்லென்ற குளிர்பானங்களையும், மதுவையும் குடித்திருப்பார்கள். குறிப்பாக முகலாய அரண்மனைகளுக்குள், அரசர்கள் குளிர்பானங்காளைப் பருகிக்கொண்டும், குளிர்ச்சியான இனிப்பு வகைகளைச் சுவைத்துக் கொண்டும், மருத்துவப் பயன்பாட்டிற்காக கூட ஐஸ்கட்டியை பயன்படுத்தி இருக்கிறார்கள். இது எப்படி சாத்தியமாகியிருக்கும் என்று எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா?

இந்தியாவிற்குள் குளிர்சாதனப் பெட்டிகள் பயன்பாட்டிற்கு வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, முகலாயர்கள் பனிக்கட்டியைப் பெறுவதற்கும், அவற்றை வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்வதற்கும், மாதக்கணக்கில் பாதுகாப்பதற்கும் வியக்கத்தக்க வகையில் பயனுள்ள வழிமுறைகளை உருவாக்கியிருந்தனர். அவர்களின் செயல் முறைகள், புத்திசாலித்தனம், திட்டமிடல் மற்றும் அரச ஆடம்பரம் ஆகியவற்றின் கலவையாக இருந்தன. முகலாயர்கள் எப்படி ஐஸ்கட்டிகளை பயன்படுத்தினார்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஐஸ்கட்டிகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன?

ஹுமாயூன், அக்பர் மற்றும் ஷாஜஹான் போன்ற முகலாய பேரரசர்களின் ஆட்சிக்காலத்தில், காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் கார்வால் ஆகிய பனி படர்ந்த பகுதிகளிலிருந்து இயற்கையான பனிக்கட்டிகள் கொண்டு வரப்பட்டது. குளிர்காலத்தில் தொழிலாளர்கள் பெரிய பனிக்கட்டிகளை வெட்டி, டெல்லி, ஆக்ரா மற்றும் லாகூர் போன்ற முகலாய பேரரசுக்குச் சொந்தமான முக்கிய நகரங்களுக்கு அவற்றை மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்ட பயணத்தின் மூலம் அனுப்புவார்கள். அந்த காலகட்டத்தில் பனிக்கட்டிகளைப் பெறுவது சவாலாக இருக்கவில்லை. மாறாக, பயணத்தின்போது அது உருகாமல் பாதுகாப்பதே மிகப்பெரிய சவாலாக இருந்தது.

பனிக்கட்டிகள் எப்படி சேமிக்கப்பட்டது?

பனிக்கட்டிகள் இலக்கு நகரத்தை அடைந்தவுடன், அவை பராஃப் கானாக்கள் அல்லது பனிக்கூடங்கள் எனப்படும் சிறப்பு அமைப்புகளில் சேமிக்கப்பட்டன. இவை, வெப்பநிலையைக் குறைவாக வைத்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட, தடிமனான காப்பிடப்பட்ட சுவர்களைக் கொண்ட ஆழமான பாதாள அறைகளாகும். பனிக்கட்டிகள் சேமிக்கப்படுவதற்கு முன்பு வைக்கோல், துணி, சாம்பல் மற்றும் பிற பொருட்களால் சுற்றப்பட்டன. இந்த எளிய ஆனால் பயனுள்ள நுட்பம், ஆண்டின் வெப்பமான காலங்களில் கூட, பல மாதங்களுக்குப் பனிக்கட்டிகளை உருகாமல் பாதுகாக்க உதவியது.

முகலாயர்கள் ஆட்சியில் ஐஸ்கட்டிகள்

முகலாயர்கள் பனிக்கட்டிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். அப்தார்கள் என்று அழைக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள், அரச குடும்பத்திற்குகென பனிக்கட்டியைச் சேமித்து வைப்பதற்கும், பாதுகாப்பதற்கும், விநியோகிப்பதற்கும் பொறுப்பு வகித்தனர். பேரரசரின் குடிநீர் குளிர்ச்சியாக இருப்பதையும், சமையலறைகளுக்கும் சிறப்பு நிகழ்வுகளுக்கும் ஐஸ்க்கட்டி கிடைப்பதையும் உறுதி செய்வது அவர்களின் தலையாக கடமையாக இருந்தது.

தனித்துவமான பனிக்கட்டி சேமிப்பு

இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால், பனிக்கட்டி எப்போதும் தொலைதூர மலைகளிலிருந்து மட்டுமே கொண்டுவரப்படவில்லை என்பதுதான். வட இந்தியாவின் சில பகுதிகளில், கடும் குளிர்கால இரவுகளில், நீர் நிரப்பப்பட்ட ஆழமற்ற குழிகள் மற்றும் களிமண் பாத்திரங்கள் திறந்தவெளியில் வைக்கப்பட்டன. இந்த சூழலில் ஒரே இரவில் மெல்லிய பனிக்கட்டிப் படலம் உருவாகும். சூரிய உதயத்திற்கு முன்பாகவே இந்த பனிக்கட்டி அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டு, பிற்காலப் பயன்பாட்டிற்காகப் பாதுகாத்து வைக்கும் இடங்களுக்கு மாற்றப்பட்டது.

அந்தஸ்தின் அடையாளம்

முகலாய பேரரசர்கள் மற்றும் உயர்குடியினரைப் பொறுத்தவரை, ஐஸ்கட்டி என்பது வெறும் குளிர்ச்சியை மட்டும் தருவதல்ல, அது ஒரு அந்தஸ்தின் அடையாளமாகவும் திகழ்ந்தது. அரசவையில் குளிர்ந்த ரோஜா சர்பத், பழச்சாறு பானங்கள், குளிர்ச்சியான இனிப்பு வகைகள் மற்றும் குல்ஃபியின் ஆரம்பகால வடிவங்கள் கூட வழங்கப்பட்டன. கோடைக்காலத்தில் பேரரசர்கள் தங்கள் கீழ் ஆட்சிபுரிந்த பிரபுக்களுக்குப் பனிக்கட்டிகளை பரிசாகக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.

Story first published: Friday, June 5, 2026, 17:38 [IST]
Desktop Bottom Promotion