Happy New Year 2026: சுடுகாட்டு பார்ட்டி முதல் கலர்புல் உள்ளாடை வரை உலகின் வினோதமான புத்தாண்டு கொண்டாடங்கள்...

Happy New Year 2026: உலகம் முழுவதும் அனைத்து மக்களும் புத்தாண்டை மிகவும் ஆர்வத்துடன் எதிர்நோக்கி வருகின்றனர். புத்தாண்டை கொண்டாட உலகின் அனைத்து நாடுகளும் தயாராகி வருகின்றன. உலகிலுள்ள அனைத்து நாடுகளும் ஜனவரி 01 ஆம் தேதி புத்தாண்டைக் கொண்டாடினாலும் ஒவ்வொரு நாடும் வித்தியாசமான வழிகளில் புத்தாண்டைக் கொண்டாடுகிறது.

வெவ்வேறு கலாச்சாரங்களும் வெவ்வேறு நாடுகளும் புத்தாண்டை தங்களின் தனித்துவமான வழிகளில் கொண்டாடுகின்றன. சில நாட்டினர் புத்தாண்டு அன்று பாத்திரங்களை உடைப்பதில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள், சிலர் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் உள்ளாடைகளில் நம்பிக்கை கொண்டுள்ளனர். புத்தாண்டு வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், உலகெங்கிலும் மிகவும் வினோதமாக புத்தாண்டைக் கொண்டாடும் நாடுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Happy New Year 2026 Strange New Year s Eve Traditions from Around the World

அதிர்ஷ்டம் கொடுக்கும் 12 திராட்சைகள்

ஸ்பெயினில், புத்தாண்டு அன்று நள்ளிரவில் கடிகாரத்தின் ஒவ்வொரு மணி அடிக்கும்போதும் ஒரு திராட்சை என, மொத்தம் 12 திராட்சைகளைச் சாப்பிடுவது ஒரு பாரம்பரியமாகும். இது செழிப்பை உறுதி செய்வதற்காகச் செய்யப்படுகிறது. சரியான நேரத்திற்குள் அவற்றைச் சாப்பிட்டு முடித்தால், வரும் ஆண்டு முழுவதும் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. திராட்சைகளின் சுவை, இனிப்பாக இருந்தாலும் சரி, புளிப்பாக இருந்தாலும் சரி, அந்த ஆண்டு என்ன பலன்களைத் தரும் என்பதையும் முன்னறிவிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த பாரம்பரியம், 1909 ஆம் ஆண்டில் ஸ்பெயினின் ஒரு பகுதியில் திராட்சை விளைச்சல் அபரிமிதமாக இருந்தபோது தோன்றியதாகக் கூறப்படுகிறது.

தட்டுகளை உடைப்பது

டென்மார்க்கில் புத்தாண்டு பாரம்பரியத்தின்படி, வரவிருக்கும் ஆண்டில் தங்கள் அண்டை வீட்டாருக்கு அதிர்ஷ்டம் கிடைக்க, மக்கள் தட்டுகளையும் மண்பாண்டங்களையும் அவர்கள் வீட்டின் கதவுகளின் மீது உடைக்கிறார்கள். ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்படாத தட்டுகள் சேமித்து வைக்கப்பட்டு, டிசம்பர் 31 அன்று, அவை அனைத்தும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் முன் கதவுகள் மீது வீசி எறியப்படுகின்றன. உடைந்த மண்பாண்டங்களின் குவியல் எவ்வளவு பெரியதாக இருக்கிறதோ, வரும் ஆண்டில் அவ்வளவு அதிக நண்பர்களும் நல்ல அதிர்ஷ்டமும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

சோளக்கொல்லை பொம்மையை எரித்தல்

ஈக்வடார் மக்கள் புத்தாண்டன்று அரசியல்வாதிகள், பாப் நட்சத்திரங்கள் அல்லது பிற முக்கியப் பிரமுகர்களின் உருவங்களை, வைக்கோல் பொம்மைகளைப் போன்ற வடிவத்தில் உருவாக்குகிறார்கள் இவை 'ஆனோ வியெஹோ' என்று அழைக்கப்படுகின்றன. பழைய துணிகளுக்குள் செய்தித்தாள்களோ அல்லது மரத்தூளோ அடைக்கப்பட்டு, அதன் மேல் ஒரு முகமூடி பொருத்தப்படுகிறது. மேலும் புத்தாண்டு பாரம்பரியமாக, புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவில் இந்த உருவப் பொம்மைகளுக்குத் தீ வைக்கப்படுகிறது. இந்த பாரம்பரியம், கடந்த ஆண்டில் இருந்த துரதிர்ஷ்டங்களை விரட்டும் என்று நம்பப்படுகிறது.

வண்ணமயமான உள்ளாடைகளை அணிவது

மெக்சிகோ, பொலிவியா மற்றும் பிரேசில் போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில், வரவிருக்கும் ஆண்டிற்கான உங்களுடைய அதிர்ஷ்டம் உள்ளாடையின் நிறத்தால் தீர்மானிக்கப்படுகிறது. இது நம்புவதற்கு கடினமாக இருக்கலாம், ஆனால் அதுதான் உண்மை. சிவப்பு நிற உள்ளாடை அன்பைக் கொண்டுவரும் என்றும், மஞ்சள் நிறம் செல்வத்தைக் கொண்டுவரும் என்றும் ஒரு பாரம்பரிய நம்பிக்கை உள்ளது. நீங்கள் அமைதியையும் நல்லிணக்கத்தையும் தேடுகிறீர்கள் என்றால், வெள்ளை நிற உள்ளாடையை அணிய வேண்டும். எனவே, வரும் ஆண்டில் ஒருவர் வாழ்க்கையில் என்ன எதிர்பார்க்கிறாரோ அதற்கேற்ற உள்ளாடையை அணிய வேண்டும்.

மிஸ்டில்டோ மற்றும் ரொட்டி

அயர்லாந்தில் திருமணமாகாத பெண்கள் சில சமயங்களில் மிஸ்டில்டோ செடியை தங்கள் தலையணைகளின் கீழ் வைக்கிறார்கள். பின்னர், அந்த ஆண்டில் காதல் கைகூட வேண்டும் என்ற நம்பிக்கையில், அடுத்த நாள் அதை நெருப்பில் எரிக்கிறார்கள். இது கருருவுருதலுடன் தொடர்புடைய தாவரமாகும். மற்றொரு பாரம்பரியமாக, துரதிர்ஷ்டத்தையும் தீய ஆவிகளையும் விரட்டுவதற்காக சுவர்களிலும் கதவுகளிலும் ரொட்டியைத் தட்டி வீசுவது வழக்கத்தில் உள்ளது.

108 முறை மணி ஒலிப்பது

ஜப்பானில் புத்தாண்டு நள்ளிரவில் பௌத்தக் கோயில்களில் 108 மணிகள் ஒலிக்கப்படுவதன் மூலம் வரவேற்கப்படுகிறது. இது மனிதர்களிடம் உள்ள 108 தீய உணர்வுகளை அகற்றுவதற்காகச் செய்யப்படுகிறது. இந்த மணிகள் ஒலிப்பது முந்தைய ஆண்டின் பாவங்களிலிருந்து தங்களைச் சுத்தப்படுத்தும் என்று ஜப்பானியர்கள் நம்புகிறார்கள். ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31 அன்று107 முறையும், 108-வது முறையாகப் புத்தாண்டு பிறந்ததும் மணி ஒலிக்கப்படும் என்பதே மரபாகும்.

வட்டமான பொருட்கள்

பிலிப்பைன்ஸில், புத்தாண்டு என்பது முழுக்க முழுக்க பணத்தை அடிப்படையாகக் கொண்டது. வரவிருக்கும் ஆண்டில் செழிப்பையும் செல்வத்தையும் ஈர்க்கும் என்ற நம்பிக்கையில், பிலிப்பைன்ஸ் மக்கள் தங்களைச் சுற்றி வட்ட வடிவப் பொருட்களை வைத்துக்கொள்கிறார்கள். எனவே, அவர்கள் திராட்சை பழங்களைச் சாப்பிடுகிறார்கள், நாணயங்களை பாக்கெட்டுகளில் வைத்துக் கொள்கிறார்கள். புள்ளிகள் போட்ட ஆடைகளை அணிகிறார்கள்.

ஜன்னல் வழியாக பர்னிச்சர்களை எறிதல்

நேபிள்ஸ் போன்ற இத்தாலியின் சில பகுதிகளில், பழையவற்றுக்கு விடை கொடுப்பதே புத்தாண்டு கொண்டாட்டமாக உள்ளது. அங்கு புத்தாண்டு தினத்தன்று, வரவிருக்கும் ஆண்டிற்கான ஒரு புதிய தொடக்கத்தை அடையாளப்படுத்தும் விதமாக, பழைய, வேண்டாத பர்னிச்சர்களை பால்கனிகளில் இருந்து வெளியே எறிவது ஒரு பாரம்பரிய வழக்கமாக உள்ளது. காயங்களைத் தவிர்ப்பதற்காக, பெரும்பாலான உள்ளூர்வாசிகள் இந்த வழக்கத்திற்காக சிறிய மற்றும் மென்மையான பொருட்களை மட்டுமே எறிந்தாலும், புத்தாண்டு தினத்தன்று நேபிள்ஸ் தெருக்களில் நடக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.

முதலில் வீட்டிற்குள் நுழையும் சடங்கு

ஸ்காட்லாந்தின் மிகவும் பழமையான சடங்குகளில் ஒன்றான 'முதல் காலடி' சடங்கு குவால்டா என்றும் அழைக்கப்படுகிறது. புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவுக்குப் பிறகு வீட்டு வாசலைக் கடந்து உள்ளே வரும் முதல் நபர் பரிசுகளுடன் வர வேண்டும் என்பதே இந்த சடங்கின் விதி. அந்த வீட்டிற்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவதற்காக, பரிசுகளாக நாணயங்கள், நிலக்கரி, ரொட்டி, உப்பு மற்றும் ஒரு சிறிய அளவு விஸ்கி ஆகியவை இருக்கலாம். பாரம்பரியமாக, உயரமான, கருமையான முடி கொண்ட ஒரு ஆண் முதல் காலடி வைப்பவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

கல்லறைக்கு செல்லுதல்

மற்ற நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான நாளாக இருக்கும் போது சிலியில் இது இறந்தவர்களின் ஆன்மாக்களுடன் இணைவதற்கான நாளாக இருக்கிறது. புத்தாண்டு இரவில் குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளுக்குச் சென்று மெழுகுவர்த்திகளை ஏற்றி, பாரம்பரிய இசையைக் கேட்கிறார்கள். இதன் நோக்கம், இறந்த தங்கள் உறவினர்களுடன் ஒரு தொடர்பை உணர்வதும், அவர்களைத் தங்கள் கொண்டாட்டங்களில் இணைத்துக்கொள்வதுமாகும்.

Desktop Bottom Promotion