விநாயகர் சதுர்த்தி முதன் முதலில் எங்கிருந்து தொடங்கியது? அதன் பின்னிருக்கும் சொல்லப்படாத உண்மைகள்..!

Ganesh Chaturthi 2023: விநாயக சதுர்த்தி பற்றி நாம் நிறைய விஷயங்களை கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் உண்மையில் இந்த விநாயகர் சதுர்த்தி முதன் முதலில் எப்படி தோன்றியது என்பது உங்களுக்கு தெரியுமா. விநாயகர் சதுர்த்திக்கும் இயற்கைக்கும் என்ன சம்பந்தம் என்பது உங்களுக்கு தெரியுமா இப்படி ஏகப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இங்கே உள்ளன.

விநாயகரை நாம் ழுழு முதற்கடவுள் என்று அழைக்கிறோம். விநாயகர் நம் தடைகளை நீக்கக் கூடிய கடவுள் ஆவார். அதனால் தான் மக்கள் தங்கள் தொழிலை தொடங்கும் முன்பு விநாயகரை வழிபட்டு ஆரம்பிக்கின்றனர். அப்படிப்பட்ட விநாயகரை அந்தக் காலத்தில் எப்படி வழிபட்டு இருப்பார்கள், விநாயகர் சதுர்த்தி எப்படி தோன்றியிருக்கும் இவற்றை பற்றி தான் நாம் இக்கட்டுரையில் காணப் போகிறோம்.

Ganesh Chaturthi 2023: The Origins Of Ganesh Chaturthi Festival In Tamil

கணபதி என்ற பெயரின் உண்மையான அர்த்தம்:

கணா என்பதற்கு 'கூட்டு' என்று பொருள். அதாவது கணபதி என்பதற்கு மக்களை ஒன்றிணைப்பவர் என்று அர்த்தமாகும். அதனால் தான் கணபதி என்ற பெயரை உச்சரித்தாலே தனிநபர்களுக்குள்ளும் பிரபஞ்ச ஆற்றலுடனும் ஒற்றுமையை நம்மால் பார்க்க முடிகிறது. கணபதியை "ஞானத்தின் கடவுளாகவும் பார்க்கின்றனர்" அவரை "ஞானத்ரி" என்று அழைக்கின்றனர். இதற்கு அறிவையும் புரிதலையும் அளிப்பவர் என்று பொருளாகும்.

விநாயகர் சதுர்த்தி திருவிழா எப்படி தொடங்கியது?

விநாயகர் சதுர்த்தி திருவிழா ஆரம்பமான காலம் மக்கள் நதிகள் மற்றும் ஆறுகளின் பக்கம் வசித்த காலத்தில் தொடங்கியதாக கூறப்படுகிறது. நம் இந்திய காலண்டர் படி, ஜ்யஸ்தா மாதத்தின் இறுதியில், மிருகனக்ஷத்திரம் நட்சத்திரக் கூட்டத்தைப் பார்க்கும்போது, ​​​​மழையின் காலங்கள் ஆரம்பமாகிறது. இந்த மழைக்காலத்தில் தான் பெரும்பாலான திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. அதன்படி பார்த்தால் பாத்ரபத மாதத்தின் நான்காம் நாள் விநாயக சதுர்த்தி வருகிறது.

பழங்காலத்தில் எல்லாம் மக்கள் நதிகளில் நீராடி குளித்து வந்தனர். மழைக்காலத்தில் நீர் சுத்தமாகவும், அதே நேரத்தில் நிறையாவும் இருக்கும். ஆற்றில் நீர் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கும். அப்பொழுது ஆற்றுப் படுகையில் வண்டல் மண் படிந்திருக்கும். அந்தக் காலத்தில் இந்த வண்டல் மண்ணை மக்கள் எடுத்து அதை விநாயகர் சிலை போல் உருவாக்கி வணங்கி வந்துள்ளனர்.

பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களும் நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் போன்ற ஐந்து பூதங்களின் ஆதிக்கம் பெற்றவை. இந்த ஐம்பூதங்களையும் வழிபடவே திருவிழாக்கள் கண்டறியப்பட்டன. இந்த திருவிழாக்கள் மக்களை ஒன்றிணைத்து அவர்களின் ஒற்றுமையை அங்கீகரித்து வருகிறது. இது தான் விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் ஆரம்பமாகும்.

விநாயகரை உண்மையாக எப்படி வழிபட வேண்டும்?

உங்கள் வீட்டிற்கு கணபதி வந்தால் மகிழ்ச்சி மற்றும் உற்சாகம் இவற்றிற்கு பஞ்சமே இருக்காது. அவரை உங்கள் வீட்டிற்கு வரவேற்பது அவ்வளவு கஷ்டமான காரியம் எல்லாம் கிடையாது. உங்கள் அன்புடனும், உண்மையான பக்தி உணர்வுடனும் நீங்கள் வரவேற்றாலே அவர் ஓடோடி வந்து விடுவார்.

எனவே விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை உங்கள் வீட்டில் உள்ள ஒரு நபராக பாருங்கள். அது தான் அவருக்கு பிடிக்கும். அவரும் உங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து வழிபடுங்கள். நன்மைகள் பெருகும். கவலைகள் இல்லாமல் போகும்.

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும்?

விநாயகர் சதுர்த்தி நன்னாளில் அவருக்கு படைக்கப்படும் பொருட்களில் மஞ்சள் தூள், சந்தன பேஸ்ட், குங்குமம் மற்றும் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் தானியங்கள் போன்றவற்றை படைக்க வேண்டும். இந்த பொருட்கள் ஒவ்வொன்றும் இயற்கையில் இருந்து பெறப்பட்டது மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்தது.

மஞ்சள் தூள் ஒரு கிருமி நாசினியாக செயல்படுகிறது, குங்குமம் மற்றும் சந்தனம் உங்கள் உடலுக்கு குளிர்ச்சியை தரக் கூடியது, தானியங்கள் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை தரக் கூடியது. எனவே இயற்கை அன்னை கொடுத்த பிரசாதங்களை வழங்கி அவரை வணங்குகிறோம்.

அருகம்புல் மற்றும் மோதகம் ஏன் முக்கியம்?

கணேஷ பூஜையில் மிகவும் முக்கியமான பொருள் அருகம்புல். அருகம்புல்லுக்கும் விநாயகருக்கும் நிறைய சம்பந்தம் உள்ளது. காரணம் அருகம்புல் நினைவாற்றலை அதிகரிக்க கூடிய ஒரு மூலிகையாகும். நினைவாற்றல் அதிகரித்தால் தானாகவே அறிவு புலப்படும். அதனால் தான் விநாயகரை 'அறிவுக்கு அதிபதி' என்று அழைக்கிறோம். அதனால் தான் விநாயகருக்கு அருகம்புல் என்றால் மிகவும் பிடிக்குமாம்.

விநாயகருக்கு தேங்காய், வெல்லம் மற்றும் அரிசி மாவால் செய்யப்படும் மோதகம் என்றால் மிகவும் பிடிக்கும். இந்த இனிப்பு பண்டம் நிறைய சத்துக்கள் நிறைந்தது. ஆரோக்கியமான உணவும் கூட. இப்படி பல ஆரோக்கியமான உணவுப் பொருட்களை விநாயகப் பெருமானுக்கு படைத்து அதை நாமும் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழவே நம் முன்னோர்கள் இத்தகைய வழிபாட்டு முறைகளை கடைபிடித்து வந்துள்ளனர்.

மஞ்சள் பிள்ளையார்

இன்றைய காலங்களில் விநாயகர் சதுர்த்தி அன்று வானுயர சிலைகளை வடிவமைத்து வழிபடுகின்றனர். அதே நேரத்தில் சுற்றுப்புறச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் உண்மையில் விநாயகர் சிலை உங்கள் உள்ளங்கைகளில் வைத்து தூக்கி செல்லும் அளவிற்கு இருத்தல் வேண்டும்.

அந்த சிலையை அலங்கரிக்க வண்ணமயமான பெயிண்ட்களை பயன்படுத்தாமல் மஞ்சள் மற்றும் குங்குமம் கொண்டு அலங்கரிக்க வேண்டும். இயற்கையில் கிடைக்கும் பல வண்ணமயமான பூக்களைக் கொண்டு அவருக்கு அர்ச்சிக்க வேண்டும். பிள்ளையாரை உங்கள் அன்பாலும் பக்தியாலும் அலங்கரிப்பதே சிறந்தது.

சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் எதையும் விநாயகர் விரும்புவதில்லை. ஏனெனில் இந்த பிரபஞ்சம் இயற்கையால் ஆனது. நீங்கள் எந்தளவுக்கு விநாயகர் மேல் அன்பு செலுத்துகிறீர்களோ அந்தளவுக்கு பன்மடங்கு அன்பை அவர் திருப்பித் தருவார்.

Story first published: Sunday, September 17, 2023, 13:55 [IST]
Desktop Bottom Promotion