புத்திசாலி பேய்

By Mayura Akilan

ஒருவனின் மனைவி மிகவும் உடல் நிலை சரியில்லாமல் படுக்கையில் இருக்கிறாள். சாகும் தருவாயில் அவள் அவனிடம், "நான் உன்னை உயிருக்குயிராக நேசிக்கிறேன்,அதனால் உன்னை விட்டுப் பிரிய எனக்கு விருப்பமே இல்லை. நான் இறந்தபின், நீ யாரையும் கல்யாணம் செய்துக்கொள்ள மாட்டேன் என்று எனக்கு ஒரு சத்தியம் செய்துக் கொடு. அப்படி மீறி நீ யாரையாவது கல்யாணம் செய்துகொண்டால், தினமும் நான் உன் கனவில் வந்து உன்னை தொந்தரவு செய்துகொண்டே இருப்பேன்", என்று சொல்லிவிட்டு இறந்து விடுகிறாள்.

அவள் இறந்து பல மாதங்களாகியும், அவன் எந்தவொரு பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காமல் இருக்கிறான். ஆனால், திடீரென்று ஒரு பெண்ணைப் பார்த்து காதல்வயப்படுகிறான். காதலும் நிச்சயதார்த்தம் வரைச் செல்கிறது. ஆனால் , அன்று இரவு திடீரென்று இறந்துபோன அவன் மனைவி பேயாக வருகிறாள். அவன் தான் செய்து கொடுத்த சத்தியத்தை மீறியதாக குற்றம் சாட்டுகிறாள்.

அன்று முதல் ஒவ்வொரு இரவிலும் பேயாக வந்து அவனை இம்சிக்கிறாள். அதுமட்டுமல்லாமல், அவனுடைய காதலியும் அவனும் பேசிகொண்டதை, ஒரு வார்த்தைகூட விடாமல் அப்படியே ஒப்பிக்கிறாள். இதனால், ஓவ்வொரு இரவிலும் அவன் தூங்கமுடியாமல் தவிக்கிறான்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவன் ஒரு நாள், இந்த பேய்க்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டுமென்று அந்த ஊரில் உள்ள ஒரு ஜென் துறவியிடம் சென்று தன் கஷ்டத்தைச் சொல்லி அறிவுரை கேட்கிறான்.

கதையைக்கேட்ட ஜென் துறவி, "இந்தப் பேய் மிகவும் புத்திசாலியான பேய்தான்" என்கிறார்.

ஆமாம் என்று சொல்லிய அவன், நான் சொல்கிற, செய்கிற அனைத்தையும் எப்படியோ தெரிந்து கொள்கிறது அந்தப் பேய் என்கிறான்.

அத்துறவியோ புன்னகைத்தபடி, "அப்படிப்பட்ட ஒரு பேயைக் கண்டு நீ பெருமைப்பட வேண்டும்" என்கிறார். பின்னர் அவரே, சரி அடுத்தமுறை அந்தப் பேயைப் பார்க்கும்போது நான் சொல்கிறபடி செய் என்று சொல்லி அவனை அனுப்பி வைக்கிறார்!

அன்று இரவு திரும்பவும் அந்தப் பேய் வருகிறது. அவனும் அதன் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தவனாய், "உன்னைப் போல் ஒரு புத்திசாலியான ஒரு பேயை நான் இதுவரைப் பார்த்ததேயில்லை, அதுமட்டுமில்லாமல் உன்னிடமிருந்து என்னால் எதையுமே மறைக்க முடியவில்லை. ஆனால், நான் கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் நீ விடை சோல்லிவிட்டால், நான் இந்த திருமணத்தையே நிறுத்திவிடுகிறேன், அதன் பின்னர் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாகவே இருந்துவிடுகிறேன்" என்கிறான்.

சரி, என்ன உன் கேள்வி? என்கிறது பேய். உடனே அவன் ஒரு பையிலிருந்து கடலையை கை நிறைய அள்ளி, " என் கையில் எத்தனை கடலை மணிகள் இருக்கிறது என்று சரியாகச் சொல் பார்க்கலாம்" என்கிறான்.

அவ்வளவுதான், அந்தக் கேள்வியைக் கேட்டு தலைதெறிக்க ஓடிய பேய், அதன் பின்னர் அவன் வாழ்க்கையில் திரும்ப வரவே இல்லை!

கருத்து: பேய் என்பது வெளியில் இல்லை. நம் மனம்தான் அதை நினைத்து அச்சப்படுகிறது.

Story first published: Friday, June 8, 2012, 9:12 [IST]
Desktop Bottom Promotion