World Liver Day 2023: கல்லீரலில் உள்ள அழுக்கை வெளியேற்ற குடிக்க வேண்டிய பானங்கள்!

World Liver Day 2023: மனித உடலில் உள்ள மிக முக்கியமான மற்றும் பெரிய உறுப்பு தான் கல்லீரல். இது வயிற்றின் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. இந்த கல்லீரலை நம்மால் உணர முடியாது. ஏனெனில் இது விலா எலும்பு கூட்டிற்குள் பாதுகாப்பாக அமைந்துள்ளது. கல்லீரல் நமது உடலில் 500-க்கும் அதிகமான முக்கிய பணிகளை செய்கிறது.

அதில் செரிமான மண்டலத்தில் இருந்து வரும் இரத்தத்தை வடிகட்டி, உடலின் பிற பகுதிகளுக்கு அனுப்புவது, வளர்சிதை மாற்றம், நோயெதிர்ப்பு சக்தி, செரிமானம், நச்சு நீக்கம், வைட்டமின் சேமிப்பு ஆகியவற்றை ஆதரிப்பது, பித்த நீரை சுரப்பது போன்றவை அடங்கும். இது தவிர கல்லீரல் இரத்த உறைதலுக்கு மற்றும் பிற செயல்பாட்டிற்கு தேவையான புரோட்டீனை கல்லீரல் உருவாக்குகிறது.

World Liver Day 2023: Drinks To Clean Your Liver Naturally In Tamil

கல்லீரலில் பிரச்சனை ஏற்பட்டால், அது செரிமான மண்டலத்தை பாதிப்பதோடு, சிறுநீரகம், நுரையீரல், இதயம் மற்றும் மூளை ஆகியவற்றின் செயல்பாட்டையும் பாதிக்கும். எனவே கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயல வேண்டும். நச்சு நீக்கம் முதல் பல பணிகளை கல்லீரல் செய்வதால், கல்லீரலில் அழுக்குகள் சேர்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 19 ஆம் தேதி உலக கல்லீரல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் கல்லீரல் தொடர்பான நோய்கள் மற்றும் கோளாறுகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த பல்வேறு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும். இன்று உலக கல்லீரல் தினம் என்பதால், கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும் சில பானங்கள் குறித்து காண்போம். அந்த பானங்களை தினசரி குடித்து வந்தால், கல்லீரலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம்.

1. இஞ்சி மற்றும் எலுமிச்சை பானம்

இஞ்சி மற்றும் எலுமிச்சை பானத்தில் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதைத் தவிர, உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் இந்த பானம் வயிற்று உப்புசத்தில் இருந்து விடுவிக்கிறது, மெட்டபாலிசத்தை மேம்படுத்துகிறது மற்றும் உடலில் எவ்வித பிரச்சனையும் வராமல் தடுக்கிறது.

எனவே உங்கள் கல்லீரல் சுத்தமாக இருக்க நினைத்தால், தினமும் ஒரு கப் இஞ்சி, எலுமிச்சை பானத்தைக் குடியுங்கள். அதற்கு ஒரு டம்ளர் கொதிக்கும் நீரில், பாதி எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து, அத்துடன் ஒரு துண்டு இஞ்சியைத் துருவிப் போட்டு, 15 நிமிடம் மூடி வைத்து, பின் அதை வடிகட்டி, இரவு தூங்கும் முன் குடிக்க வேண்டும்.

2. மஞ்சள் நீர்

ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக மஞ்சள் ஒரு சக்தி வாய்ந்த மருத்துவ பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உடலில் இருந்து, குறிப்பாக கல்லீரலில் இருந்து அழுக்குக்களை வெளியேற்ற ஒரு சிறந்த வழி என்றால், அது மஞ்சள் நீரைக் குடிப்பது தான். அதுவும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் நீரில் மஞ்சள் தூளைக் கலந்து குடிக்க வேண்டும்.

3. க்ரீன் டீ

க்ரீன் டீ மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு அற்புத பானம். பெரும்பாலும் க்ரீன் டீயை உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தான் அதிகம் குடிப்பார்கள். ஏனெனில் க்ரீன் டீ உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் கரைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. இது தவிர க்ரீன் டீ ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.

4. புதினா டீ

புதினாவில் அத்தியாவசிய எண்ணெய்களான மெந்தால் மற்றும் மெந்தோன போன்றவை உள்ளன. இவை நச்சுக்களை நீக்கும் செயல்முறையை சிறப்பாக செய்ய உதவுவதோடு, செரிமானத்தையும் ஆதரிக்கிறது. அதற்கு ஒரு டம்ளர் கொதிக்கும் நீரில், சிறிது புதினா இலைகளைப் போட்டு 10 நிமிடம் ஊற வைத்து, இரவு தூங்கும் முன் குடிக்க வேண்டும்.

5. வெந்தய நீர்

வெந்தய நீரை தினமும் குடித்து வந்தால், அது உடல் எடையைக் குறைப்பதோடு, செரிமான மண்டலத்தை வலுபடுத்தும். மேலும் இதில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், அது சீரான குடலியக்கத்திற்கு உதவுகிறது. அதுவும் இந்த வெந்தய நீரை இரவு தூங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் குடிக்க வேண்டும். இதனால் அது இரவு நேரத்தில் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவும். அதற்கு ஒரு டம்ளர் கொதிக்கும் நீரில் சிறிது வெந்தய பொடியை சேர்த்து கலந்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் அதை வடிகட்டி குடிக்க வேண்டும்.

6. சீமைச்சாமந்தி டீ

சீமைச்சாமந்தி டீ சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளைக் கொண்டுள்ளது மற்றும் இதில் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் மற்றும் நல்ல தூக்கத்தைப் பெற உதவும் செடேட்டிவ் பண்புகள் உள்ளன. மேலும் இது வீக்கமடைந்துள்ள திசுக்களை அமைதிப்படுத்தி நரம்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. அதற்கு ஒரு டம்ளர் கொதிக்கும் நீரில் 1 டேபிள் ஸ்பூன் சீமைச்சாமந்தி பூக்களைப் போட்டு, 10 நிமிடம் ஊற வைத்து, பின் அந்நீரைக் குடிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை குடித்து வந்தால், நல்ல பலன்கள் கிடைக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion