மாரடைப்பு ஏற்படும் போது உடலில் என்ன நடக்கிறது என்று தெரியுமா?

What Happens During a Heart Attack: உலகளவில் மாரடைப்பால் தினந்தோறும் ஏராளமானோர் இறந்து வருகிறார்கள். சொல்லப்போனால் உலகில் பெரும்பாலான மக்களின் இறப்புக்கு முதன்மையான காரணமாக மாரடைப்பு உள்ளது என்றே கூறலாம். ஏன் கடந்த சில ஆண்டுகளாக ஏராளமான திரைப் பிரபலங்களின் மரணத்திற்கு இந்த மாரடைப்பு தான் காரணம்.

இப்படிப்பட்ட மாரடைப்பு என்பது ஒரு தீவிரமான மருத்துவ நிலை ஆகும். இது ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். ஒருவரது இதயத்திற்கு எப்போது இரத்த ஓட்டம் தடைபடுகிறதோ, அப்போது இது ஏற்படுகிறது. இதயத் தசைகளுக்கு இரத்த ஓட்டம் தடைபடும் போது, இதயத்தில் உள்ள செல்கள் சேதமடைகின்றன அல்லது இறக்கின்றன. உண்மையில் மாரடைப்பு என்றால் என்ன, மாரடைப்பின் போது என்ன நடக்கிறது என்பதை இப்போது காண்போம்.

What Happens During a Heart Attack In Tamil

மாரடைப்பு என்றால் என்ன?

ஹார்ட் அட்டாக் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மாரடைப்பு இதய தசைகளுக்கு இரத்த ஓட்டம் குறையும் போது அல்லது தடைபடும் போது ஏற்படுகிறது. இது பொதுவாக இரத்த உறைவினால் இதயத்திற்கு இரத்த ஓட்டம் கடுமையாக தடைபடுவதனால் உண்டாக்கிறது. நமது இரத்தம் தான் உடல் செல்களின் செயல்பாட்டிற்கு தேவையான ஆக்ஸிஜனை சுமந்து செல்கிறது. இப்படிப்பட்ட ஆக்ஸிஜன் இதய தசைகளுக்கு கிடைக்காமல் போகும் போது, இரத்த ஓட்டம் இல்லாத இதய தசையின் பகுதி சேதமடைகிறது அல்லது இறக்கத் தொடங்குகிறது.

மாரடைப்பின் அறிகுறிகள் என்ன?

ஒவ்வொருவரும் மாரடைப்பின் அறிகுறிகளை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இப்படி தெரிந்து வைத்திருப்பதன் மூலம் உடனடி மருத்துவ சிகிச்சையைப் பெற்று மரணம் ஏற்படுவதைத் தடுக்கலாம். மாரடைப்பின் சில பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

* நெஞ்சு வலி அல்லது அசௌகரியம் - நெஞ்சுப் பகுதியில் அடிக்கடி அழுத்தம், இறுக்கம் அல்லது ஒருவித அசௌகரியத்தை தொடர்ந்து ஏற்படுத்தும். அதுவும் இப்படியான உணர்வு அடிக்கடி வந்து போகலாம் அல்லது சில நிமிடங்கள் நீடித்திருக்கலாம்.

* மூச்சுத்திணறல் - சுவாசிப்பதில் சிரமம் அல்லது மூச்சுவிட முடியாமல் அவதிப்படுவதும் மாரடைப்பின் ஒரு பொதுவான அறிகுறியாகும்.

* மேல் உடலின் மற்ற பகுதிகளில் வலி - நெஞ்சு பகுதியுடன், கைகள், முதுகு, கழுத்து, தாடை அல்லது வயிறு போன்ற பகுதிகளிலும் வலியை சந்தித்தால், அதுவும் மாரடைப்பின் அறிகுறியாகும்.

* குமட்டல், தலைச்சுற்றல், அதிக வியர்வை - திடீரென்று நெஞ்சு வலியுடன் காரணமின்றி குமட்டல், தலைச்சுற்றல் மற்றும் அதிக வியர்வையையும் சந்தித்தால், அது மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறியாகும்.

மாரடைப்பு ஏற்படும் போது உடலில் என்ன நடக்கிறது?

* மாரடைப்பானது இரத்த குழாய்களில் உள்ள அடைப்பினால் இதய தசைகளுக்கு இரத்த ஓட்டம் தடைபடுவதால் ஏற்படுகிறது. இந்த அடைப்பு இதயத்தின் தமனிச் சுவர்களில் ப்ளேக்குகள் என்னும் கொழுப்புக்கள், கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த வெள்ளையணுக்களின் தேக்கத்தால் ஏற்படுகிறது.

* இந்த ப்ளேக்குகள் சீர்குலைந்தால், அது பல சிறிய துண்டுகளாக உடைக்கப்பட்டு, பின் அது உடலின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தங்கிவிடும்.

* இந்நிலையில் இரத்தக்குழாய்களை ஏதோ ஒன்று தாக்க வருவதாக நினைத்து, இரத்த சிவப்பணுக்கள் மற்றும் வெள்ளைணுக்கள் அந்த ப்ளேக்குகளுடன் தங்களை இணைத்துக் கொள்கின்றன. இச்செயல் இரத்தக்குழாயை சரிசெய்யும் ஒரு செயல்முறையாக இருந்தாலும், இந்த ஒருகட்டத்தில் இரத்தக்குழாய்களில் தங்கி அடைப்பை ஏற்படுத்தக்கூடும்.

* இதயத்திற்கு இரத்த ஓட்டம் தடைபட்டால், இதயத் தசைகளின் பிற பகுதிகளுக்கு இரத்தம் செல்ல முடியாமல் போகும். இப்படி இதய தசைகளுக்கு இரத்தம் செல்வது தடுக்கப்பட்டு, ஆக்ஸிஜன் கிடைக்காமல் போனால் இதய தசை இறக்கத் தொடங்கும்.

* அதன் பின் உடலானது இதயம் சரியாக செயல்படுவதில்லை என்று உணர்ந்து, உடலானது சண்டை மோடிற்கு சென்று விடுகிறது. இந்நிலையில் உடல் இதயம் பிரச்சனையில் உள்ளது என்று தண்டுவடத்திற்கு சிக்னலை அனுப்புகிறது.

* பின் தண்டுவடம் மூளைக்கு தாடை, இடது கை மற்றும் மார்பில் வலி என்ற ஒரு செய்தியை அனுப்புகிறது. அப்போது தான் மாரடைப்பின் ஆரம்பகால அறிகுறிகளை நாம் சந்திக்கிறோம்.

* இந்த சூழ்நிலையில் உடல் உயிர்வாழும் முயற்சியில் அதிகமாக வியர்க்க தொடங்குகிறது. இப்படி வியர்க்கும் போது உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். இந்நிலையில் கொண்டு சென்றால் உயிரைக் காப்பாற்றலாம்.

* அதோடு இந்நிலையில் இதயத்தால் நுரையீரலுக்கு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜனை அனுப்ப முடியாது என்பதால் சுவாச பிரச்சனையை சந்திக்கிறோம்.

* நுரையீரல் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, மூளைக்கும் இரத்தம் செல்லாமல் மூளையும் பாதிக்கப்பட்டு, தலைச்சுற்றலை உண்டாக்குகிறது. இப்படி ஒவ்வொரு உறுப்புகளுக்கும் இரத்த ஓட்டம் குறையத் தொடங்கும் போது, உடலின் ஒவ்வொரு உறுப்புக்களின் செயல்பாடும் பாதிக்கப்பட்டு, வரிசையாக பிற அறிகுறிகளை சந்திக்க நேரிடுகிறது.

* இதயத் தசைகளுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போனால், இதயத் தசைகள் இறக்கத் தொடங்கிவிடும். இதய தசைகளின் ஏதாவது ஒரு பகுதி இறந்துவிட்டாலும், அதை மீண்டும் சரிசெய்வது என்பது முடியாது.

எனவே தான் மாரடைப்பு ஏற்பட்டால், தாமதிக்காமல் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று விட வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நேரமும் இதய தசைகள் இறக்கத் தொடங்கி, பின் மரணத்தை தான் சந்திக்க வேண்டியிருக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Wednesday, July 10, 2024, 12:40 [IST]
Desktop Bottom Promotion