இந்தியாவில் முதன்முதலாக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான இலவச தடுப்பூசியை வழங்கும் தமிழ்நாடு!

Free Cervical Cancer Vaccine: உலகளவில் பெண்களை தாக்கக்கூடிய புற்றுநோய்களில் நான்காவது பொதுவான புற்றுநோய் தான் கர்ப்பப்பை வாய் புற்றுநோய். இந்த புற்றுநோயால் 2022 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 660000 புதிய வழக்குகள் பதிவானதோடு, சுமார் 350000 இறப்புகளும் பதிவாகின.

இப்படி பாதிக்கு பாதி இறப்புக்களை ஏற்படுத்திய கொடிய கர்ப்பப்பை வாய் புற்றுநோயானது நடுத்தர வருமான நாடுகளில் அதிகமாக உள்ளன. இந்த புற்றுநோயை தடுப்பதற்கான தீவிர முயற்சியாக 1-14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு இலவச கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசியை வழங்கும் முதல் இந்திய மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது.

Tamil Nadu Becomes India s First State to Provide Free Cervical Cancer Vaccine

இந்தியாவில் பெண்களிடையே மிகவும் பொதுவாக காணப்படும் இந்த மனித பாப்பிலோமா வைரஸால் ஏற்படக்கூடிய கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க மாநில அரசு சுமார் ரூ.38 கோடியை ஒதுக்கியுள்ளது. மேலும் இலவச கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி வழங்கும் திட்டத்தையும் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

மாநில சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள பெண்களை உள்ளடக்கிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் தடுப்பூசி இயக்கங்களும் அடங்கும்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்றால் என்ன?

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மிகவும் ஆபத்தான வகையை சேர்ந்த வைரஸ்களுள் ஒன்றான HPV என்னும் மனித பாப்பிலோமா வைரஸ் மூலம் ஏற்படுகிறது. இந்த வைரஸ் 200-க்கும் அதிகமான வைரஸ்களுடன் தொடர்புடைய வைரஸ் குழுவாகும். இந்த வகை வைரஸ்கள் ஒருவரை தாக்கினால் அது பிறப்புறுப்பு மருக்கள் மற்றும் கர்ப்பப்பை வாய், ஆசனவாய் மற்றும் ஓரோபார்னீஜியல் புற்றுநோய்கள் உள்ளிட்ட பிற புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.

பொதுவாக HPV பாலியல் ரீதியாக பரவக்கூடிய வைரஸ் தொற்று என்பதால், ஆரம்பத்திலேயே தடுப்பூசி போட்டுக் கொள்வதே, அந்த வைரஸ் தொற்றை தடுக்க சிறந்த வழியாகும். இந்திய புற்றுநோய் சங்கத்தின் கூற்றுப்படி, கர்ப்பப்பை வாய் புற்றுநோயானது பொதுவாக மெதுவாக உருவாகிறது. ஆரம்பத்தில் கர்ப்பப்பை வாயில் உள்ள திசுக்களில் அசாதாரண செல்கள் வளரத் தொடங்கும். பின் அந்த செல்கள் புற்றுநோய் செல்களாக வளர்ந்து, கர்ப்பப்பை வாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவத் தொடங்கும்.

கர்ப்பப்பை வாய் எதனால் ஒருவருக்கு வரலாம்?

இந்திய புற்றுநோய் சங்கத்தின் படி, கர்ப்பப்பை வாய் புற்றுநோயானது பின்வரும் காரணிகளால் ஒருவருக்கு வரலாம். அவையாவன:

* மனித பாப்பிலோமா வைரஸ் தொற்று (HPV)
* இளம் வயதில் பாலியல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது
* பலருடன் பாலுறவு கொள்வது
* பிறப்புறுப்பு சுகாதாரத்தை கடைப்பிடிக்காதது
* புகைப்பிடிப்பது
* பலமுறை கருத்தரிப்பது
* பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி
* ஊட்டச்சத்து குறைபாடுங
* வாய்வழி கருத்தடை மாத்திரைகளை அதிகமாக எடுப்பது

கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறிகள்

இந்திய புற்றுநோய் சங்கத்தின் கூற்றுப்படி, கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் பொதுவாக எந்த அறிகுறிகளும் தெரியாது. இந்த வகை புற்றுநோய் மேம்பட்ட நிலையை அடைந்த பின்னரே அறிகுறிகளை வெளிக்காட்டும். இருப்பினும் இந்த புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் பின்வரும் அறிகுறிகளை சந்திக்கலாம். அந்த அறிகுறிகளாவன:

* ஒழுங்கற்ற மாதவிடாய்
* உடலுறவுக்கு பின் இரத்தப்போக்கு
* மாதவிடாய் நின்ற பின் இரத்தப்போக்கு
* உடலுறவின் போது கடுமையான வலி
* கால், முதுகு, இடுப்பு பகுதிகளில் விவரிக்க முடியாத தொடர்ச்சியான வலி
* மிகுந்த உடல் சோர்வு
* எடை இழப்பு
* கால்களில் வீக்கம்

இந்தியாவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் எவ்வளவு பொதுவானது?

இந்தியாவில் பெண்களை தாக்கக்கூடிய இரண்டாவது புற்றுநோய் என்றால், அது இந்த கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தான். சமீபத்திய தரவுகளின் படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,32,000 புதிய வழக்குகள் பதிவாகிறது மற்றும் சுமார் 77,000 பேர் மரணத்தை சந்திக்கிறார்கள். தீம் அறிவியல் மற்றும் மருத்துவ இதழ் வெளியிட்ட ஆய்வின் படி, இந்தியாவில் மட்டும் பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் 2.5% ஒட்டுமொத்த வாழ்நாள் ஆபத்தையும் 1.4% ஒட்டுமொத்த இறப்பு அபாயத்தையும் எதிர்கொள்கின்றனர். இதைப் பார்க்கும் போது கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் எவ்வளவு அவசியம் என்பது புரிகிறது.

பாராட்டுக்குரிய தமிழ்நாடு அரசின் முயற்சி

தமிழ்நாடு அரசு பெண்கள் சந்திக்கும் இந்த வகை புற்றுநோயைத் தடுக்க 1-14 வயது வரையிலான சிறுமிகளுக்கான HPV தடுப்பூசிக்கு நிதியளிக்க முடிவு செய்திருப்பது, இந்த புற்றுநோயின் அபாயத்தைக் கணிசமாகக் குறைத்து, இறுதியில் இறப்பு எண்ணிக்கையைக் குறைப்பதற்காகத் தான்.

இதற்காக தமிழ்நாடு அரசு தனது ஒட்டுமொத்த சுகாதார பட்ஜெட்டை ரூ. 21,906 கோடியாக உயர்த்தியுள்ளது. இதில் ரூ. 110 கோடி மட்டும் புற்றுநோயை ஆரம்பகால கண்டறிதல் முறைகளில் பணியாற்ற அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இப்படியான தமிழ்நாடு அரசின் முக்கிய நடவடிக்கைக்கு காரணம் 2030 ஆம் ஆண்டுக்குள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஒழிக்க வேண்டும் என்ற உலக சுகாதார அமைப்பின் (WHO) உலகளாவிய இலக்கை நிறைவேற்ற வேண்டும் என்பதே ஆகும்.

HPV தடுப்பூசி

HPV தடுப்பூசியானது உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்றாகும். இந்த தடுப்பூசியை புற்றுநோய் வந்த பின் போடக்கூடியது அல்ல. மாறாக இது தொற்று ஏற்படுவதற்கு முன் போட வேண்டியது. HPV தொற்று ஏற்படுவதற்கு முன்பு புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதில் மட்டுமே இது பயனுள்ளதாக இருக்கும். எனவே தான் இந்த தடுப்பூசியை 1-14 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகளுக்கு தமிழ்நாடு அரசு இலவசமாக அளிக்கிறது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Thursday, October 30, 2025, 11:48 [IST]
Desktop Bottom Promotion