காங்கோவில் 48 மணிநேரத்தில் 50 பேரின் உயிரைப் பறித்த மர்ம நோய்: இது எப்படி பரவத் தொடங்கியது தெரியுமா?

Mysterious Disease In Congo: தற்போது தான் கொரோனா பெருந்தொற்றின் பிடியில் இருந்து முழுமையாக மீண்டு வந்துள்ளோம். இனி இதுப்போன்ற கொடிய தொற்றுநோய் பரவக்கூடாது என்று ஒவ்வொருவரும் நினைக்கும் வேளையில், காங்கோவில் ஒரு மர்மமான நோய் பரவி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளிவந்தது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக உலக சுகாதார அமைப்பு, காங்கோவில் ஒரு மர்மமான நோய் வேகமாக பரவி 50-க்கும் அதிமானோரின் உயிரைப் பறித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதுவும் இந்த மர்மமான நோய் ஒருவரை தாக்கி அறிகுறிகள் தெரிய தொடங்கிய 48 மணிநேரத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது தான் மிகவும் கவலையளிக்கும் விதத்தில் உள்ளதாக பிகோரோ மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் செர்ஜ் நாகலேபடோ ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

Mysterious Disease Kills Over 50 People in Congo Within Hours Between Symptoms and Death

காங்கோ ஜனநாயக குடியரசில் ஜனவரி 21 ஆம் தேதி ஒரு மர்ம நோய் பரவத் தொடங்கியது. இந்த நோய் பரவியது முதல் இன்று வரை சுமார் 53 பேர் உயிரிழந்தோடு, 419-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காங்கோவில் பரவும் இந்த மர்ம நோய் எப்படி மனிதர்களைத் தாக்கியது மற்றும் இது எப்படியான அறிகுறிகளை வெளிக்காட்டியது என்பதை இப்போது காண்போம்.

மர்ம நோய் எப்படி பரவியது?

உலக சுகாதார அமைப்பின் ஆப்பிரிக்க அலுவலகத்தின் படி, போலோகோவில் உள்ள 3 குழந்தைகள் வௌவால் இறைச்சியை சாப்பிட்ட பின் இந்த மர்ம நோய் வந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த இறைச்சியை சாப்பிட்ட 3 குழந்தைகளும் இரத்தக்கசிவு காய்ச்சலின் அறிகுறிகளுடன் 48 மணிநேரத்திற்குள் இறந்துள்ளனர். அதுவும் இந்த இரத்தக்கசிவு உடலினுள் மிகவும் கடுமையாக இருந்தது மற்றும் உறுப்புக்களும் செயலிழக்கத் தொடங்கியுள்ளன. இப்படி நோய்த்தொற்று ஏற்பட்ட குறுகிய நேரத்தில் இறப்பு ஏற்படுவதால், அது சுகாதார நிபுணர்களை குழப்பத்திலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் ஆப்பிரிக்க அலுவலகமானது வௌவால் இறைச்சிக்கும், இந்த மர்ம நோயின் பரவலுக்கும் இடையிலான தொடர்பை உறுதிபடுத்தி, காங்கோவில் மர்ம நோய் வழக்குகளின் அதிகரிப்புக்கு இதுதான் காரணம் என உறுதி செய்தது.

மனிதர்களை தாக்கும் பல கொடிய நோய்கள் பெரும்பாலும் விலங்குகளிடம் இருந்து தான் பரவுகின்றன. அதுவும் ஆப்பிரிக்க பகுதிகளில் காட்டு விலங்குகுள், வௌவால் இறைச்சிகளை மக்கள் அதிகம் உட்கொள்வதால், இந்த பகுதிகளில் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு கடுமையான வைரஸ்கள் பரவி உயிரிழப்பை ஏற்படுத்துகின்றன. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ஆப்பிரிக்காவில் இத்தகைய வெடிப்புகளின் எண்ணிக்கை 60 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

மேலும் இந்த மாத தொடக்கத்தில் போமேட் நகரில் குறைந்தது 13 நோயாளிகளின் இரத்த மாதிரிகள் காங்கோவின் தலைநகரான கின்ஷாசாவில் உள்ள தேசிய உயிரி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதில் சிலருக்கு மலேரியா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தாலும், யாருக்கும் எபோலா அல்லது மார்பர்க் போன்ற பொதுவான ரத்தக்கசிவு காய்ச்சல் நோய்களுக்கான பாதிப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு கூட காங்கோவின் மற்றொரு பகுதியில் இதேப் போன்று மர்ம காய்ச்சல் போன்ற வைரஸ் பரவி டஜன் கணக்கான மக்களின் உயிரைப் பறித்தது. ஆரம்பத்தில் இது மலேரியாவாக இருக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Thursday, February 27, 2025, 11:25 [IST]
Desktop Bottom Promotion