Mother's Day 2024: ஒவ்வொரு தாய்மார்களும் கட்டாயம் எடுக்க வேண்டிய 5 இரத்த பரிசோதனைகள்!

Mother's Day 2024: நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நாம் குறிப்பிட்ட வயதை எட்டியவுடன் சீரான இடைவெளியில் உடலை பரிசோதனை செய்ய வேண்டும். குறிப்பாக பெண்கள், அதுவும் தாய்மார்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும்.

அதற்கு குறிப்பிட்ட இரத்த பரிசோதனைகளை அவ்வப்போது எடுத்து பார்க்க வேண்டியது அவசியம். இதன் மூலம் ஆரோக்கியத்தை கண்காணித்து பிரச்சனை ஏதேனும் இருந்தால், அதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டு, நிலைமை மோசமாவதைத் தடுக்கலாம்.

Mother s Day 2024 Top 5 Blood Tests That Every Mothers Should Do

ஆனால் தாய்மார்கள் பலர் தங்கள் குடும்பத்தில் உள்ளோரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டும் அளவிற்கு தங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதில்லை. இப்படி தாய்மார்கள் வெறும் குடும்பத்தின் மேல் மட்டும் அக்கறை காட்டுவது நல்லதல்ல. ஒரு குடும்பம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அந்த வீட்டின் பெண்மணி ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

அதற்கு உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்க தாய்மார்கள் ஒருசில இரத்த பரிசோதனைகளை சீரான இடைவெளியில் தவறாமல் எடுக்க வேண்டும். இன்று அன்னையர் தினம் என்பதால், தாய்மார்கள் எந்த மாதிரியான இரத்த பரிசோதனைகளை கட்டாயம் எடுத்துப் பார்க்க வேண்டும் என்பதைக் காண்போம்.

1. முழு இரத்த எண்ணிக்கை (CBC)

CBC பரிசோதனையை எடுப்பதன் மூலம் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள முடியும். இந்த CBC பரிசோதனையை ஒவ்வொரு தாய்மார்களும் தங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள தவறாமல் எடுத்துப் பார்க்க வேண்டும். முக்கியமாக குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் பெண்கள் இந்த பரிசோதனையை எடுக்க வேண்டும். இப்படி எடுப்பதனால் இரத்த சோகை உள்ளதா அல்லது வேறு ஏதேனும் இரத்த கோளாறு உள்ளதா என்பதை கண்டறியலாம்.

2. தைராய்டு பரிசோதனை

ஆண்களை விட பெண்கள் அதிகம் அவதிப்படும் மற்றொரு ஆரோக்கிய பிரச்சனை தான் தைராய்டு பிரச்சனை. நமது உடலில் தைராய்டு சுரப்பி தான் மெட்டபாலிசம், ஆற்றல் மற்றும் மனநிலையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. வயது அதிகரிக்கும் போது, பெண்கள் இந்த தைராய்டு சுரப்பியில் பிரச்சனைகளை சந்திக்கலாம். இதை ஆரம்பத்திலேயே கண்டறிய தைராய்டு பரிசோதனையை தாய்மார்கள் சீரான இடைவெளியில் எடுத்து பார்க்க வேண்டியது அவசியம்.

3. கொழுப்பு பரிசோதனை

என்ன தான் ஆண்கள் மாரடைப்பால் அதிகம் மரணமடைந்து வந்தாலும், பெண்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளன. ஒருவருக்கு மாரடைப்பு அதிகப்படியான கொழுப்புக்கள் காரணமாக வரக்கூடும். எனவே உடலில் உள்ள கொழுப்புக்களின் அளவை சீரான இடைவெளியில் பரிசோதனை செய்து பார்க்க வேண்டியது அவசியம். இப்படி கொழுப்பு பரிசோதனையை செய்வதன் மூலம், உடலில் எவ்வளவு நல்ல மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் உள்ளது என்பதையும், பக்கவாதம் மற்றும் இதய நோயின் அபாயம் குறித்தும் எளிதில் அறியலாம்.

4. இரத்த சர்க்கரை பரிசோதனை

இரத்த பரிசோதனையின் மூலம் சர்க்கரை நோய் உள்ளதா இல்லையா என்பதை அறியலாம். அதுவும் தாய்மார்கள் இந்த இரத்த சர்க்கரை பரிசோதனையை அவசியம் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அது ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். தற்போது சர்க்கரை நோயால் நிறைய பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதில் நிறைய பேருக்கு தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதே தெரியாமல் உள்ளனர். எனவே இதைத் தவிர்க்க இரத்த சர்க்கரை பரிசோதனையை அவ்வப்போது செய்து பார்க்க வேண்டும்.

5. வைட்டமின் டி பரிசோதனை

பெண்களுக்கு வைட்டமின் டி மிகவும் இன்றியமையாத சத்தாகும். ஏனெனில் இது மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு போன்ற பிரச்சினைகளைத் தடுக்க உதவுகிறது. பெண்களுக்கு வயது அதிகரிக்கும் போது, உடலில் வைட்டமின் டி குறையும் வாய்ப்புள்ளது. இதை அறியாமல் நிறைய தாய்மார்கள் இந்த வைட்டமின் டி குறைபாட்டுடன் இருப்பார்கள். இது இப்படியே நீடிக்கும் போது, அது எலும்புகளின் ஆரோக்கியம், நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Sunday, May 12, 2024, 11:30 [IST]
Desktop Bottom Promotion