Menstrual Hygiene Day 2023: பீரியட் டைம்மில் தொற்று ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிவைகள்!

Menstrual Hygiene Day 2023: மாதவிடாய் என்பது பெண்கள் மட்டுமே சந்திக்கும் ஒரு நிகழ்வு. பருவ வயதை அடைந்த ஒரு பெண் தனது உடலில் சந்திக்கும் மிகவும் முக்கியமான மாற்றங்களில் இதுவும் ஒன்றாகும். மாதவிடாய் ஒரு இயற்கை செயல்முறையாக இருந்தாலும், இதுக்குறித்த தவறான எண்ணங்கள் மக்களிடையே உள்ளது.

இதன் காரணமாக பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்க வேண்டுமானால் குழந்தைப் பருவத்தில் இருந்தே மாதவிடாய் காலத்தில் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகளைப் பற்றி குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும்.

Menstrual Hygiene Day 2023: Tips For Menstrual Hygiene In Tamil

பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியானது 28 நாட்களுக்கு ஒருமுறை நிகழும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு இரத்தப்போக்கு 5-7 நாட்கள் வரை நீடித்திருக்கும் மற்றும் இக்காலத்தில் இரத்த இழப்பின் அளவு 20-80 மில்லி வரை இருக்கும். ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியும் கருமுட்டை வெளியீட்டை உள்ளடக்கியது.

இந்த கருமுட்டை ஃபலோபியன் குழாய்கள் வழியாக கருப்பைக்குள் பயணிக்கிறது. ஹார்மோன்கள் காரணமாக, கருப்பையின் புறணி கருவுறுவதற்கு தடிமனாகிறது. ஒருவேளை கருமுட்டை கருவுறவில்லை என்றால், கருப்பையின் புறணி இரத்தத்துடன் சேர்ந்து யோனி வழியாக மாதவிடாய் காலத்தில் வெளியேறும்.

இந்தியாவில் பெண்கள் போதுமான சுகாதாரத்தை பின்பற்றுவதில்லை. இதன் காரணமாக பல பெண்கள் மாதவிடாய் காலத்தில் பலவிதமான தொற்றுகளுக்கு ஆளாகிறார்கள். மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் தொற்றுகள் யோனியில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாமல், கருப்பையையும் தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க பள்ளி மற்றும் வீடுகளில் எவ்வித தயக்கமும் இல்லாமல் முறையான மாதவிடய் சுகாதார நடைமுறைகளை கற்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் மாதவிடாய் கால சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை பெண்களுக்கு ஏற்படுத்தும் வகையில் மே 28 ஆம் தேதி மாதவிடாய் சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு பெண்ணும் மாதவிடாய் காலத்தில் தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

* மாதவிடாய் நாட்களில் தவறாமல் குளிக்க வேண்டும். அப்படி குளிக்கும் போது யோனி பகுதியை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். முக்கியமாக யோனியை கழுவும் போது, முன்னிருந்து பின்புறமாக கழுவ வேண்டும். இதனால் தொற்றுக்களின் அபாயம் தடுக்கப்படும்.

* மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கைப் பொறுத்து, பயன்படுத்தும் சானிட்டரி பேடுகளை 4-6 மணிநேரத்திற்கு ஒருமுறை தவறாமல் மாற்ற வேண்டும். முக்கியமாக இரத்தப்போக்கு இல்லாவிட்டாலும் 4-6 மணிநேரத்திற்கு ஒருமுறை பேடுகளை மாற்ற வேண்டும்.

பயன்படுத்திய சானிட்டரி பேடுகளை அப்புறப்படுத்தும் போது, நியூஸ்பேப்பரில் சுற்றி பாதுகாப்பாக தூக்கி எறிய வேண்டும். கையில் பேடுகளை தொட்ட பின் கைகளை தவறாமல் சோப்பு பயன்படுத்தி கழுவ வேண்டும். ஒருவேளை நீங்கள் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பேடுகளை பயன்படுத்தினால், அவற்றை நன்கு சுத்தப்படுத்த வேண்டும்.

* தற்போது மாதவிடாய் காலத்தில் பயன்படுத்த சானிட்டரி பேடுகள், டம்பான்கள் மற்றும் மாதவிடாய் கப்புகள் போன்றவை உள்ளன. இந்தியாவில் பெரும்பாலும் சானிட்டரி பேடுகளை தான் பெண்கள் பயன்படுத்துகிறார்கள். சில பெண்கள் ஒரே நேரத்தில் இரண்டு சானிட்டரி பேடுகளை பயன்படுத்துகிறார்கள். இது தொற்றுகளுக்கு தான் வழிவகுக்கும். இதைத் தவிர்க்க ஒரே ஒரு சானிட்டரி பேடுகளை மட்டும் பயன்படுத்துங்கள். டம்பான்களைப் பயன்படுத்துபவரானால், 3-4 மணிநேரத்திற்கு ஒருமுறை தவறாமல மாற்றுங்கள்.

* யோனி பகுதியை சுத்தம் செய்ய சோப்புகள் அல்லது யோனி பகுதியை சுத்தம் செய்யும் பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை சோப்பை பயன்படுத்துவதாக இருந்தால், மைல்டு சோப்புகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள். அப்படியே பயன்படுத்துவதாக இருந்தாலும், யோனியின் உட்பகுதியில் பயன்படுத்தாமல், வெளிப்புறத்தல் மட்டும் பயன்படுத்துங்கள்.

மேலே கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தும் மாதவிடாய் காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடைமுறைகளாகும். நீங்கள் அடிக்கடி மாதவிடாய் கால தொற்றுக்களால் அவதிப்படுபவரானால், இந்த டிப்ஸ்களை மனதில் கொண்டு, அவற்றை பின்பற்றுங்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Thursday, May 25, 2023, 21:54 [IST]
Desktop Bottom Promotion