உங்ககிட்ட இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப இரத்த புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்!

Leukemia Awareness Month: தற்போது புற்றுநோய் மிகப்பெரிய சுகாதார சவால்களில் ஒன்றாக உள்ளது. இதற்கு நன்கு பொருத்தப்பட்ட மருத்துவ வசதிகள் இல்லாதது தான் தாமதமான நோயறிதல் மற்றும் சிகிச்சையில் ஒரு பங்கை வகிக்கிறது என்றாலும், இதுக்குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லாததும் ஒரு முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த போதுமான விழிப்புணர்வு மக்களிடையே இல்லாததால் பெரும்பாலும் தாமதமாகக் கண்டறிதலுக்கு வழிவகுத்து, நிறைய உயிரிழப்புக்கு காரணமாக உள்ளது.

புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் அது தாக்கும் பகுதியைப் பொறுத்து வேறுபடும். அதில் ஒன்று தான் லுகேமியா என்னும் இரத்த புற்றுநோய். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் லுகேமியா விழிப்புணர்வு மாதமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில், லுகேமியா என்னும் இரத்த புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஆங்காங்கு நடத்தப்படும்.

Leukemia Awareness Month Doctor Shares Symptoms Of Leukemia That Should Never Be Ignored

அந்த வகையில் இந்த லுகேமியா குறித்து சென்னை அப்பல்லோ புற்றுநோய் மையத்தின் மருத்துவ புற்றுநோயியல், ஹீமாடோ-ஆன்காலஜி, ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் செல்லுலார் சிகிச்சை ஆகியவற்றில் ஆலோசகராக உள்ள டாக்டர் பி.கே. ஜெயச்சந்திரன் அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.

லுகேமியா

லுகேமியா குறித்து கூறியபோது, "பல வகையான புற்றுநோய்களில், அக்யூட் மைலாய்டு லுகேமியா (AML) மற்றும் அக்யூட் லிம்போபிளாஸ்டிக் லுகேமியா (ALL) போன்ற இரத்தப் புற்றுநோயின் இந்த ஆக்கிரமிப்பு வடிவங்கள் தான் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போய்விடுகின்றன. அதன் தீவிரம் இருந்தபோதிலும், அது எப்போதும் அதற்குத் தகுதியான கவனத்தைப் பெறுவதில்லை.

பல ஆண்டுகளாக, உலகளாவிய அக்யூட் மைலாய்டு லுகேமியா பாதிப்பு 1990-ல் 9,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளிலிருந்து 2021-ல் கிட்டத்தட்ட 1.5 லட்சமாக அதிகரித்துள்ளது. இறப்புகளின் எண்ணிக்கையும் அதே அளவில் கடுமையாக உயர்ந்துள்ளது. அதே காலகட்டத்தில் சுமார் 74,000-ல் இருந்து 1.3 லட்சமாக உயர்ந்துள்ளது.

AML மற்றும் ALL இன் சிக்கலான தன்மை மற்றும் அதிக இறப்பு விகிதம் விழிப்புணர்வைப் பரப்புதல், ஆரம்பகால கண்டறிதலை ஊக்குவித்தல் மற்றும் சரியான நேரத்தில் பராமரிப்புக்கான அமைப்புகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகிறது. அப்போது தான் இந்த நோய் உலகளவில் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சுகாதார அமைப்புகள் மீது தொடர்ந்து சுமத்தும் சுமையைக் குறைக்கத் தொடங்க முடியும்." என்று டாக்டர் கூறினார்.

இரத்த புற்றுநோய் எவ்வாறு உருவாகிறது?

இதுகுறித்து அவர் கூறுகையில், "AML மற்றும் ALL ஆகியவை எலும்பு மஜ்ஜையில் தொடங்கும் ஒரு வகை இரத்தப் புற்றுநோயாகும். எலும்பு மஜ்ஜை என்பது நமது எலும்புகளுக்குள் இருக்கும் மென்மையான, பஞ்சுபோன்ற பொருள். இது தான் இரத்த அணுக்களை உற்பத்தி செய்கின்றன. அதுவும் இரத்தத்தின் கிட்டத்தட்ட அனைத்து கூறுகளையும் உற்பத்தி செய்கின்றன. அவை பின்வருமாறு:

• உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் - சிவப்பு இரத்த அணுக்கள்
• இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த உதவும் - பிளேட்லெட்டுகள்
• தொற்றுகளை எதிர்த்துப் போராடும் - வெள்ளை இரத்த அணுக்கள்

AML மற்றும் ALL இல், இந்த இரத்தத்தை உருவாக்கும் செல்களில் ஒரு மரபணு மாற்றம் ஏற்படுகிறது. இதன் விளைவாக, அவை கட்டுப்பாடில்லாமல் பெருகத் தொடங்கி, பிளாஸ்ட்கள் எனப்படும் முதிர்ச்சியடையாத மைலாய்டு மற்றும் லிம்பாய்டு செல்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்குகின்றன.

இந்த அசாதாரண செல்கள் அவை செயல்பட வேண்டியபடி செயல்படாமல், எலும்பு மஜ்ஜையில் உள்ள ஆரோக்கியமான இரத்த அணுக்களை வெளியேற்றத் தொடங்குகின்றன. இது சாதாரண இரத்த உற்பத்தியை சீர்குலைத்து, சோர்வு, தொற்றுநோய்களின் ஆபத்து மற்றும் எளிதில் இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது." என்று கூறினார்.

இரத்த புற்றுநோயின் அறிகுறிகள்

லுகேமியா என்னும் இரத்த புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

• எளிதில் சிராய்ப்பு ஏற்படுதல்
• மீண்டும் மீண்டும் தொற்றுகள் ஏற்படுதல்
• எலும்பு வலி
• உடல் பலவீனம்
• அதிக சோர்வை ஏற்படுத்தும் இரத்த சோகை
• மூச்சுத் திணறல்

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், AML மற்றும் ALL-க்கான காரணம் தெரியவில்லை. பிற புற்றுநோய்களுக்கான கீமோதெரபியின் வரலாறு, கதிர்வீச்சு மற்றும் பென்சீன் வெளிப்பாட்டின் வரலாறு மற்றும் சிகரெட் புகை போன்ற சில ஆபத்து காரணிகள் உள்ளன. ஆனால் இந்த காரணிகள் AML மற்றும் ALL நோயால் கண்டறியப்பட்ட நோயாளிகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே உள்ளன என்று டாக்டர் கூறினார்.

AML மற்றும் ALL பற்றிய உண்மைகள்

இந்தியாவில், லுகேமியா (இரத்த புற்றுநோய்) பாதிப்பு விகிதம் 49,883 ஆகும். 2019 ஆம் ஆண்டில் ஆண்கள் மற்றும் பெண்களில் AML இன் பரவல் சராசரியாக 27.9% ஆகும். மொத்த லுகேமியா நோயாளிகளில் AML 10.5% க்கும் அதிகமாக உள்ளது. AML பற்றிய ஒவ்வொரு நோயாளியும் தெரிந்து கொள்ள வேண்டிய மூன்று முக்கிய உண்மைகள் குறித்தும் டாக்டர் பகிர்ந்து கொண்டார். அவை பின்வருமாறு:

1. AML அனைத்து வயதினருக்கும் ஏற்படுகிறது மற்றும் ALL முக்கியமாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே ஏற்படுகிறது: AML என்பது பெரியவர்களிடையே லுகேமியாவின் மிகவும் பொதுவான வடிவமாகும். மேலும் நோயறிதலின் சராசரி வயது 66 முதல் 71 வயது வரை உள்ளது. இருப்பினும், ஒரு ஆய்வின்படி, இந்தியாவில் பெரியவர்கள் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பே பாதிக்கப்படுகின்றனர். நோயறிதலின் சராசரி வயது 40 ஆண்டுகள் ஆகும். கூடுதலாக, குழந்தைகளில் உள்ள அனைத்து லுகேமியா நோயாளிகளிலும் AML கிட்டத்தட்ட 15 முதல் 20% வரை உள்ளது.

2. AML மற்றும் ALL சிகிச்சை அளிக்கக்கூடியவை: வயதுவந்த நோயாளிகளில் 60 முதல் 70% வரை (18-65 வயது) சரியான சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை அடைய முடியும். இருப்பினும், ஐந்து ஆண்டு உயிர்வாழும் விகிதம் 31.7% ஆகும். இன்று, AML மற்றும் ALL-க்கு டார்கெட்டட் சிகிச்சை, கீமோதெரபி, ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் CAR-T செல் சிகிச்சை போன்ற பல வழிகளில் சிகிச்சையளிக்க முடியும். மற்ற சிகிச்சைகளுடன் பயன்படுத்தும் போது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டிய புதிய மருந்துகளும் உள்ளன.

3. AML மற்றும் ALL உள்ள அனைத்து நோயாளிகளுக்கும் தீவிர கீமோதெரபி இல்லை: தீவிர கீமோதெரபி பொதுவாக நோயாளிகளுக்கு சிகிச்சையின் முதல் தேர்வாகும். இருப்பினும், புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், குறிப்பாக AML நோயாளிகள், மோசமான உடல்நல நிலை, கொமொர்பிட் நிலைமைகள் அல்லது முதுமை காரணமாக இந்த சிகிச்சைக்கு தகுதியற்றவர்கள்.

"AML அல்லது ALL நோயால் கண்டறியப்படுவது ஒருவருக்கு மோசமான சூழ்நிலையாக இருக்கலாம். இருப்பினும், நோயைப் பற்றிய முக்கிய உண்மைகளைக் தெரிந்து கொள்வதன் மூலம், அவர்கள் சரியான முடிவுகளை எடுக்க முடியும். இந்நோய்க்கு எடுக்கும் சிகிச்சை பயணம் நீண்டதாகவும், ஆபத்தானதாகவும் இருக்கலாம்; இருப்பினும், துல்லியமான மற்றும் உண்மையான தகவல்களுடன், நோயாளிகள் இந்த சிக்கல்களை நம்பிக்கையுடன் கடந்து செல்ல முடியும்." என்று டாக்டர் கூறினார்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Friday, September 26, 2025, 11:40 [IST]
Desktop Bottom Promotion