இந்த 4 அறிகுறியும் உங்ககிட்ட இருக்கா? அப்ப உங்களுக்கு சரியான தூக்கம் இல்ல-ன்னு அர்த்தம்... உஷார்..

Lack Of Sleep Symptoms In Tamil: தூக்கம் ஒரு மனிதனுக்கு மிகவும் இன்றியமையாதது. உடலுக்கு போதுமான தூக்கம் கிடைத்தால் தான், உடலுறுப்புக்கள் ஒவ்வொன்றும் சிறப்பாக செயல்படும். ஆனால் தற்போதைய மன அழுத்தம் நிறைந்த மற்றும் வேலைப்பளுமிக்க வாழ்க்கை முறையால் நிறைய பேர் போதுமான தூக்கத்தைப் பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.

உலகெங்கிலும் உள்ள நிபுணர்கள் ஒரு மனிதனுக்கு குறைந்தது 8 மணிநேர தூக்கம் அவசியம் என்று வலியுறுத்துகின்றனர். நாள் முழுவதும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் உடலுக்கு போதுமான ஓய்வு கிடைக்க 8 மணிநேரம் தேவை.

Lack Of Sleep Symptoms: Signs You Arent Getting Enough Sleep In Tamil

தூக்கமானது இதயம் மற்றும் இரத்த நாளங்களில் உள்ள காயங்களை சரிசெய்ய உதவுகிறது. அதோடு இது தசை வளர்ச்சிக்கும், திசுக்களை சரிசெய்வதற்கும், ஹார்மோன்களை ஒருங்கிணைப்பதற்கும் அவசியம். ஆனால் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற காரணத்தினால், நிறைய பேர் தூக்கத்தை தொலைத்து, அதன் விளைவாக இதய நோய், சிறுநீரக நோய், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பக்கவாதம் போன்ற பல்வேறு நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது.

சரி, ஒருவருக்கு போதுமான தூக்கம் இல்லை என்பதை எப்படி அறியலாம் என்று நீங்கள் கேட்கலாம். கீழே ஒருவருக்கு போதுமான தூக்கம் இல்லாவிட்டால் வெளிப்படும் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த அறிகுறிகள் தெரிந்தால், தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறியலாம்.

1. அடிக்கடி நோய்வாய்ப்படுவது

நீங்கள் வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு போதுமான தூக்கம் இல்லை என்று அர்த்தம். நோயெதிர்ப்பு மண்டலம் தான் பாதுகாப்பான சைட்டோகீன்கள் மற்றும் தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் ஆன்டி-பாடிகள் மற்றும் செல்களை உற்பத்தி செய்கிறது. இந்த பாதுகாப்பான ஆன்டிபாடிகள் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களிடம் இருந்து உடலைப் பாதுகாக்கின்றன. ஆனால் போதுமான தூக்கம் கிடைக்காமல் போதும் போது, உடலால் இந்த ஆன்டிபாடிகள் உற்பத்தி செய்ய முடியாமல் போய், அடிக்கடி நோய்வாய்ப்படக்கூடும்.

2. உயர் இரத்த அழுத்தம்

ஒருவருக்கு போதுமான தூக்கம் கிடைக்காவிட்டால், அது அந்நபரின் இரத்த அழுத்தத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அதுவும் இப்படி நீண்ட நாட்களாக சரியாக தூங்காமல் இருந்தால், அது உயர் இரத்த அழுத்த அபாயத்தை அதிகரித்து, ஒரு கட்டத்தில் இதய நோய்க்கு வழிவகுத்துவிடும்.

3. உடல் பருமன்

அதிகமாக சாப்பிட்டால் தான் உடல் எடை அதிகரிக்கும் என்பதில்லை, சரியாக தூங்காவிட்டாலும், உடல் எடை அதிகரிக்கும். எப்படியெனில், சரியான அளவு தூக்கத்தை மேற்கொள்ளாமல் இந்தால், உடலின் மெட்டபாலிசம் குறையும். இதன் விளைவாக நீங்கள் சாப்பிடும் உணவுகள் ஆற்றலாக மாற்றப்படாமல், உடலில் அப்படியே கொழுப்புக்களாக தங்கி, உடல் எடையை அதிகரிக்கும். எனவே காரணமின்றி உடல் எடை அதிகரிப்பதைக் கண்டால், நீங்கள் போதுமான அளவு தூக்கத்தைப் பெறுவதில்லை என்று அர்த்தம்.

4. அதிக பசியுணர்வு

போதுமான அளவு தூக்கத்தைப் பெறாமல் இருந்தால், அது பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோனான லெப்டின் உற்பத்தியில் இடையூறை ஏற்படுத்தும். இந்த லெப்டின் ஹார்மோன் தான், நாம் சாப்பிட்டதும் ஒரு திருப்தி உணர்வை வழங்குகிறது. ஆனால் சரியான அளவு தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருக்கும் போது, இந்த ஹார்மோன் மூளைக்கு வழக்கத்தை விட அதிகளவு கலோரிகளை எடுக்க வைக்கும். இதன் விளைவாக அடிக்கடி பசியுணர்வை சந்திக்க நேரிடும்.

எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் நீங்கள் உங்களிடம் அனுபவித்தால், உங்கள் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கத்தில் ஒருசில மாற்றங்களை செய்யுங்கள். இந்த சிறிய மாற்றம் உங்கள் தூக்கத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். இப்போது இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறத் தூண்டும் சில உணவுகளைக் காண்போம். அந்த உணவுகளை உங்கள் உணவில் தினமும் சேர்த்து ஆழ்ந்த நிம்மதியான தூக்கத்தைப் பெறுங்கள்.

வாழைப்பழம்

இரவு நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெற வாழைப்பழம் பெரிதும் உதவி புரியும். ஏனெனில் இதில் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய இரண்டு சத்துக்களும் வளமான அளவில் உள்ளன. இவை இரண்டும் தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்யும். மேலும் இப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் இருப்பதால், நல்ல தூக்கத்தைப் பெற உதவி புரியும்.

ஆளி விதைகள்

ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மக்னீசியம், ட்ரிப்டோஃபேன் போன்றவை அதிகம் உள்ளன. மக்னீசியம் தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்யவும், ட்ரிப்டோஃபேன் செரடோனின் என்னும் ஹார்மோன்களின் வெளியீட்டிற்கும், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் பதட்டம் மற்றும் மன இறுக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

பாதாம்

பாதாமில் மக்னீசியம் மற்ற உணவுப் பொருட்களை விட அதிகமாக உள்ளது. எனவே நல்ல தூக்கத்தைப் பெற முடியாமல் அவதிப்படுபவர்கள், பாதாமை தினசரி உணவில் சேர்த்து வந்தால், நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம். இது தவிர, பாதாம் தூக்கத்தின் போது இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுகிறது.

வெதுவெதுப்பான பால்

இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலைக் குடித்தால், நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைக்கம். ஏனெனில் இதில் ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம் உள்ளது. இது செரடோனினாக உடலில் மாற்றமடைகிறது. செரடோனின் என்பது மூளையை அமைதியடையச் செய்யத் தூண்டும் ஹார்மோன்.

ஆகவே இரவு நேரத்தில் தூக்கம் வராமல் ஆந்தை போல் விழித்துக் கொண்டிருந்தால், மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை உங்களின் தினவரி உணவில் சேர்த்து வாருங்கள். அத்துடன் இரவு தூங்கும் போது சிறிது நேரம் ஹெட் மசாஜ் செய்யுங்கள். இதனால் நிம்மதியான தூக்கத்தை எளிதில் பெறலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Monday, February 12, 2024, 11:48 [IST]
Desktop Bottom Promotion