வாயில் ரொம்ப நாளா இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப அது வாய் புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர் அன்பரசி

Mouth Cancer: உலகளவில் பெரும்பாலானோரின் மரணத்திற்கு முக்கியமான மற்றும் முதன்மையான காரணமாக புற்றுநோய் இருந்து வருகிறது. புற்றுநோய் என்பது உடலில் உள்ள செல்களின் அசாதாரண வளர்ச்சியினால் ஏற்படக்கூடிய கட்டிகளாகும். புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அதுவும் இந்த கட்டிகள் உடலின் எந்த பகுதியில் உருவாகிறதோ, அதைப் பொறுத்தது. இந்தியாவில் பெண்களிடையே மார்பக புற்றுநோயும், ஆண்களிடையே வாய்ப் புற்றுநோயும் அதிகரித்து வருவதாக தரவுகளில் தெரிய வந்துள்ளது.

இப்படிப்பட்ட வாய் புற்றுநோய் எந்த காரணங்களுக்காக எல்லாம் ஒருவருக்கு வருகிறது மற்றும் வாய் புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகள் என்னவென்பது குறித்து கதிர்வீச்சு புற்றுநோயியலின் மூத்த ஆலோசகர் டாக்டர். அன்பரசி குமரேசன் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.

Exclusive Rising Mouth Cancer Rates In India Expert Shares The Causes Of Oral Cancer And Its Signs

அதில் அவர் கூறியதாவது, "உலகளவில் வாய் புற்றுநோய் இரண்டாவது இடத்திலும் மற்றும் புற்றுநோய் தொடர்பான இறப்புகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. GLOBOCAN 2022 தரவுகளின்படி, இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் நான்கு நோயாளிகள் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று பேர் ஆண்கள். கூடுதலாக, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒன்பது நோயாளிகள் இந்த நோயால் இறக்கின்றனர்.

ஒருவரது முகத்தில் வாய் பகுதி பேச்சு, உணவை விழுங்குதல் மற்றும் முகபாவனைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படிட்ட வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டால், இந்த செயல்பாடுகள் அனைத்தும் பாதிப்படையும்.

காரணிகள்

வாய் புற்றுநோயானது புகையிலை மற்றும் மதுவால் ஏற்படுகிறது. இது தவிர நாள்பட்ட பல் நோய் மற்றும் HPV தொற்று ஆகியவை பிற பங்களிக்கும் காரணிகளாகும். அதுவும் புகையிலை பயன்பாடு 80% வாய்வழி புற்றுநோய்களுடன் தொடர்புடையது, குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு.

இளம் வயதினருக்கும் பெண்களுக்கும், குட்கா உள்ளிட்ட புகையற்ற புகையிலை உபயோகிப்பது புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்துகிறது. புகைபிடிப்பதை விட குட்கா பாதுகாப்பானது என்ற தவறான எண்ணங்கள் மக்களிடம் இருப்பதாலும், சுமார் 200 மில்லியன் பெரியவர்கள் மற்றும் 5 மில்லியன் குழந்தைகள் அதற்கு அடிமையாகியுள்ளனர்.

ஆரம்பகால நோயறிதல் 5 வருட உயிர்வாழ்வு விகிதத்தை 80% க்கும் மேல் அதிகரிக்கிறது, அதேசமயம் மேம்பட்ட நிலைகளில் அதை 20-30% ஆக குறைக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான புற்றுநோய் தாமதமாக கண்டறியப்படுகின்றன.

வாய் புற்றுநோயை எதிர்த்துப் போராட, புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது, புற்றுநோய் விழிப்புணர்வை அதிகரிப்பது மற்றும் முன்கூட்டியே கண்டறிவதை ஊக்குவிப்பது அவசியம் என்றும் டாக்டர் கூறினார்.

எச்சரிக்கை அறிகுறிகள்

வாய் புற்றுநோய் ஒருவருக்கு இருந்தால், அது பின்வரும் அறிகுறிகளை வெளிப்படுத்தும். அவையாவன:

* சிவப்பு அல்லது வெள்ளை திட்டுகள்
* வாயில் எரியும் உணர்வு
* ஆறாத வாய் அல்லது உதட்டுப் புண்
* வாய் திறப்பதில் சிரமம்
* பற்களை இழப்பது
* விழுங்குவதில் சிரமம்
* காது வலி
* கழுத்து வீக்கம் போன்றவை.

மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த அறிகுறிகளை ஒருவர் நீண்ட காலமாக சந்தித்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்றும் டாக்டர் அன்பரசி குமரேசன் கூறினார்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion