H3N2, கோவிட் தொற்றை கண்டுபிடிக்க இனி கஷ்டம் இருக்காது.. ஏன்னா அதுக்கான கருவி வந்தாச்சு..

சுவாச தொற்றுகளையும் வேறுபடுத்தி, சரியான சிகிச்சையை நோயாளிகளுக்கு எளிதில் வழங்கும் வகையில் ஒரு புதிய சோதனை கருவியை சென்னையை சேர்ந்த நிறுவனம் ஒன்று கண்டுபிடித்து, ஐசிஎம்ஆர்-ன் அனுமதியைப் பெற்றுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு முதலாக கோவிட்-19 வழக்கின் எண்ணிக்கை குறைந்து, அனைவரும் சாதாரண வாழ்க்கை வாழ ஆரம்பித்தோம். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டின் பிப்ரவரியில் இருந்து இன்ப்ளூயன்ஸா H1N1 வைரஸின் திரிபான H3N2 வைரஸ் தொற்றால் ஏராளமான மக்கள் இந்தியாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அத்துடன் தற்போது கோவிட்-19 தொற்றுகளின் வழக்குகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவ்விரு தொற்றுகளின் வழக்குகளும் அதிகரித்து வருவதால், எந்த தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிவதில் சிரமம் இருந்தது.

ICMR Approves New Kit To Detect Influenza, SARS CoV2, and RSV In Tamil

இம்மாதிரியான சூழ்நிலையில் இவ்விரு தொற்றுகளையும் வேறுபடுத்தி, சரியான சிகிச்சையை நோயாளிகளுக்கு எளிதில் வழங்கும் வகையில் ஒரு புதிய சோதனை கருவியை சென்னையை சேர்ந்த நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது. இந்த சோதனை கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் அனுமதி அளித்துள்ளது.

சுவாசத் தொற்றுக்களை கண்டறிவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய RT-qPCR கருவியை சென்னையை அடிப்படையாக கொண்ட க்ரியா மெடிக்கல் டெக்னாலஜிஸ் (KRIYA Medical Technologies) உருவாக்கியுள்ளது. இந்த கருவியானது KRIVIDA TRIVUS என்று அழைக்கப்படும். இந்த கருவியைக் கொண்டு மூன்று வகையான நோய்க்கிருமிகளை கண்டறிய முடியும். அவை இன்ஃப்ளூயன்ஸா (H1N1, H3N2, Yamagata மற்றும் Victoria sublineages), SARS CoV2 மற்றும் RSV போன்றவை ஆகும்.

இவற்றில் இன்ஃப்ளூயன்ஸா, SARS CoV2 மற்றும் RSV ஆகிய மூன்று தொற்றுகளுமே ஆரம்பத்தில் இருமல், தும்மல், உடல் பலவீனம், மூச்சுத்திணறல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்டவை. இருப்பினும், ஒவ்வொன்றும் நாட்கள் செல்ல செல்ல வித்தியாசமாக பாதிக்கின்றன. எனவே ஆரம்பத்திலேயே ஒரு நோய்த்தொற்றை கண்டுபிடித்தால் தான், அதை எளிதில் சரிசெய்ய முடியும். அந்த வேலையை சுலபமாக்கவே இந்த புதிய RT-qPCR கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

க்ரியாவின் KRIVIDA TRIVUS சோதனைக் கருவியின் நன்மைகள்

* இந்த கருவியானது நோயாளியின் உடலில் எந்த வகையான வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை கண்டறிய உதவுகிறது.

* எந்த வகை வைரஸ் நோய்த்தொற்றை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரியும் போது அது நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு எளிதாகவும், உதவியாகவும் இருக்கும்.

* முக்கியமாக இந்த கருவி 50-60 நிமிடங்களுக்குள் முடிவை வழங்கும்.

இதுக்குறித்து க்ரியா மெடிக்கல் டெக்னாலஜிஸின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான அனு மோடூரி கூறுகையில், சுவாச நோயை உண்டாக்கும் வைரஸ்களான இன்ஃப்ளூயன்ஸா, SARS CoV2, மற்றும் RSV ஆகியவற்றை எளிதில் கண்டறிவதற்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த சோதனை கருவி நிச்சயம் அனைவரும் பயன்பெறும் வகையில் இருக்கும். முக்கியமாக இந்த கருவியானது வைரஸ்களை எளிதில் கண்டறிந்து, உடனடியாக சிகிச்சை வழங்க மருத்துவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறினார். மேலும் இந்த கருவிக்கு சரியான நேரத்தில் அனுமதியளித்த ஐசிஎம்ஆர்-க்கு நன்றி தெரிவித்தார்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion