தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..

Posted By:

Thalluvandi Kadai Pudina Malli Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலை டிபனாக பெரும்பாலும் இட்லி, தோசை தான் இருக்குமா? அதற்கு எப்போதும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என்று தான் அடிக்கடி செய்வீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒரு வித்தியாசமான சுவையுடைய சட்னியை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னியை செய்யுங்கள். இந்த சட்னியை இட்லி, தோசையுடன் சாப்பிட்டால், கணக்கில்லாமல் சாப்பிடுவார்கள். அந்த அளவில் சுவையாகவும் இருக்கும், செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

Thalluvandi Kadai Pudina Malli Chutney How To Make Mint Coriander Chutney Recipe

உங்களுக்கு இந்த தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 8 பல்
* இஞ்சி - 1/2 இன்ச்
* வரமிளகாய் - 3
* பச்சை மிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி - 3 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* புதினா - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து லேசாக நிறம் மாற நன்கு வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் பூண்டு, இஞ்சி, வரமிளகாய், பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, அதோடு மஞ்சள் தூள் மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வதக்கி அடுப்பை அணைத்து விட வேண்டும்.
* அதன் பின் அதில் கறிவேப்பிலை, புதினா கொத்தமல்லியை சேர்த்து, வாணலியின் சூட்டிலேயே வதக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி ஓரளவு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஊற்றி, தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால் உப்பு சேர்த்து, 1 கொதி விட்டு இறக்கினால், சுவையான தள்ளுவண்டி கடை புதினா மல்லி சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, June 18, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion