டெங்கு காய்ச்சலா வீட்டு மருத்துவம் கை கொடுக்கும்!

By Mayura Akilan

Dengue fever
டெங்கு காய்ச்சலுக்கு பலியாகும் உயிர்களின் எண்ணிக்கை பற்றி ஊடகங்களில் கூறப்படும் செய்திகளால் மிரண்டு கிடக்கின்றன தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள். சிக்குன் குனியா வந்தாச்சு, பன்றிக்காய்ச்சலை பார்த்தாச்சு டெங்கு காய்ச்சல் எம்மாத்திரம் என்று எகத்தாளமாய் நினைப்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி இந்த காய்ச்சலுக்கு தடுப்பு ஊசியோ தடுப்பு மருந்தோ கிடையாது என்பதுதான். அதிர்ச்சியாகிவிட்டீர்களா? வந்த பின் தவிப்பதை விட டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதே புத்திசாலித்தனம் என்கின்றனர் மருத்துவர்கள்.

தண்ணீர் தேங்க விடாதீங்க

மழைக்காலங்களில்தான் டெங்கு காய்ச்சல் வரும் என்ற நிலை மாறி கோடையிலும் வந்து மக்களை வாட்டி வதைக்கிறது டெங்கு காய்ச்சல். இதற்கு காரணம் கோடையிலும் நல்ல மழை பெய்து ஆங்காங்கே தண்ணீர் தேங்குவதுதான். வீட்டை சுற்றி தேங்கியிருக்கும் தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் இந்த கொசு பகல்நேரத்தில்தான் கடிக்கும். உடல்வலி, முதுகுவலி, காய்ச்சல், திடீர் குளிருடன் காய்ச்சல், உடலில் சிவப்பு புள்ளிகள் போன்றவை இந்த காய்ச்சலுக்கான அறிகுறிகளாகும்.

கொசு உற்பத்தியாவதை தடுக்க வீட்டைச்சுற்றி தண்ணீர் தேங்காமல் தடுக்க வேண்டும் என்கின்றனர் சுகாதாரத்துறையினர். கொசு கடிக்காதவகையில் நன்கு மூடப்பட்ட பருத்தி ஆடைகளை அணியுங்கள். குடிநீரை நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்து குடிக்கவேண்டும் என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாகும்.

நீர்ச்சத்து தேவை

டெங்கு காய்ச்சல் தாக்கியதற்கான அறிகுறி தென்பட்டால் தாமதமின்றி மருத்துவரை அணுகி ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளவும். டெங்கு தாக்கினால் உடலின் நீர்ச்சத்தை குறைத்து விடும். ரத்தத்தட்டுகளில் (பிளேட்லெட்ஸ்) எண்ணிக்கை குறையும். தொடக்கத்திலேயே காய்ச்சலை கவனிக்காமல் விட்டால் நுரையீரல், வயிறு, சிறுநீர்ப்பாதை என பல இடங்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் எந்த நோய்க்கும் குட் பை சொல்லி விடலாம். டெங்கு தாக்கியதனால் உடலில் நீர் இழப்பு குறையாமல் இருக்க இளநீர், கஞ்சி, உப்பு கரைசல் போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாகும். காய்ச்சல் அறிகுறி தென்பட்ட உடன் சுயமாக மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளக்கூடாது என்கின்றனர் மருத்துவர்கள்.

ஆரஞ்சு ஜூஸ்

பன்றிக்காய்ச்சலைப் போல இருமல், தும்மல் மூலம் பரவாது என்பதுதான் ஒரே ஆறுதலான விசயம். டெங்கு காய்ச்சல் தாக்கியவர்கள் ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாம். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல் சோர்வடையாமல் தடுக்கும்.

பப்பாளி இலையை அரைத்து நன்கு சாறு எடுத்து தினசரி இரண்டு டீ ஸ்பூன் வீதம் பருகலாம். அதேபோல் மூலிகை டீ சாப்பிடலாம். பசிக்கும் போது துளசி, இஞ்சி, கொத்தமல்லி, கருப்பட்டி கலந்த மூலிகை டீ தயாரித்து அதில் ப்ரெட், அல்லது பிஸ்கட் தொட்டு சாப்பிடலாம். பசி அடங்கும் டெங்கு காய்ச்சலும் கட்டுப்படும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Friday, May 25, 2012, 10:09 [IST]
Desktop Bottom Promotion