முப்பது நாளும் உண்ணத் தகுந்த யானைக்கால் கிழங்கு

By Mayura Akilan

Elephant Yam
கிழங்கு வகைகளுள் நீண்டகாலம் வைத்திருந்து பயன்படுத்தக் கூடியது சேனைக்கிழங்கு. இவை ஸ்டார்ச் செறிந்தவை என்பதால், ஈரம் நிறைந்த உஷ்ணப்பிரதேசங்களில், இக் கிழங்குகள், பரவலாக பயிரிடப்படுகின்றன. சேனை கிழங்குகள் தான் ஆப்ரிக்கா ஆசிய தென்அமெரிக்கா மற்றும் கடல் தீவுப்பிரதேசங்களில் வாழும் லட்சக்கணக்கான மக்களின் முக்கியமான மாவுச்சத்து உணவு. இந்த கிழங்குகள் உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்குகளைப் போல பயன்படுத்தப் படுகின்றன. ஆறு முதல் எட்டு மாதங்கள்வரை இக்கிழங்கு கெட்டுவிடாமல் இருக்கும் என்பதால் இதனை காய்கறியாகவும், ஊறுகாய் போடவும் பயன்படுத்துகிறார்கள். இக்கிழங்கு பெரிதாக யானைக்கால் போல் இருப்பதால் 'யானைக்கால் கிழங்கு' என்றும் இதை வழங்குகிறார்கள்.

ஏழை மக்களின் எளிய உணவு

மேற்கு ஆப்ரிக்காவிலும் நியூகிளியிலும் சேனைகிழங்குகள் முக்கியமான வேளாண்மை பொருட்கள். கி.மு. 8000 ஆண்டுகளில் ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும் முதன் முதலாக பயிரிடப்பட்டன. இன்று வரை இந்த பிரதேசங்களின் ஏழை, எளிய மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் இந்தக்கிழங்குள் இன்றியமையாதவை. குளிர்சாதன வசதியின்றி 6 மாதம் வரை இந்த கிழங்குகளை பாதுகாக்கலாம். எனவே மழைக்கால உணவு பஞ்சத்திலிருந்து மக்கள் காப்பாற்றப்படுகின்றனர்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

இந்த கிழங்குகளில் டயாஸ்கோரின் ஒரு 'விஷ' காரம் உள்ளது. ஆனால் குறைந்த அளவில் இருக்கிறது. கிழங்குகளை வேக வைத்தால் இந்த விஷம் அழிந்து விடும்.டயாஸ்கோரின் தவிர, இந்த இன கிழங்குகளில் ஸ்டீராய்டுகளான சபோஜெனிங்களும் உள்ளன. டயாஸ்கோரியா இன கிழங்குகளில், விட்டமின் சி, நார்ச்சத்து, விட்டமின் பி - 6, பொட்டாசியம், மங்கனீஸ் சத்துக்கள் உள்ளன. கொலஸ்ட்ரால், கொழுப்புகள் மற்றும் சோடியம் குறைவு. விட்டமின் சி, நார்ச்சத்து, விட்டமின் பி 6 - இவை ஆரோக்கியத்தை பாதுகாப்பவை.

பெண்களின் சத்து மாத்திரை

சேனைக்கிழங்கு உண்பதன் மூலம் எலும்பு அடர்த்தி குறைபாடும் ஆஸ்டியோ பெராசிஸ், இதய நோய்களும் தவிர்க்கப்படுகின்றன. பூரித கொழுப்பு குறைவாக இருப்பதும் நல்லதே. இதயம் பாதுகாக்கப்படும். உருளை ரகங்களை விட, சேனைக்கிழங்கு வகைகள் சர்க்கரை குறைந்தவை. குறைந்த கிளைசமிக் அளவுகள் உள்ளவை. நீடித்து இருக்கும் சக்தியை கொடுப்பது மட்டுமன்றி, நீரிழிவு, அதீத உடல் பருமன் ஏற்படாமல் பாதுகாக்கும்.

கீல்வாதம், நீரிழிவு, தொழுநோய், மூலநோய், உடம்பு வறட்சி, உடல் பலவீனம், ஆஸ்துமா முதலியவற்றை இக்கிழங்கு குணமாக்குகிறது. குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நல்ல உணவு மருந்து இது. இது உடலை வலுவடையச் செய்யும்.

பெண்கள் முப்பது நாள்களும் பயம் இல்லாமல் சேனைக் கிழங்கைச் சேர்த்துக் கொள்ளலாம். அவர்களுக்குக் கெடுதல் எதுவும் செய்யாத கிழங்கு இது. கருணைக் கிழங்கு போல் அவித்துச் சாப்பிடக்கூடிய இக்கிழங்கில் புரதம், தாது உப்புகள், மாவுச்சத்து, வைட்டமின் ஏ, ரைபோஃபிளவின், கால்சியம், இரும்பு, தயாமின், நிகோடினிக்கும் உள்ளன. உணவு செரிமானம் ஆகி நன்கு பசி எடுக்க இக்கிழங்கை உபயோகிக்கின்றனர்.

உடலை வலுவாக்கும்

குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் நல்ல உணவு மருந்து, இது. காரணம், உடலை வலுவடையச் செய்யும் சத்து இதில் நிறைய உள்ளது. இதில் உள்ள கால்சியம்சத்து வயதானவர்களின் எலும்பு பலவீனமடைந்துவிடாதபடி பாதுகாக்கிறது. பித்தக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் முதலியவற்றையும் இது குணமாக்குகிறது. 'பி' குரூப் மாத்திரைகளைச் சாப்பிடுகிறவர்கள் அம்மாத்திரைக்குப் பதிலாகச் சேனைக் கிழங்கைச் சாப்பிடலாம்.

பஞ்சகாலத்தில் கை கொடுக்கும் சத்துணவும், மருந்தும் இதுவாகும். அதனால்தான் ஆப்பிரிக்கர்கள் சேனைக்கிழங்கை முக்கிய உணவாகச் சாப்பிட்டு வாழ்க்கையைச் சமாளிக்கிறார்கள்.

கால்நடைகளுக்கு உணவு

அமெரிக்காவில் உள்ள லூசியானாவில் விளையும் சேனைக்கிழங்கு மிகவும் பிரபலமானது. அது சாதாரணமாய் இருபது முதல் நாற்பது கிலோ வரை எடை கொண்டதாய் இருக்கிறது. தென்அமெரிக்காவில் கால்நடைகளுக்கு உணவாக கொடுக்கப்படுவதால் அவை ஊட்டத்துடன் நன்கு வளர்கின்றன.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Tuesday, September 27, 2011, 18:26 [IST]
Desktop Bottom Promotion