கருஞ்சீரகத்துடன் பூண்டு தேன் கலந்து சாப்பிட்டால் உண்மையில் நெஞ்சு சளி கரையுமா? டாக்டர் என்ன சொல்றாரு பாருங்க..

Monsoon Health Tips: தற்போது மழைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், நிறைய பேர் சளி தொல்லையால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இப்படி சளி பிடித்தால், நம் வீட்டில் உள்ள பாட்டிமார்களும், தாய்மார்களும் பலவிதமான கை வைத்தியங்களை செய்து, அதை சரிசெய்ய முயற்சிப்பார்கள்.

ஏனெனில் கை வைத்தியங்களில் பயன்படுத்தப்படும் நம் வீட்டு சமையலறையில் உள்ள மசாலா பொருட்கள் ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டவை. இந்த பொருட்களைக் கொண்டு தான் அக்காலத்தில் நம் முன்னோர்கள் காய்ச்சல், இருமல், சளி போன்றவற்றிற்கு தீர்வு கண்டார்கள்.

Does Eating Black Cumin Seeds Garlic And Honey Together Helps To Remove Mucus - Expert Opinion

அதில் நுரையீரலில் தேங்கியுள்ள நெஞ்சு சளியைக் கரைக்க கருஞ்சீரகம் ஒரு அருமையான மருந்து. இந்த கருஞ்சீரகத்தின் பொடியை 1/2 டீஸ்பூன் எடுத்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுது மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து சாப்பிட்டால் நெஞ்சு சளி கரைந்துவிடும் என்ற ஒரு கருத்து மக்களிடையே உள்ளது.

உண்மையிலேயே இந்த காம்பினேஷன் நெஞ்சு சளியை கரைக்குமா என்பது குறித்து உணவு ஆலோசகரான டாக்டர். அருண்குமார் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அதில் அவர் கூறியதாவது, "கருஞ்சீரகம் என்பது நமது ஊர்களில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மருந்து. பூண்டு நமது தினசரி சமையலில் பயன்படுத்தி வரும் பொருள். தேன் அனைவரும் அறிந்த ஒரு மருத்துவ குணம் நிறைந்த இயற்கை சுவையூட்டி. இந்த மூன்று பொருட்களுக்கும், நுரையீரலை பாதுகாக்கும் வகையில் ஏதேனும் பண்புகள் உள்ளதா என்றால், கருஞ்சீரக விதைகளில் மூச்சுக்குழாயில் ஏற்படும் சுருக்கத்தை விரிவடையச் செய்யும் பண்பு உள்ளது. இப்படியான சக்தி இருப்பது சில வகையான ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளது.

அதேப் போல் பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் பொருளும் மூச்சுக்குழாயை விரிவடையச் செய்யும் தன்மை இருக்கலாம் என்று எலியைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால் மனிதர்களிடம் தெரியவில்லை. அதேப் போல் தேன் பொதுவாக ஒரு தொண்டைக்கு இதத்தை அளிக்கும் ஒரு பொருள்.

இப்படிப்பட்ட மூன்று பொருட்களும் நெஞ்சு சளியைக் கரைக்குமா என்றால், இரண்டு விஷயங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். உண்மையான நெஞ்சு சளி என்பது நிமோனியா. இது வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளால் வரக்கூடியது. இவற்றிற்கு தக்க ஆன்டி-பயாடிக், ஆன்டி-வைரல் மருந்துகளை எடுத்தால் மட்டுமே உண்மையான நெஞ்சு சளியை கரைக்க முடியும். இது தானாக சரியாகாது.

ஆனால் பல நேரங்களில் நெஞ்சு சளி என்று நாம் நினைப்பது அழற்சியால் வரக்கூடிய ஆஸ்துமா, வீசிங் போன்றவையாகும். இந்த நிலைக்கு கருஞ்சீரகம், பூண்டு ஆகியவற்றை ஒன்றாக எடுக்கும் போது, அதில் மூச்சுக்குழாயில் ஏற்படும் சுருக்கத்தை விரிவடையச் செய்யும் பண்பு இருந்தால், நெஞ்சு சளி வெளியேறலாம்" என்று கூறியிருந்தார்.

எனவே நண்பர்களே! உங்களுக்கு அழற்சியால் நெஞ்சு சளி உருவாகியிருந்தால், கருஞ்சீரகம், பூண்டு, தேனை ஒன்றாக எடுக்கும் போது, சளி கரைந்து வெளியேறும். அதுவே காய்ச்சலுடன், சளியை சந்தித்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Monday, July 14, 2025, 13:23 [IST]
Desktop Bottom Promotion