வாழைப்பழம் ஒரு 'ஞானப்பழம்'!!

Bananas As Brain Food
வாழைப்பழம் மருத்துவகுணம் கொண்டதோடு மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது என்று ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வாழைப்பழம் எளிமையான விலை குறைவான ஊட்டச்சத்து மிக்க உணவாகும். இது ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. வாழைப்பழத்தில் எந்த வகையானாலும், அஜீரணத்தைப் போக்குவதுடன், உடலில் தங்கும் தேவையற்ற பொருட்களை வெளிக்கொண்டு வரப் பயன்படுகிறது

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

பூவன் பழத்தை கதலி என்றும் அழைப்பார்கள். மலச்சிக்கல், மூலநோயால் அவதிப்படுவோருக்கு இந்த பழம் மிகவும் நல்லது. பேயன் பழம் குடற்புண் தீர்க்கும். வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்கள் தினம் ஒரு பேயன் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தாலே போதும். மலைவாழை சோகையை நீக்கும். எளிதில் ஜீரணத்தை உண்டாக்கி மலச்சிக்கலைப் போக்குகிறது இந்த மலைவாழை. ரஸ்தாலி இதில் மருத்துவ குணங்கள் குறைவு. ஆனால் சுவை அதிகம். செவ்வாழை பலமளிக்கும். மொந்தன் காமாலைக்கு நல்லது. பச்சைவாழை வெப்பத்தைக் குறைக்கும். நவரை வாழை கரப்பான் நோயை அதிகப்படுத்தும்.

தொடர்ந்து இருமல் இருந்து வந்தால் கருமிளகு கால் தேக்கரண்டி எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள். அதில் பழுத்த நேரந்திரம் பழத்தை கலந்து இரண்டு மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் சரியாகும்.

காசநோய் உள்ளவர்கள் அரை கப் தயிரில் வாழைப்பழத்தை பிழிந்து, ஒரு தேக்கரண்டி தேன், ஒரு டம்ளர் இளநீர் ஆகியவை சேர்த்து தினமும் இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு வர அந்த பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம். சின்னம்மை, டைபாய்டு, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கு தேனில் வாழைப்பழத்தைப் பிசைந்து தினமும் இரு வேளை வீதம் சாப்பிட வேண்டும்.

பசும்பாலுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டுவர அஜீரணம் சரியாகும். தொடர்ந்து தினமும் 2-3 வேளை இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும்.உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும். மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சாப்பிடச் சொல்வார்கள். இந்த பொட்டாசியம் சத்து மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது மூளைத்திறன் அதிகரித்ததோடு, குழந்தையின் கற்கும் திறன் அதிகரித்தது.

பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது.

இதில் சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்தக்காரர்கள் சாப்பிடலாம். குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது. கால்களில் ஆடுசதையில் சட்டென்று பிடித்திழுக்கும். இது பொட்டாசியம் குறைவால் வருகிறது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதைத் தடுக்கலாம்.

வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Saturday, June 16, 2012, 12:08 [IST]
Desktop Bottom Promotion