நீரிழிவு இருக்கா ? மனச் சோர்வு வரும் எச்சரிக்கை!

By Mayura Akilan

Diabetes
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மனச்சோர்வு வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. நீரிழிவு அதிகமாகும் பட்சத்தில் மனச்சோர்வும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். எனவே நீரிழிவுக்கும் மனச்சோர்வுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தூக்கமின்மை.

நீரிழிவு ஒரு சிக்கலான வியாதி. அதை சமாளிக்க பல வழிகளில் போராட வேண்டும். நீரிழிவானது உடல் ரீதியாக நரம்புகளை தாக்கி சேதமுண்டாக்கும். மேலும் நீரிழிவானது வாழ்க்கை தரத்தை குறைத்து விடுகிறது. இதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பத்திய உணவு, மருந்துகளை தினமும் உட்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதனால் நோயாளிகளுக்கு தேவையற்ற சலிப்பும், விரக்தியும் உண்டாகும்.

இந்தியாவில் உள்ள நீரிழிவு நோயாளிகளில் 30 சதவிகிதம் பேர் மனச்சோர்வினால் பாதிக்கப்படுகின்றனர் ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. எதிலும் நாட்டமின்மை, பாலுணர்வு இல்லாமல் போதல், முடிவுகள் எடுக்க முடியாமை, அதீத களைப்பு, சோர்வு, சக்தியின்மை, எப்போதும் எரிச்சல் வருவது, நரம்புத் தளர்ச்சி, தற்கொலை எண்ணங்கள், போன்றவை மனச்சோர்வு ஏற்பட்டவர்களுக்கு அதிகம் ஏற்படுகிறது.

மனச்சோர்வை போக்கலாம்

வாதம், கப தோஷங்களில் ஏற்படும் மாற்றங்களால் மனச்சோர்வு ஏற்படும் என ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. கப உடம்புகாரர்களுக்கு வரும் மனச்சோர்வு அவ்வளவு தீவிரம் இல்லை. இலேசான உணவுகள், உணவில் அதிக காய்கறிகளை சேர்த்துக் கொள்வது. உடற்பயிற்சி, தியானம், யோகா, பிராணயாமம் மனச்சோர்வை போக்கும்.

நல்ல சிந்தனைகளை வளர்த்து, எதிர்மறை எண்ணங்கள் வராமல் தடுக்க, முயற்சிக்க வேண்டும். இதனால் நீரிழிவும் கட்டுப்படுவதோடு மனச்சோர்வையும் விரட்டலாம் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Monday, April 2, 2012, 17:08 [IST]
Desktop Bottom Promotion