Dengue: டெங்குவில் சிக்காம தப்பிக்கணுமா? அப்ப டாக்டர் ஃபரூக் அப்துல்லா கூறும் ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்க...

Dengue Cases Increase In Tamil Nadu: தற்போது தமிழ்நாட்டில் மிகவும் கொடிய டெங்கு காய்ச்சலின் வழக்குகள் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதுவும் 2024 ஆம் ஆண்டில் இதுவரை சுமார் 11,743 டெங்கு வழக்குகள் பதிவாகியிருப்பதோடு, இது 2023 ஆம் ஆண்டில் பதிவான வழக்குகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிகமான வழக்குகளாகும்.

முக்கியமாக இதுவரை டெங்குவால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் மழை முழு வீச்சில் பெய்யத் தொடங்குவதற்கு முன்பே இவ்வளவு டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளது என்றால், இன்னும் பருவமழை முழு வீச்சில் பெய்யத் தொடங்கினால், நிலைமை இன்னும் மோசமாகிவிடும் வாய்ப்புள்ளது.

Dengue Cases Increase In Tamil Nadu Doctor Explains How Dengue Fever Look Like And When To Be Alerted

இந்நிலையில் சிவகங்கையைச் சேர்ந்த பொது நல மருத்துவர் டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா தனது சமூக வலைத்தள பக்கத்தில் மக்களுக்கு டெங்கு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, "தமிழ்நாட்டில் தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழைப் பொழிவு இருக்கிறது. இந்த பருவ காலத்தில் பல நோய்கள் மக்களிடையே பரவும். அதிலும் குறிப்பாக இன்ஃப்ளூயன்சா எனும் சீசனல் ஃபீவர் அதிகமாகப் பரவி வருவதை வெளிநோயாளிகள் பிரிவில் உணர முடிகின்றது.

இத்தகைய சாதாரண நிலை வைரஸ் காய்ச்சுலுக்கு நடுவே டெங்கு, பன்றிக் காய்ச்சல் எனும் H1N1 போன்றவையும் கொரோனா தொற்றும் கூட கலந்து கட்டி பரவும் நிலை இருக்கிறது. எனவே இந்தப் பதிவில் டெங்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால் காய்ச்சல் எவ்வாறு இருக்கும்? எப்போது அலர்ட் ஆக வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

டெங்கு என்பது பெரியவர் சிறியவர் வித்தியாசம் பார்க்காமல் பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடிய நோய். காலந்தாழ்த்தினால் மரணத்தைக் கூட பரிசளிக்கக்கூடிய அளவு ஆபத்தானது. எனவே டெங்கு நோயின் போக்கு குறித்து அறிவது நம் அனைவரின் கடமையாகிறது. கீழ்க்காணும் படத்தை நன்றாக கவனித்தால் டெங்கி காய்ச்சலோட போக்கு புரியும்.

முதல் மூன்று நாட்கள் உடல் கொதி கொதி என்று கொதிக்கும். மூட்டுகள் அவிழுமாறு வலி எடுக்கும். கண்களுக்குப் பின்புறம் வலி இருக்கலாம். அடுத்த மூன்று நாட்களோ உடல் ஜில்லென்று குளிர்ந்திடும். ஆனா அப்பதான் பிரச்சனை ஆரம்பிக்குது பாருங்க... ரத்தக்கசிவு நடக்க ஆரம்பிக்கறதே 4, 5, 6 நாட்களில் தாங்க..

காய்ச்சலோட போக்கு...

முதல் மூன்று நாள் 103-104 டிகிரி இருக்கும் காய்ச்சல் , 4வது நாள் சட்டுனு குறையுது , ரெண்டு நாள் குறையுற காய்ச்சல் திடீர்னு 6வது நாள் 100 டிகிரி அளவுக்கு ஏறுது. ஆக, நாம் ஜாக்கிரதையா இருக்க வேண்டியது 4,5,6 நாட்கள் தான்.

முதல் மூன்று நாட்கள்ல , உடல் உஷ்ணத்தால உடம்புல இருக்குற நீர்ச்சத்து குறையுது ... நா வரண்டு போறதும் , சிறுநீர் சரியா போகாம இருக்குறது , இதெல்லாம் முதல் மூன்று நாட்கள் இருக்கும்.

ஆபத்தான கட்டம்

அடுத்த மூன்று நாட்கள் தான் நமக்கு போர் காலம்... ஆபத்தான கட்டம். இப்போது தான் ரத்த கசிவு நடக்க வாய்ப்பு இருக்கிறது. ரத்த கசிவு வெளியே பல்லில் ஈறுகளில் இருந்து வெளியேறலாம். மலம் கருப்பாக வெளியேறுவது இதெல்லாம் இந்த 4, 5, 6 நாட்களில் தான் நடக்கும். வயிற்று வலி இருக்கலாம்.

பெரும்பாலும் குழந்தைகளை காய்ச்சல் குணமாகி விட்டது என்று பள்ளிக்கு இந்த மூன்று நாட்களில் அனுப்பி விட்டு காலந்தாழ்த்துவது நடக்கிறது. கால் பாதமும் உள்ளங்கையும் சில்லென்று குளிர்ந்தால், குழந்தை முன்பை விட மிக சோர்வாக இருந்தால், சிறுநீர் சரியாக கழிக்காமல் இருந்தால், வயிற்று வலி என்று கூறினால், கருப்பாக மலம் கழித்தால், பல் ஈறுகளில் ரத்தம் கசிந்தால் உடனே அலர்ட் ஆக வேண்டும்.

டெங்கு காய்ச்சலை சரியாக கண்டறிவது எப்படி?

ரத்த பரிசோதனைகளில் முதல் மூன்று நாட்கள் எந்த பாதிப்பும் வெளியே தெரியாது. ஆனால் 4 ஆம் நாளின் தொடக்கத்தில் இருந்து தட்டணுக்கள் சரிவதைக் கண்டுபிடிக்கலாம், 5 ஆம் நாளும் 6 ஆம் நாளும் அதனினும் குறைந்து பிறகு மீளும். ஆகவே டெங்குவை தெரிஞ்சுக்க ஈசியான மூணு ரூல்ஸ்.

ரூல் நம்பர் 1

டெங்கு ஜுரம் அடிக்கிறது முதல் மூன்று நாள். நாலாவது நாள் சட்டுனு குறைஞ்சுச்சுனா அலர்ட் ஆயிடணும். அதுவும்,

* உள்ளங்கை பாதம் ஜில்லென்று ஆவது.
* அதிகமாக தாகம் எடுத்துக் கொண்டே இருப்பது..
* தலைசுற்றல்
* பிதற்றல் நிலை
* அடிக்கடி வாந்தி
* அதீத வயிற்று வலி
* கருப்பு நிறத்தில் மலம் செல்வது
* ஈர்ப்பகுதியில் ரத்தக் கசிவு
* வயிறு வீங்குதல் ஆகியவை அதன் அபாய அறிகுறிகளாகும்

ரூல் நம்பர் 2

* நீர்ச்சத்து தான் டெங்குவோட டார்கெட். சோ முடிஞ்ச அளவு தண்ணி, ஓ.ஆர்.எஸ் ORS ORAL REHYDRATION SOLUTION SALT, இளநீர், மோர் என்று குடிச்சுட்டே இருக்கணும்.
* சிறுநீரின் நிறம் அடர் மஞ்சளாகவோ சிறப்பாகவோ மாற விடக்கூடாது .
* கட்டாயம் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும். வெளியில் சுற்றக் கூடாது.

ரூல் நம்பர் 3

இதுதான் முக்கியமான விசயம். காய்ச்சல் அடிச்சா இந்த முக்கியமான முதல் மூனு நாள் கவுண்டர்ல மருந்து சாப்புட்டு வீணாக்கிட்டு, 4,5,6 ஆவது நாள் ரத்தக்கசிவு நடக்கும் போதும் கண்டுக்காம இருந்தா, எந்த ஆஸ்பத்திரில சேர்ந்தாலும் காப்பாத்துறது சிரமம். கட்டாயம் மருத்துவரோட சிகிச்சையில் இருக்கணும். தினசரி ரத்த தட்டணுக்கள் மற்றும் இதர அணுக்கள் குறித்த பரிசோதனை செய்து பார்க்கப்படும்.

டெங்கு ஜூரம் கண்டறியப்பட்ட நபரை கொசு வலைக்குள் வைத்து ஆறு நாட்கள் வரை (காய்ச்சல் விட்டு இரண்டு நாட்கள்) பராமரிக்க வேண்டும். காரணம் அவரைக் கடித்த கொசுக்கள் ஆரோக்கியமான நபர்களைக் குடிப்பதால் டெங்கு பரவும். இந்த மூணு ரூல்ஸயும் தெரிஞ்சிருந்தா டெங்கு போட்ற ஸ்கெட்ச்ல சிக்காம ஈசியா தப்பிச்சுடலாம் என்று டாக்டர் A.B.ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Tuesday, September 3, 2024, 12:29 [IST]
Desktop Bottom Promotion