இந்த பிரச்சனையை சந்திக்குறீங்களா? அப்ப அது உடம்புல நீர் கம்மியா இருக்குறதுக்கான எச்சரிக்கை அறிகுறி.. உஷார்..

Dehydration Symptoms In Tamil: கோடைக்கால வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. கோடைக்காலம் வந்துவிட்டாலே பெரும்பாலானோர் அதிகம் சந்திக்கக்கூடிய ஒரு பிரச்சனை நீரிழப்பு. இந்த நீரிழிப்பு உடலின் ஒவ்வொரு பகுதியையும் மோசமாக பாதிக்கும்.

குறிப்பாக நீரிழப்பால் குடல் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறது. நமது உடலிலேயே கழிவுகளை வெளியேற்ற உதவும் குடல் சிறப்பாக செயல்பட வேண்டுமானால், போதுமான நீர் உடலில் இருக்க வேண்டியது அவசியம்.

Dehydration Symptoms: Alarming Signs Of Dehydrated Intestines In Tamil

ஆனால் கோடையில் அதிகப்படியான வெயிலால் உடலில் உள்ள நீரின் அளவு அதிகளவிலான வியர்வையின் வழியாக வெளியேறிவிடுகிறது. இப்படி வியர்வையின் வழியே வெளியே நீரை ஈடுகட்ட வேண்டுமானால், நீரை அதிகம் பருக வேண்டும். இல்லாவிட்டால், நீரிழப்பினால் உடல் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு, பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

நீரிழப்பால் குடல் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதை எப்படி அறிவது என்று நீங்கள் கேட்கலாம். ஒருவரது உடலில் நீர் குறைவாக இருந்து, குடல் தனது தினசரி செயல்பாட்டை செய்ய முடியாமல் அவதிப்பட்டால், அது ஒருசில அறிகுறிகளை நமக்கு வெளிக்காட்டும். கீழே அந்த அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களிடமும் இந்த அறிகுறிகள் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள் மற்றும் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும் முயற்சியில் உடனே ஈடுபடுங்கள்.

அசிடிட்டி, அல்சர் மற்றும் வாய்வு தொல்லை

உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து, கால்சியம் மற்றும் மக்னீசியம் இல்லாமல் இருந்தால், அப்போது அல்சர், அசிடிட்டி போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஏனெனில் வயிற்றில் செரிமான அமிலத்தை உற்பத்தி செய்ய போதுமான நீர் இல்லை.

எனவே நீங்கள் கோடையில் அதிக அசிடிட்டி பிரச்சனையை சந்திக்கிறீர்கள் என்றால், உங்கள் உடலில் நீர்ச்சத்து குறைவாக உள்ளது, அதிக நீரை குடிக்க ஆரம்பிக்க வேண்டும் என்று அர்த்தம். ஒருவேளை அதை தவிர்த்தால், அது நிலைமையை மோசமாக்கிவிடும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல் ஒருவருக்கு ஏற்பட முதன்மையான மற்றும் முக்கிய காரணம் உடலில் போதுமான நீர் இல்லாதது தான். நீங்கள் இப்படி மலச்சிக்கல் பிரச்சனையை திடீரென்று அனுபவிக்க ஆரம்பித்தால், அப்போது உங்கள் உடலில் நீர் போதுமான அளவில் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால், பின் மலச்சிக்கல் பைல்ஸை உண்டாக்கிவிடும். எனவே இந்த விஷயத்தை சாதாரணமாக எடுக்காதீர்கள்.

வயிற்று உப்புசம் மற்றும் குமட்டல்

பொதுவாக அதிகமாக சாப்பிட்டால் வயிற்று உப்புசத்தை அனுபவிப்போம். நாம் உண்ணும் உணவுகள் செரிமான மண்டலத்தால் சரியாக ஜீரணிக்கப்படாமல் இருந்தால், அதன் விளைவாவும் வயிற்று உப்புசம் மற்றும் குமட்டலை சந்திக்க நேரிடும். ஒருவரது செரிமான செயல்முறை சிறப்பாக நடைபெற உடலில் போதுமான நீர் இருக்க வேண்டும். இந்த நீர் குறைவாக இருந்தால், செரிமான மண்டலத்தால் உணவுகளை ஜீரணிக்க முடியாமல் போகும்.

வாய் துர்நாற்றம்

உடலில் நீர்ச்சத்து மிகவும் குறைவாக இருந்தால், வாயில் எச்சிலின் உற்பத்தி குறைந்து, கடுமையான வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும். ஆகவே வெயில் காலத்தில் உங்கள் வாய் கடுமையான துர்நாற்றத்தில் இருந்தால், உங்கள் உடலில் நீர்ச்சத்து குறைவாக உள்ளது என்பதைப் புரிந்து அதிக நீரை குடிக்கத் தொடங்குங்கள்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை ஒருவர் கோடைக்காலத்தில் அனுபவித்தால், அதை சாதாரணமாக எடுக்காமல், உடனே உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இப்போது கோடையில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள எந்த மாதிரியான விஷயங்கள் செய்ய வேண்டும் என்பதைக் காண்போம்.

நீரைப் பருகவும்

உடல் நீரேற்றத்துடன் இருக்க வேண்டுமானால், நாள் முழுவதும் சீரான இடைவெளியில் நீரைப் பருக வேண்டும். நீங்கள் சரியான அளவில் நீரைக் குடிக்கிறீர்கள் என்றால், நீங்கள் கழிக்கும் சிறுநீர் தெளிவாக இருக்கும். ஒருவேளை போதுமான நீர் குடிக்காவிட்டால் சிறுநீர் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

நீர்ச்சத்துள்ள உணவுகள்

கோடைக்கால பழங்கள் பெரும்பாலும் நீர்ச்சத்துள்ளவையாகவே இருக்கும். அதுவும் தர்பூசணி, வெள்ளரிக்காய், முலாம் பழம் போன்றவற்றில் 90 சதவீத நீர்ச்சத்து நிறைந்துள்ளன. எனவே இந்த மாதிரியான பழங்களை கோடையில் அதிகம் தங்களின் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், நீரிழப்பைத் தடுத்து, உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளலாம்.

மது மற்றும் காப்ஃபைனுக்கு குட்-பை சொல்லவும்

உடலில் நீர்ச்சத்து போதுமான அளவில் இருக்க வேண்டுமானால், காபி, டீ போன்றவற்றை அதிகம் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேப் போல் மது அருந்தும் பழக்கம் இருந்தால், அதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை உடல் வறட்சியை இன்னும் மோசமாக்கி, பிரச்சனையை இன்னும் தீவிரமாக்கிவிடும்.

வெளியே செல்வதைத் தவிர்க்கவும்

கோடைக்காலத்தில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த காலகட்டத்தில் தான் சூரியக்கதிர்களின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும். ஒருவேளை வெளியே செல்வதாக இருந்தால், சூரியக்கதிர்கள் உடலை நேரடியாக தாக்காதவாறு போதுமான பாதுகாப்புடன் செல்ல வேண்டும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Monday, May 8, 2023, 12:11 [IST]
Desktop Bottom Promotion