இந்த 5 அறிகுறிகள் தெரிஞ்சா சாதாரணமா எடுத்துக்காதீங்க.. உங்களுக்கு குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு..

Colon Cancer: உலகில் உயிரைப் பறிக்கும் கொடிய நோய்களுள் ஒன்று தான் புற்றுநோய். இந்த புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. உலகளவில் புற்றுநோய் தொடர்பான இறப்புகளுக்கு குடல் புற்றுநோய் இரண்டாவது முக்கிய காரணமாகும். இந்த வகையான குடல் புற்றுநோய் 50 வயதிற்கு மேற்பட்டவர்களை தான் பெரும்பாலும் தாக்கும்.

ஆனால் தற்போது இளம் வயதினரிடையே இந்த வகை புற்றுநோய் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ஆய்வில் 1950-களில் பிறந்தவர்களுடன் ஒப்பிடுகையில் 1990-களில் பிறந்தவர்களுக்கு இருமடங்கு அதிகமாக குடல் புற்றுநோய் வருவதற்கான அபாயம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

Colon Cancer Rise Among Youngsters Top 5 Warning Signs You Should Not Ignore

குடல் புற்றுநோய்க்கு முக்கிய காரணம் மோசமான டயட், உடலுழைப்பு இல்லாமை, உடல் பருமன், புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற வாழ்க்கை முறை காரணிகள் தான். ஆரம்பத்திலேயே குடல் புற்றுநோயை கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால், உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

எனவே தான் இந்த குடல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவது மிகவும் அவசியம். ஒருவருக்கு குடல் புற்றுநோய் இருந்தால், அது ஒருசில எச்சரிக்கை அறிகுறிகளை ஆரம்பத்தில் வெளிக்காட்டும். அந்த முக்கியமான எச்சரிக்கை அறிகுறிகள் என்னவென்பதை இப்போது காண்போம்.

1. குடலியக்கத்தில் மாற்றம்

நீங்கள் மலம் கழிப்பதில் ஏதேனும் மாற்றத்தைக் சந்திக்கிறீர்களா? அப்படியானால் அதை புறக்கணிக்காதீர்கள். ஏனெனில் ஆய்வுகளில் குடல் புற்றுநோயாளிகள் தங்களின் குடலியக்கத்தில் மாற்றங்களை சந்தித்ததாக புகாரளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதுவும் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்றவற்றை தொடர்ந்து சில வாரங்களுக்கும் மேலாக காரணமின்றி சந்தித்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

2. இரத்தம் கலந்த மலம்

குடல் புற்றுநோயின் மிகவும் முக்கியமாக மற்றும் முதன்மையான எச்சரிக்கை அறிகுறி தான் ஆசனவாயில் இரத்தக்கசிவு ஏற்படுவது. எனவே நீங்கள் மலம் கழிக்கும் போது இரத்தமும் கலந்து வெளியேறினால், உடனே மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து பாருங்கள். அதுவும் மலத்தில் சிறு துளி இரத்தக்கசிவை கண்டாலும், உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். இப்படியான இரத்தக்கசிவு மூல நோயாலும் ஏற்படக்கூடும் என்பதால், இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

3. வயிற்று வலி

நிறைய பேர் வழக்கமாக சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் வயிற்று வலி. இதனாலோ என்னவோ, குடல் புற்றுநோயினால் வயிற்று வலி ஏற்பட்டாலும், சாதாரண வயிற்று வலியா அல்லது புற்றுநோயினால் ஏற்பட்ட வயிற்று வலியா என்பது தெரியாமல் விட்டுவிடுகின்றனர். எதுவாயினும் வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து கடுமையான வயிற்று வலியை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் 2024 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆய்வில் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளம் நோயாளிகளிடையே காணப்பட்ட மிகவும் பொதுவான அறிகுறியாக அடிவயிற்று வலி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த அறிகுறியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

4. விவரிக்க முடியாத எடை இழப்பு

எடை இழப்பு நிறைய ஆரோக்கிய பிரச்சனைகளின் முக்கிய அறிகுறியாகும். அதுவும் குடல் புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகளுள் இதுவும் ஒன்று. எனவே திடீரென்று எவ்வித முயற்சியும் எடுக்காமல் உடல் எடை குறைந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள்.

5. தொடர்ச்சியான உடல் சோர்வு

நீங்கள் தொடர்ந்து கடுமையான உடல் சோர்வை சந்தித்தால், அதை அசால்ட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அதுவும் இரவு நல்ல நிம்மதியான தூக்கத்தை மேற்கொண்ட பின்னரும் மிகுந்த உடல் சோர்வை சந்தித்தால், குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த அறிகுறியை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள். ஆரம்பத்திலேயே குடல் புற்றுநோயை கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால், நிச்சயம் அதிலிருந்து மீண்டு வர முடியும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Friday, August 29, 2025, 11:44 [IST]
Desktop Bottom Promotion