உங்களுக்கு இதய நோய் வரக்கூடாதா? அப்ப காலையில் எழுந்ததும் இந்த 3 விஷயங்களை செய்யாதீங்க.. கூறும் டாக்டர்..!

Heart Health Tips In Tamil: தற்போது உலகில் இதயம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இப்படி இதய பிரச்சனைகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கங்களும் தான். இது தவிர நமது ஒருசில பழக்கவழக்கங்களும் நமது இதய ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக காலையில் எழுந்ததும் மேற்கொள்ளும் ஒருசில பழக்கங்கள் இதயத்தின் செயல்பாட்டை பாதித்து, பிரச்சனைகள் வரத் தூண்டுகின்றன.

அப்படி எந்த மாதிரியான பழக்கங்கள் இதயத்தின் செயல்பாட்டை மோசமாக பாதிக்கும் என்று நீங்கள் கேட்கலாம். இந்த பழக்கங்களானது தற்போது பெரும்பாலானோரிடம் பொதுவாக உள்ளன. இந்த பழக்கங்களை தொடர்ச்சியாக வைத்திருப்பதன் காரணமாகவும் சமீப காலமாக இதய பிரச்சனைகள் மக்களிடையே அதிகரித்திருக்கலாம்.

Cardiologist Shares 3 Morning Habits That Hurt Heart

இதய நோய் நிபுணரான டாக்டர் அரவிந்த் துருவாசல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதயத்தை மோசமாக பாதிக்கும் மூன்று முக்கியமான மற்றும் மோசமான காலை பழக்கங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, "காலையில் யோசிக்காமல் செய்யும் இந்த விஷயங்களை, செய்ய வேண்டுமா என்று யோசித்தால், இதயம் உங்களுக்காக யோசிக்காமல் வேலை செய்யும்" என்று கூறினார்.

1. மொபைல் போனை பார்ப்பது

அதில் முதலாவது, "காலையில் எழுந்ததும் மொபைல் போனை செக் செய்வது. இப்படி செய்யும் போது உடலில் கார்டிசோல் அளவு அதிகரிக்கும். அதுவும் போனை தொடர்ந்து ஸ்க்ரோல் செய்யும் போது, மன அழுத்த ஹார்மோன்கள் இன்னும் அதிகரிக்கும் மற்றும் சிம்பதெடிக் டோனும் அதிகரிக்கும். இதன் மூலம் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். நாள் முழுவதும் ஒருவித மன அழுத்தத்தில் வைத்திருக்கும். எனவே இந்த பழக்கத்தை கைவிடுங்கள்" என்று டாக்டர் கூறினார்.

2. காபியை மட்டும் குடிப்பது

"இரண்டாவது, காலை உணவை தவிர்த்து, காபியை மட்டும் குடிப்பது. இப்படி குடிக்கும் போது காபியில் உள்ள காப்ஃபைன் அட்ரினலைன் என்னும் ஹார்மோன் அளவை அதிகரிக்கும். பின் சிறிது நேரம் கழித்து இரத்த சர்க்கரை அளவை குறைக்கும். பின்பு நிறைய பசி எடுக்கும். அப்போது பசியைப் போக்க மூளையானது ஜங்க் உணவுகளை சாப்பிடத் தூண்டும். அந்த நேரத்தில் பஜ்ஜி, சமோசா போன்றவற்றை சாப்பிட்டால் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் இதயம் தவியாக தவிக்கும். எனவே காலை உணவுக்கு புரோட்டீன், நார்ச்சத்து போன்றவை நிறைந்த உணவை அதிகம் உட்கொள்ளுங்கள்" என்று டாக்டர் கூறினார்.

3. படுக்கையில் இருந்து வேகமாக எழுவது

"மூன்றாவது படுக்கையில் இருந்து வேகமாக எழுவது. இது முக்கியமாக வயதானவர்களுக்கு பொருந்தும். இப்படி வேகமாக எழும் போது, கால்களில் இரத்த ஓட்டம் சட்டென்று அதிகரிக்கும், மூளைக்கு செல்லும் இரத்தத்தைக் குறைக்கும். இதனால் தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றை சந்திக்க நேரிடும். எனவே மெதுவாக எழுங்கள்" என்று டாக்டர் கூறினார்.

எனவே நண்பர்களே! இதுவரை உங்களிடம் இந்த பழக்கங்கள் இருந்தால், அவற்றை உடனே கைவிடுங்கள். இதனால் உங்கள் இதயம் ஆரோக்கியமாகவும் இருக்கும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமான மனநிலையுடனும் செயல்படலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Thursday, December 18, 2025, 12:29 [IST]
Desktop Bottom Promotion