கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக 9 முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி- பட்ஜெட்டில் அறிவிப்பு

Health Budget 2024: இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இவர் 6 ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சியின் கடைசி பட்ஜெட்.

இந்நிலையில் இந்த ஆண்டின் இடைக்கால பட்ஜெட் ஒவ்வொரு துறையிலும் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள பலரும் ஆவலாக இருந்த நிலையில், ஆரோக்கியம் குறித்த பட்ஜெட்டில் 9 முதல் 14 வயது சிறுமிகளுக்கு எதிர்காலத்தில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வராமல் இருக்க தடுப்பூசி போடுவதை அரசு ஊக்குவிக்கும் என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Budget 2024: Cervical Cancer Vaccination For Girls Aged 9-14 Years

பெண்களைத் தாக்கும் ஒரு பொதுவான புற்றுநோய் தான் இந்த கர்ப்பப்பை வாய் புற்றுநோய. இது உலகளவில் பெண்களைத் தாக்கும் 4 ஆவது மிகவும் பொதுவான புற்றுநோயாகும். இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் இந்த கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக இந்த புற்றுநோயால் 15-44 வயதிற்குட்பட்ட பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த கொடிய நோயின் தாக்கத்தைத் தடுக்க நடவடிக்கையை எடுக்கும் வகையில் இந்திய அரசு 9 முதல் 14 வயது சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியைப் போட ஊக்குவிக்கிறது.

கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் HPV தடுப்பூசி சோதனைகள் ஏற்கனவே முடிவடைந்துவிட்டன. 2010 ஆம் ஆண்டு சோதனையின் போது சில சிறுமிகள் இறந்ததாக வெளியான அறிக்கையால் இந்த சோதனை ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான காரணங்கள்

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான முதன்மையான காரணம் மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) ஆகும். இந்த வைரஸ் உடலுறவு கொள்வதன் மூலம் பரவக்கூடிய ஒரு பொதுவான வைரஸ். பெரும்பாலான HPV தொற்றுகள் பெரிய அறிகுறிகளை ஏற்படுத்தாது. ஆனால் சில விகாரங்கள் கருப்பையின் அசாதாரண செல் வளர்ச்சிக்கு வழிவகுத்துவிடும். இதை கவனித்து சிகிச்சை மேற்கொள்ளாமல் விட்டுவிட்டால், பின் அது புற்றுநோயாக மாறிவிடும்.

இந்த கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க சிறந்த வழி HPV தடுப்பூசியைப் போடுவது தான். இந்த தடுப்பூசியை வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு முன்னரே போட்டுக் கொள்ள வேண்டும். அதனால் தான் 9-14 வயது சிறுமிகளுக்கு இந்த தடுப்பூசியைப் போட பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த பட்ஜெட்டில் 9-14 வயதுடைய சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசியைப் போட ஊக்குவிக்கும் அரசின் திட்டமானது, 2030 ஆம் ஆண்டிற்குள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை முற்றிலும் ஒழிக்கும் இலக்கின் முதல் படியாகும். அதற்கு இந்த தடுப்பூசியை விலைக் குறைவில் கிடைக்கச் செய்வதன் மூலம், நிறைய பெண் குழந்தைகள் இந்த கொடிய புற்றுநோயில் இருந்து பாதுகாப்பாக இருப்பார்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Thursday, February 1, 2024, 15:00 [IST]
Desktop Bottom Promotion