சருமத்தை செழுமையாக்கும் சீரகக் குடிநீர்!

By Mayura Akilan

Skin Care Tips For Summer
வெளியில் தலைகாட்ட முடியாத அளவிற்கு தகிக்கிறது வெப்பம். கோடை தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சருமத்தை பாதுகாக்க சீரகத்தை காய்ச்சி குடிக்கலாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர் அழகியல் நிபுணர்கள். இதனால் சருமம் மங்காமல் செழுமையடையும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

சருமப் பளபளப்பு

கோடை காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது சருமம்தான். எனவே சருமத்தை பாதுகாக்க பழச்சாறு, காய்கறிச் சாறு, சூப் மற்றும் தண்ணீர் அதிகம் பருகவேண்டும். இதனால் தோல் வறட்சி தடுக்கப்படுவதோடு
உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் சருமம் பளபளப்பாக மாறும். கோடை காலத்தில் வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்வது சரும நலனை பாதுகாக்கும். தயிர் சாப்பிடுவதை விட மோராக சாப்பிடுவது நல்லது.

கரும்புள்ளிகள் மறைய

கோடையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளி பழச்சாறை முகத்தில் தடவவும்.எண்ணை பசை சருமத்தினரை முகப் பருக்கள் பாடாய் படுத்தும். எனவே எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக் கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகும். மேலும் முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது.

அடிக்கடி முகம் கழுவுங்க

ஒவ்வொரு நாளும் நான்கு முறையாவது நல்ல சோப்பினால் தேய்த்து முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது. இதனால் முகத்தில் வியர்வைத் துவாரங்கள் திறக்கபடுவதோடு சருமத்தில் படியும் அழுக்குகள் அகற்றபடும். குறிப்பாக இரவு படுக்க போகும் முன்பு, சோப்பு போட்டு முகத்தை கழுவுவது அவசியம். தினமும் இரண்டு வேளை குளிக்கவும்.

காரமா சாப்பிட வேண்டாம்

வெயிலில் வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடிக்க வேண்டும். உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். கோடை காலத்தில் எண்ணை பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும். சுத்தமான குடிநீரையும் அதிகமாக குடிக்கலாம்.

பெண்களை வாட்டும் வெயில்

கோடை காலத்தில் பெண்களுக்கு அதிகமான பாதிப்பு ஏற்படும். பெரும்பாலும் உடம்பில் வெயில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தலைக்கு குடையும், கண்ணுக்கு கண்ணாடியும், காலுக்கு செருப்பும் அவசியமாகும்.

கழுத்தின் முன்பாகம், அக்குள், தொடை இடுக்கு பகுதிகள், இடுப்பு, மார்பின் அடிப்பாகம், முதுகுபகுதி போன்ற இடங்களில் பெண்களுக்கு அதிகம் வியர்த்து, வேர்க்குரு தோன்றும். இதற்கு சாதம் வடித்த தண்ணீரை அந்த இடங்களில் தடவினால் கொஞ்சம் கொஞ்சமாக மறையும். பாத வெடிப்பு அதிகமாக ஏற்படுவதை தடுக்க வெங்காயத்தை வதக்கி, பின்னர் அதை விழுதுவாக அரைத்து பாதங்களில் தடவி வந்தால் பாத வெடிப்பு படிபடியாக மறையும்.

அதிகமான அளவு வியர்வை வெளியேறுவதைத் தடுத்தால் வேர்க்குருவைக் கட்டுபடுத்தலாம். அதிகமாக வியர்க்கும்போது குளித்தால் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. வியர்வை நின்ற பிறகே குளிக்க வேண்டும். அதிகமாக வியர்க்கும்போது பவுடர் பூச வேண்டாம். நன்றாக கழுவி துடைத்த பிறகே பவுடரை பூச வேண்டும்.

வறண்ட சருமத்தினருக்கு

வறண்ட சருமத்தினர் கோடை காலத்தை எண்ணி அதிகம் கவலை கொள்ள வேண்டாம். ஏனென்றால் கோடை காலத்தில் அதிகம் வியர்க்கும். இதனால் வறண்ட சருமத்தைக் கொண்டவர்களுக்கு நன்மையே தவிர, தீமை இல்லை. ஆனால் வியர்க்கும்போது உடலில் அசுத்தமான துகள்கள் ஒட்டினால் தோல் அலர்ஜி ஏற்படும். அடிக்கடி உடம்பை அடிக்கடி கழுவவேண்டும். பாக்டீரியாக்களை ஒழிக்கும் சோப்பை உடலில் தேய்த்துக் குளிக்க வேண்டும். அதிகமாக உணர்ச்சி வசப்பட வேண்டாம். எக்காரணம் கொண்டும் சிறுநீரை அடக்க வேண்டாம்.

வாழைத்தண்டு உணவு

கோடை காலத்தில் எல்லோருக்குமே உடலில் வியர்வை நாற்றம் ஏற்படும். அதற்கு நிறைய தண்ணீர் குடிக்கலாம். கீரைகள், ஆரஞ்சு பழம், அன்னாசி பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடுங்கள். இவற்றிலுள்ள நார்ச்சத்து திரவ உற்பத்தியைக் குறைக்கும். எரிச்சல் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபட நீர்ச்சத்து அதிகம் கொண்ட வாழைத்தண்டு, கீரை போன்றவற்றை உண்ணுவது உடம்புக்கு நல்லது.

Story first published: Wednesday, February 29, 2012, 9:44 [IST]
Desktop Bottom Promotion