மேனி எழிலுக்கு பசும்பால் குளியல்.....!

By Mayura Akilan

Milk Bath
மேனி எழிலை பாதுகாக்க ரசாயனப்பொருட்கள் கலந்த அழகு சாதனங்களை உபயோகிப்பதைக் காட்டிலும் இயற்கையிலேயே கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி சருமத்தினையும், அழகையும் பாதுகாக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். அது அழகை பாதுகாப்பதோடு சருமத்திற்கும் ஆரோக்கியத்தை தரும்.

பீட்ரூட் சாறு

பீட்ரூட் அரைத்து சாறு எடுத்து அதனை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் காயவைக்கவும். பின்னர் தண்ணீ­ரால் கழுவி துடைத்தால் முகம் பொலிவு பெறும்.கொதிக்க வைத்த கேரட் சாறினை குளிரவைத்து பின்னர் முகத்திலும், உடம்பிலும் தேய்த்துக் குளிக்க, முகமும், தேகமும் பளபளப்பாகும்.

பசும்பால் குளியல்

கோடை காலத்தில் சருமம் உலர்ந்து விடும். இதனை தவிர்க்கவும் பளபளப்புடன் திகழவும், தினமும் சிறிதளவு பசும்பாலை உடல் முழுக்க தேய்த்து விட்டு பின்பு குளிக்கலாம். ( கிளியோபாட்ரா கழுதைப் பாலில் குளித்தாராம்). பாலில் எலுமிச்சை சாறு கலந்து உடம்பில் தேய்த்துக் குளிக்க, முகமும் தேகமும் பளிச்சிடும்.

வெந்நீரைவிட சாதாரண தண்ணீ­ரில் குளிப்பது நல்லது. குளித்தபின் துணியால் அழுத்தித் துடைக்காமல் மென்மையாக ஒற்றி துடைப்பது சருமத்திற்கு பாதுபாப்பு.

சந்தனம் ஆலிவ் எண்ணெய்

ரசாயனக் கலவையும், கொழுப்பு அமிலங்களும் நிறைந்த சோப்பு தேய்த்து குளிப்பதை விட வீட்டிலேயே கிடைக்கும் மஞ்சள்தூளும், சந்தனத்தூளும் எடுத்து ஆலிவ் எண்ணையில் கலந்து உடம்பில் பூசி ஊறவைக்கவும். பின்னர் 10 நிமிடம் கழித்து குளிக்க, முகமும், தேகமும் மினுமினுக்கும்.

மஞ்சள்தூள் மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பொலிவுடன் பிரகாசிக்கும். பச்சைப் பயிறு மாவு மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பளபளப்பாகும்.

புத்துணர்ச்சி கிடைக்க

வெயிலில் நடப்பது மேனி அழகைக் கெடுக்கும். இதைத் தடுக்க வெள்ளரிச்சாறும், தக்காளிச்சாறும் சமஅளவில் கலந்து உடம்பில் தேய்த்துக் குளித்தால் தோல் நிறம் மங்காமல் மின்னிப் பிரகாசிக்கும்.

ரோஜா இதழ்களை கூழாக அரைத்து அத்துடன் பாலாடை சேர்த்து அந்தக் கலவையை கண், இமை, உதடு தவிர்த்து மற்ற இடங்களில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து குளிக்க உடம்பு புதுப்பொலிவு பெறும். தயிரும், கோதுமை மாவும் சேர்ந்த கலவையை உடம்பில் தேய்த்து 5 நிமிடம் கழித்து குளிக்க தேகம் புத்துணர்ச்சி பெறும்.

சத்தான உணவுகள்

வெயில்காலத்தில் சோடியம் சத்துக் குறைந்தால் தோலில் சுருக்கம் ஏற்படும். சோடியம் சத்து மிகுந்த வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் தோல் சுருக்கம் விழாமல் பாதுகாக்கலாம். இது உடல் சூட்டையும் தணித்து குளுமையும் தரும்.

கோடையில் சிலிகான் சத்து குறையும்போது உடலில் வேனற்கட்டி, வெடிப்பு, சிரங்கு போன்ற பாதிப்புகள் தோன்றும். இதைத் தவிர்க்க முளை கட்டிய தானியங்கள், தக்காளி, பார்லி மற்றும் ஸ்ட்ராபெர்ரி, அத்திப்பழ வகைகளைச் சாப்பிட்டுவர வேண்டும்.

பச்சையம் சத்து நிறைந்த கோதுமைக் கஞ்சி, பச்சைக்கீரை, காய்கறி வகைகளைச் சாப்பிட்டு வர, தோல் வெடிப்புகள் ஏற்படாது. சருமம் நிறம் மங்காமல் செழுமையுடன் இருக்கும். புளோரின் சத்து நிறைந்த ஆட்டுப்பால், பாலாடைக்கட்டி, கேரட், வெள்ளரி, முட்டைக்கோஸ் போன்ற பச்சை காய்கறிகளைச் சாப்பிடுவதால் சருமம் வனப்புடன் திகழும். தினந்தோறும் குறைந்தது 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை தண்­ணீர் பருகுங்கள் சருமத்திற்குநல்லது.

Story first published: Thursday, March 1, 2012, 10:32 [IST]
Desktop Bottom Promotion