தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல முடி தான் டேமேஜ் ஆகும்! உஷார்..

Hair Oiling Mistakes To Avoid: தலைமுடியை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு தலைமுடி பராமரிப்பு வழக்கம் தான் எண்ணெய் தேய்ப்பது. இப்படி எண்ணெய் தேய்ப்பதன் மூலம், வறண்ட தலைமுடி மென்மையாவதோடு, முடியில் சிக்கு ஏதும் இல்லாமல் இருக்கும். அதுவும் தலைமுடிக்கு பயன்படுத்தும் எண்ணெயை எப்படி கவனமாக தேர்ந்தெடுக்கிறோமோ, அதேப் போல் தலைமுடிக்கு எண்ணெயை பயன்படுத்தும் முறையிலும் கவனம் செலுத்த வேண்டும்.

5 Mistakes To Avoid While Oiling Your Hair

ஏனெனில் சிலர் தலைக்கு எண்ணெயை பயன்படுத்தும் போது நிறைய தவறுகளை செய்கிறார்கள். உதாரணமாக, அதிகளவில் எண்ணெயை தடவுவது, ஸ்கால்ப்பில் எண்ணெய் ஊடுருவ வேண்டுமென்று கடுமையாக தேய்ப்பது போன்ற தவறுகளை செய்து வருகிறார்கள். இப்படி செய்யும் தவறுகளானது தலைமுடிக்கு நன்மையை வழங்குவதை விட தீமையையே உண்டாக்கும். இப்போது தலைமுடிக்கு எண்ணெய் பயன்படுத்தும் போது எந்த மாதிரியான தவறுகளை ஒருவர் செய்யக்கூடாது என்பது குறித்து காண்போம்.

1. சிக்கு எடுக்காமல் எண்ணெய் தடவுவது

தலைமுடியில் சிக்கு அதிகமாக இருக்கும் போது எண்ணெய் தடவினால், அது தலைமுடி அதிகம் உடைவதற்கு வழிவகுக்கும். எனவே முடிக்கு எண்ணெய் பயன்படுத்தும் முன் தலைமுடியில் உள்ள சிக்கை கைகளால் நீக்க வேண்டும். அதுவும் அப்படி சிக்கு இருக்கும் போது, வலுக்கட்டாயமாக சீப்பால் இழுப்பதைத் தவிர்த்து, கைவிரல்களால் மெதுவாக சிக்கை அகற்ற வேண்டும்.

2. கடினமாக ஸ்கால்ப்பை தேய்ப்பது

நிறைய பேர் ஆயில் மசாஜ் செய்யும் போது எண்ணெய் ஸ்கால்ப்பில் ஊடுருவ வேண்டுமென கடினமாக ஸ்கால்ப்பை அழுத்தி மசாஜ் செய்வார்கள். ஆனால் இப்படி ஸ்கால்ப்பில் அதிக அழுத்தம் கொடுப்பதால் எவ்வித நன்மையும் கிடைக்காது. மாறாக ஸ்கால்ப்பில் தான் சேதம் ஏற்படும். எனவே தலையில் எண்ணெயை நேரடியாக ஊற்றுவதற்கு பதிலாக, விரல் நுனிகளில் எண்ணெயை தொட்டு, ஸ்கால்ப்பின் வெவ்வேறு பகுதியில் தடவி, சில நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யலாம்.

3. அளவுக்கு அதிகமாக எண்ணெய் தேய்ப்பது

தலைமுடிக்கு எண்ணெயை அதிகமாக வைப்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. தலையில் எண்ணெயை அதிகமாக தேய்த்தால், ஸ்கால்ப்பில் தூசிகளும், அழுக்குகளும் அதிகம் சேர்வதோடு, தலைமுடியும் பிசுபிசுவென்று இருக்கும். இந்த பிசுபிசுப்புடன், அழுக்குகளும் ஸ்காப்பில் அப்படியே நீடித்திருக்கும் போது, அது ஒருகட்டத்தில் பொடுகு தொல்லையை ஏற்படுத்தி, தலைமுடி உதிர்வுக்கு வழிவகுத்துவிடும். எனவே எப்போதும் தலைக்கு அதிக எண்ணெயை தடவாதீர்கள்.

4. இரவு முழுவதும் எண்ணெயை தலையில் ஊற வைப்பது

எண்ணெயில் உள்ள சத்துக்கள் தலைமுடிக்கு கிடைக்க அந்த எண்ணெயை இரவு முழுவதும் தலைமுடியில் ஊற வைக்க வேண்டும் என்ற அவசியம் ஏதும் இல்லை. சொல்லப்போனால் தலைக்கு எண்ணெய் தடவி 1 மணிநேரம் ஊற வைத்தாலே போதுமானது. அதுவும் பொடுகு, எண்ணெய் பசை ஸ்கால்ப் கொண்டவர்கள் இரவு முழுவதும் தலைமுடியில் எண்ணெய் தடவி ஊற வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிறிது நேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலசினாலே போதும்.

5. மிகவும் சூடான எண்ணெயை பயன்படுத்துவது

தலைமுடிக்கு மிகவும் சூடான எண்ணெயைத் தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் ஏதும் இல்லை. எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி ஸ்கால்ப்பில் தடவி, மென்மையாக மசாஜ் செய்தாலே போதும். மிகவும் சூடான எண்ணெயை ஸ்கால்ப்பில் பயன்படுத்தும் போது, அது மயிர்கால்களில் சேதத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே மிகவும் சூடான எண்ணெயை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Tuesday, September 15, 2026, 18:56 [IST]
Desktop Bottom Promotion