Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
Father's Day 2022: அப்பா-மகன் உறவை வலுப்படுத்துவது எப்படி? இதோ சில வழிகள்!
ஒரு மகனை சிறந்த முறையில் வளர்ப்பது என்பது அனைத்து அப்பாக்களின் மிக பெரிய கடமையாகும். இது தவறும் பட்சத்தில் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடலாம்.
பெரும்பாலும், ஒவ்வொரு வருடமும் அன்னையர் தினத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் தந்தையர் தினத்திற்கு கொடுக்கப்படுவதில்லை. அம்மாக்களின் தியாகம், அன்புக்கு முன்பு அப்பாக்களின் அன்பு தோற்றுவிட்டது என்பது இதற்கு அர்த்தமில்லை. தாயிற் சிறந்த கோவிலும் இல்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை. இது பெரும்பாலான குடும்பங்களில் நிலவும் ஒரு விஷயம் தான். அப்பா-மகன் இருவருக்கும் இடையே அவ்வளவாக பேச்சு வார்த்தை என்பது இருக்காது. அம்மாக்களின் மூலமாக தான் அனைத்து தகவல்களும், அனுமதிக்கான விண்ணப்பங்களும் அப்பாக்களை சென்றடையும். இத்தகைய சூழல் ஒரு ஆரோக்கியமற்ற சூழல் என்றே கூற வேண்டும். அம்மா மற்றும் மகனுக்கு இடையே இருக்கும் பிணைப்பு அப்பா-மகனுக்கு இருப்பதில்லை. ஆனால், அந்த பிணைப்பு அப்பா-மகளுக்கு அதிகமாகவே இருக்கும்.

ஒரு மகனை சிறந்த முறையில் வளர்ப்பது என்பது அனைத்து அப்பாக்களின் மிக பெரிய கடமையாகும். இது தவறும் பட்சத்தில் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடலாம். ஒவ்வொரு வயதிலும் ஆண்மகன்கள் புது பரிமாணத்தை அடைவர். ஒரு தந்தை, அத்தகைய சூழலை கடந்து வந்தவர் என்பதால் ஒவ்வொரு சூழ்நிலையையும் எவ்வாறு கையாள வேண்டும் என்பதை தன் மகனுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அப்பாக்களின் கடமை மகனை சிறப்பாக வளர்ப்பதிலும், மகன்களின் கடமை அப்பாக்களை சிறந்த முறையில் மதிப்பதிலும் தான் அடங்கியுள்ளது.
அப்பா-மகன் இடையேயான உறவை வலுப்படுத்துவது என்பது அவ்வளவு பெரிய கடினமான விஷயம் ஒன்றுமல்ல. இருவருக்கும் இடையேயான உறவை மேம்படுத்த உதவும் சில சுவாரஸ்மான குறிப்புகள் குறித்து தான் இப்போது பார்க்க போகிறோம். அப்படி ஒன்றும் கால தாமதம் ஆகிவிடவில்லை. எனவே, இந்த தந்தை தினம் முதல், இதை படித்துவிட்டாது தங்களது மகனிடம் மறைத்து வைத்திருந்த அன்பை வெளிகொணர முன்வருவீர்கள் என்று நம்புகின்றோம்...

எத்தகைய சூழலிலும் உடனிருப்பது
எப்படிப்பட்ட வேலையாக வேண்டுமானாலும் இருக்கட்டும். உங்கள் குடும்பத்திற்காக தான் நீங்கள் கடினமாக உழைக்கின்றீர்கள். இல்லை என்று கூறவில்லை. இருப்பினும், உங்களது மகனுடன் எல்லா தருணங்களிலும் உடனிருக்க வேண்டியது அவசியம். அவர்கள் அதை வாய்விட்டு கேட்கவில்லை என்றாலும், அவர்களது மனதில் அப்படி ஒரு ஆசை இருக்கத்தான் செய்யும். எனவே, பள்ளி விளையாட்டு போட்டி ஆகட்டும், பெற்றோர் ஆசிரியர் சந்திப்பாகட்டும் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நீங்கள் அனைத்து தருணங்களிலும் உடனிருக்க மறவாதீர்கள்.
அதே சமயம், பருவ நிலையில் இருக்கும் அனைத்து மகன்களும் தங்களது அப்பாக்களின் சூழ்நிலையை புரிந்து நடந்து கொள்ள வேண்டியதும் அவசியம். எந்தவொரு நிலையில், அப்பா வேண்டுமென்றே எதையும் செய்துவிட வில்லை என்பதை புரிந்து கொள்வதோடு, அவரால் நிஜமாகவே முடியவில்லை என்பதை உணர வேண்டும். அப்பா மட்டுமே மகனோடு இருக்க வேண்டுமென்பதில்லை, மகன்களும் அப்பாக்களுடன் இருக்க வேண்டியது முக்கியம். குறிப்பாக வயதான காலத்தில் அவர்களுக்கு உங்கள் துணை தேவை என்பதை மட்டும் உணர்ந்தால் போதும்.

பொதுவான விஷயம்
நீங்களும் உங்கள் மகனும் வெவ்வேறு துருவங்களாக இருக்கலாம். உதாரணத்திற்கு, உங்களுக்கு விளையாட்டில் ஈடுபாடு இருக்கலாம், உங்கள் மகன் புத்தகப் புழுவாக இருக்கலாம். அப்படி சூழ்நிலையில், உங்கள் மகனுக்கு ஈடுபாடு இல்லாத விஷயத்தை செய்ய சொல்லி வற்புறுத்துவது பெரிய பிரிவினையை ஏற்படுத்தக்கூடும். எனவே, இருவருக்கும் விருப்பமான செயல் எதாவது இருக்கலாம். அதனை கண்டறிந்து அதில் அதிக நேரத்தை செலவிட முன்வாருங்கள். மேலும், மகனுக்கு பிடித்த விஷயத்தை தெரிந்து கொண்டு அதில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்துவது உறவை மேலும் வலுப்படுத்திடும்.

அனைத்து செயல்களிலும் ஈடுபாடு காட்டுதல்
உங்கள் மகனது பள்ளி வேலையாகட்டும், நடனப் போட்டியாகட்டும், விளையாட்டு போட்டியாகட்டும், அனைத்து விதமான செயல்களிலும் உங்களுக்கு தெரிந்தவற்றை சொல்லிக் கொடுத்து, ஊக்கப்படுத்துங்கள். தெரியாதவற்றை அவர்களிடம் கேட்டு கற்றுக் கொண்டு அவர்களை சந்தோஷப்படுத்துங்கள். வாழ்வின் அனைத்து விதமான கஷ்டங்களிலும் உடனிருப்பேன் என்பதை உணரச் செய்ய மறந்துவிடாதீர்கள். ஒவ்வொரு மகனுக்கும் அப்பா இருக்கிறார், எனவே தைரியாமக இருக்கலாம் என்ற ஒரு எண்ணம் இருக்க வேண்டியது அவசியம். எனவே, அவற்றை அவர்களுக்கு கொடுக்க வேண்டியது உங்களது கடமை.

சொல்வதை முழுமையாக கேட்பது
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மகன் வளர்ந்துவிட்டான் என்பதை ஒரு தந்தையானவர் உணர்ந்து செயல்பட வேண்டும். சிறு வயதில் நாம் சொன்னதை கேட்டவன் எப்போதும் கேட்பான் என்று கூறி விட முடியாது. வளரும் குழந்தை தனக்கான பேச்சுரிமையை எதிர்ப்பார்க்க தானே செய்வான். எனவே, மகன் கூறுவது என்ன? சூழ்நிலை ஏற்ற போல் சிந்திக்கிறானா? பிரச்சனையை சிறந்து கையாளுகிறானா? என அனைத்தையும் ஒரு தந்தை அறிந்திருக்க வேண்டியது அவசியம். முதலில், மகன் கூற வருவதை முழுவதுமாக கேட்க வேண்டும். மகன் பேசுவதை தடுத்து, நான் பேசுவதை மட்டும் கேள் என்று நடந்து கொள்ளும் செயல் உறவில் மிகப் பெரிய விரிசலை ஏற்படுத்தக்கூடும்.
அதேப்போல தான், ஒரு மகன் தந்தையின் மனபான்மையை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். எந்த கோணத்தில் அப்பா யோசிப்பார், நமது நல்லதை மட்டும் தான் அப்பா யோசிப்பார் போன்ற விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். கூற வருவதை அப்பாவிற்கு பொறுமையாக புரிய வைக்க வேண்டியதும் ஒவ்வொரு மகனின் கடமை தான். பல்வேறு சூழல்கள் அப்பாக்களை கோபமடைய செய்யலாம். அதுப்போன்ற தருணங்கள், மகன்கள் பொறுமையை கையாண்டு சூழலை சுமூகமாக்க முயற்சிக்க வேண்டும். அப்பா சொல்வதையும் காது கொடுத்து கேட்க மறவாதீர்கள்.

பேச தயக்கம் கொள்ள வேண்டாம்
காதல், காமம் போன்றவை சில குறிப்பிட்ட வயதில் அனைத்து டீனேஜ் மகன்களும் சில தடுமாற்றங்கள் சந்திக்க நேரிடும். அதுபோன்ற, தருணங்களில், ஒவ்வொரு தந்தையும் தன் மகனுடன் நேரம் ஒதுக்க வேண்டியது அவசியம். இதுபோன்ற விஷயங்களில் ஏற்படக்கூடிய சந்தேகங்களை போக்கக்கூடியவர், தந்தையாக இருக்கும் பட்சத்தில் அங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்காது. மகனின் மனநிலையை புரிந்து கொண்டு இதுபோன்ற விஷயங்களை பேச எக்காரணம் கொண்டும் தயக்கம் கொள்ள வேண்டாம். பக்குவமான பேச்சும், புரிந்துணர்வும் உங்கள் மகனை நல்வழிப்படுத்த உதவக்கூடிய பெரும் ஆயுதம் என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் இவற்றை மறந்தால், அவர்கள் ஆரோக்கியமற்ற வேறு மோசமான வழிகளில் தங்களது கேள்விகளுக்கு விடை தேட ஆரம்பித்து விடுவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நேரம் ஒதுக்குங்கள்
எவ்வளவு பிஸியாக வேண்டுமானால் நீங்கள் இருக்கலாம். ஆனால், உங்கள் குழந்தைகளுடன் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் எதிர்காலத்தில் நினைத்து பார்க்க உதவக்கூடிய பொன்னான நினைவுகள் என்பதை மறவாதீர். ஒரு உறவை மிகவும் வலிமையானதாக மாற்றுவதில், இது தான் முக்கிய இடத்தை பிடிக்கிறது. குழந்தைகளுடன் நீங்கள் செலவிடும் நேரம், அவர்களை மகிழ்ச்சியாக உணரச் செய்வதோடு, பாதுப்பாகவும் உணரச் செய்திடும். மனம் விட்டு பேசுவது தொடங்கி, பிரச்சனைகளுக்கு தீர்வு முதல் கொண்டு அனைத்தும் நேரம் ஒதுக்கினால் மட்டுமே கிடைத்திட கூடியவை. இரவு உணவிற்கு பிறகு சின்ன வாக்கிங், நாள் முழுவதும் என்ன நடந்தது என்று பகிர்ந்து கொள்வது அனைத்துமே வாழ்வை சுவாரஸ்யமாக்க கூடியவை.

ஒவ்வொரு சாதனையையும் கொண்டாடுங்கள்
சிறு விஷயங்கள் தொடங்கி பெரிய விஷயங்கள் வரை அனைத்துமே சிறு கொண்டாட்டத்தில் முடிவது தான் இயல்பு. அதிலும் ஒவ்வொரு மகனும் தந்தை மகனை பெருமைப்படுத்த வேண்டுமென்றே நினைப்பர். அப்படி நினைத்து அவர்கள் செய்யும் சிறு விஷயங்களை கூட நீங்கள் பாராட்டி பாருங்கள். அவர்களை சந்தோஷ கடலில் அது ஆழ்த்தி விடும். பள்ளியில் முதல் மதிப்பெண் தொடங்கி, பட்டம் பெறுதல் வரை அனைத்தையும் கொண்டாடி பாருங்கள். அவர்களுக்கு அடுத்தக்கட்ட முயற்சியில் முழு உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள். யாரும் எதையும் வாய்விட்டு கேட்பதில்லை. ஆனால், மகனை பாராட்டுவதை விட உங்களுக்கு வேறு என்ன வேலை இருந்திட போகிறது. இந்த வாழ்க்கையே அவர்களுக்கானது தானே.

அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
ஒவ்வொரு அப்பாக்களும், மகனாக இருந்து தானே அப்பா எனும் ஸ்தானத்தை அடைந்திருப்பீர்கள். எனவே, உங்கள் வாழ்வில் ஒவ்வொரு சூழ்நிலையில் நீங்கள் பெற்ற அனுபவத்தை உங்கள் மகனோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அது அவர்களை பல்வேறு சவால்களை எதிர்கொள்ள உதவிடும். எனவே, எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம், உங்கள் வாழ்வில் நடந்த எல்லாவற்றையும் உங்கள் மகனோடு பகிர்ந்து கொண்டு, அவர்களை சிறந்த மனிதனாக்க முயற்சியுங்கள். நீங்கள் கூறும் சிறு விஷயம் கூட அவர்களுக்கு பெரிய இக்கட்டான சூழலில் உதவிடக்கூடும்.
அப்பா மற்றும் மகன் யாராக இருந்தாலும், வாழ்வில் நிறைய விஷயங்களை கையாள வேண்டியது இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒருவரோடு ஒருவர் நேரம் செலவிட்டு, மனம் விட்டு பேச வேண்டும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் தயங்காமல் கூறினால் தான் தீர்வு கிடைக்கும். அப்பா-மகன் உறவிற்கு இடையே ஏதேனும் இடையூறு இருந்தால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் ஏதேனும் ஒன்று தீர்வை நல்கிடக்கூடும். எனவே, இந்த தந்தையினர் தினத்தில் அனைத்தையும் சிறப்பாக மாற்றிட முயற்சியுங்கள்.
உங்கள் அப்பா-மகன் உறவு எப்படிப்பட்டது? உங்கள் கருத்தை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்...



Click it and Unblock the Notifications











