நிச்சயதார்த்தம் முடிந்ததும் பீச், சினிமா போகலாம், தப்பில்லை!

By Mayura Akilan

திருமணம் என்பது சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது அல்ல; சரியான துணையாக இருப்பது' என்று ஒரு பழமொழி உண்டு. திருமணத்தின் உண்மையான அர்த்தமே தம்பதியர் இருவரும் சரியாக வாழ்ந்து காட்டுவதில்தான் இருக்கிறது! நீங்களும் ஆத்மார்த்தமான தம்பதியராக இருக்க நிபுணர்கள் கூறும் இல்லற மந்திரத்தை பின்பற்றுங்களேன்.

பாசப்பிணைப்பு

நிச்சயதார்த்தம் முடிந்த உடன் வருங்கால துணையோடு பீச், சினிமா என்று போவதில் தவறில்லை. அதேபோல அவர்கள் வீட்டுக்கும் ஒருமுறை சென்று வாருங்கள். அங்கே போக கூச்சப்பட்டால் போனிலாவது மாமனார், மாமியார், நாத்தனார் என மற்ற உறவுகளோடு பேசிப் பழகுங்கள். அது திருமணம் முடிந்து நீங்கள் அந்த வீட்டில் கால் எடுத்து வைக்கும்போது, அவர்களுக்கும் உங்களுக்கும் இடையேயான அந்நியத்தைக் குறைத்திருக்கும். அதேபோல் துணையின் வீட்டு உறவுகளோடு சந்தோஷமாக இருப்பது போல மனதில் கற்பனை செய்யுங்கள். இது புதிய உறவுகளுடன் சுமுகமாவதற்கான மனப் பயிற்சியாக அமையும்.

அதிக எதிர்பார்ப்பு ஆகாது

துணையைப் பற்றிய எதிர்பார்ப்பை ஆரம்பத்திலேயே அதிகம் வளர்த்துக் கொள்ளாதீர்கள். முடிந்தவரை மனதை காலி பையாக வைத்துக் கொண்டு கிடைப்பதை அமைதியாகச் சேகரியுங்கள். பிடிக்காததை பிறகு தவிர்த்து விடலாம். என்னதான் இருந்தாலும் உங்கள் பக்க உறவுகளோடு நீங்கள் இருப்பது போன்ற அந்நியோன்யத்துடன் துணையால் இருக்க முடியாது. அப்படி எதிர்பார்ப்பதும் தவறு. அதுபோன்ற விஷயங்களுக்கு மனதைப் பழக்கிக் கொள்ளுங்கள்.

உபதேசங்கள் ஜாக்கிரதை

நிச்சயதார்த்தம் முடிந்த உடன் வரும் அறிவுரைகளை கேட்டு அச்சமடையாதீர்கள். எது சரி, எது தவறு என அமைதியாக யோசித்து சரியானதை 'டிக்' அடியுங்கள். அதேபோல் பிறந்த வீட்டு உபதேசங்களை செவிப்பறையோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அந்த விதை, பின் பல பிரச்னைகளுக்கு வேராகிவிடும்.

மேரேஜ் கவுன்சிலிங்

தாத்தா, பாட்டி காலத்தில் திருமணங்கள் முடித்து வைக்கப்பட்டபோது, இருவருக்குமே அவரவர்க்கென பெரிய அளவில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் வளர்ந்திருக்கவில்லை. அவர்களாகவே வாழ்க்கையை புரிந்து கொண்டு தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து பழகிக் கொண்டார்கள். ஆனால், இன்றைய சமூக, பொருளாதர மாற்றங்களால் ஆண், பெண் இருவருக்குமே சுயசிந்தனை, சுதந்திரம், தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் என்றெல்லாம் அவரவர்களுக்கென கேரக்டரை சமரசங்களின்றி அமைத்துக் கொள்கிறார்கள்.

வெவ்வேறு துருவங்களாக இருக்கும் இருவர், மணவாழ்க்கையில் இணையும்போது பிரச்னைகள் ஏற்படுவது இயல்பு. எனவே, திருமணத்திற்கு முன்னர் அவர்களுக்கு வாழ்வியல் பற்றி ஆலோசனைகள் அவசியமாகிறது. திருமணம் செய்துகொள்ளும்முன் மனதளவிலான பயிற்சிகள் அவசியம். அது சுயபயிற்சியாகவும் இருக்கலாம்... அனுபவம் வாய்ந்த பெரியோரின் வழிகாட்டுதல்களாகவும் இருக்கலாம். அல்லது குடும்பநல ஆலோசகர்களின் அறிவுரைகளாகவும் இருக்கலாம்.

நேர்மறை தகவல்கள்

இந்தக் கால கட்டத்தில் திருமண முறிவு, கல்யாணத்தன்று தகராறு போன்ற நெகட்டிவ் செய்திகளைக் கேட்கவோ, படிக்கவோ சந்தர்ப்பம் வருவதுபோல் தெரிந்தால், கூடுமானவரை அவற்றைத் தவிர்த்துவிடுங்கள். நல்லவை மட்டுமே மனதுக்குள் போகட்டும்.

பொறுமை அவசியம்

துணையின் 'ஆத்மார்த்த' உறவாகிவிட வேண்டும் என்ற ஆசை சரிதான். ஆனால், திருமணம் நடந்த ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ அது நிகழ்ந்துவிடாது. அதற்கு அன்பு, நம்பிக்கை, பொறுமை, சகிப்புத்தன்மை, புரிதல் என பல விஷயங்கள் தேவைப்படுகின்றன. அவை நமக்குள் இருக்கிறதா என்பதை பரிசோதித்துக் கொள்வதும், இல்லாதவற்றை வளர்த்துக் கொள்வதும் முக்கியம்.

குடும்ப வாழ்க்கையின் அடித்தளம் இரண்டு விஷயங்கள்... அன்பு, நம்பிக்கை. இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்றின் நூலிழை அறுந்தாலும் இன்னொன்றில் நூலிழை அதுவாகவே அறுந்துவிடும் என்பதால் எப்போதும் இவை இரண்டிலும் நேர்மையாக இருப்பது ஆரோக்கியமானது.

Story first published: Tuesday, April 17, 2012, 13:25 [IST]
Desktop Bottom Promotion