இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும்.. உடலும் இரும்பு போல் வலுபெறும்..

Posted By:

Weight Loss Barley Kollu Kanji Recipe In Tamil: உங்கள் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதற்காக டயட்டில் இருக்கிறீர்களா? உங்கள் டயட்டில் இதுவரை சுவையில்லாத உணவுகள் தான் இடம் பெற்றுள்ளதா? அப்படியானால் இனி உங்கள் டயட்டில் எடையைக் குறைக்க உதவும் கஞ்சிகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

அதுவும் கொள்ளு மற்றும் பார்லி கொண்டு கஞ்சி தயாரித்து குடிக்கும் போது, உடல் எடையும் குறையும், உடலும் வலுபெறும். மேலும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும். இந்த கஞ்சியை தினமும் காலையில் ஒரு கப் குடித்து வந்தாலே எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். முக்கியமாக இந்த கஞ்சியை குழந்தைகளும் குடிக்கலாம்.

Weight Loss Kanji How To Make a Barley Kollu Kanji Recipe

உங்களுக்கு பார்லி கொள்ளு கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பார்லி கொள்ளு கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

கஞ்சி பொடிக்கு...

* கொள்ளு - 1 கப் அல்லது 250 கிராம்
* பார்லி - 1 கப் அல்லது 250 கிராம்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்

கஞ்சி செய்வதற்கு...

* நெய் - 2 ஸ்பூன்
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 6 பல் (பொடியாக நறுக்கியது)
* மிளகு - 10
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பீன்ஸ் - 6 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* கஞ்சி பவுடர் - 4 ஸ்பூன்
* தண்ணீர் - 1 கப் + 1 கப் + 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முதலில் கொள்ளு விதைகளை சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வறுத்து இறக்கி ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் அதே வாணலியில் பார்லி அரிசியை சேர்த்து 3-4 நிமிடம் வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் மிளகு, சீரகம் சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்து, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும். பின் அதை ஒரு டப்பாவில் போட்டு, தேவையான போது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
* அடுத்து கஞ்சி செய்வதற்கு ஒரு கிண்ணத்தில் 4 ஸ்பூன் கஞ்சி பொடியை எடுத்து, 1 கப் நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு 2 நிமிடம் வதக்கி, அதில் 1 கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, அதில் கரைத்து வைத்துள்ள பார்லி கொள்ளு பவுடர் நீரை ஊற்றி நன்கு கிளறி, கொதிக்க வைக்க வேண்டும்.
* அதுவும் மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் கஞ்சியை நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பார்லி கொள்ளு கஞ்சி தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, October 9, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion