வழுவழுப்பு இல்லாம வெண்டைக்காய் பொரியல் செய்யணுமா? இந்த 2 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..

Posted By:

Vendakkai Poriyal Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வெண்டைக்காய் என்றாலே பிடிக்காதா? இதற்கு அதில் உள்ள பிசுபிசுப்புத்தன்மை தான் காரணமா? அப்படியானால் அந்த பிசுபிசுப்பு இல்லாமல் வெண்டைக்காயை செய்து கொடுங்கள். அதுவும் வெண்டைக்காயைக் கொண்டு சாம்பார் செய்யாமல், பொரியல் செய்து கொடுங்கள். இதனால் விரும்பி சாப்பிடுவார்கள்.

வெண்டைக்காயில் உள்ள பிசுபிசுப்புத்தன்மையைப் போக்கும் சில டிப்ஸ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெண்டைக்காயை சாப்பிடுவது நல்லது. மேலும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் வெண்டைக்காயை அதிகம் சேர்க்கும் போது, மலச்சிக்கலைத் தடுக்கலாம்.

Vendakkai Poriyal How To Make a Vendakkai Fry Recipe

உங்களுக்கு பிசுபிசுப்பு இல்லாத வெண்டைக்காய் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெண்டைக்காய் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வெண்டைக்காய் - 350 கிராம்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன தக்காளி - 1
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்

வறுத்து அரைப்பதற்கு...

* வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் வெண்டைக்காயை நீரில் கழுவிவிட்டு, துணியால் துடைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அந்த வெண்டைக்காயை பொடியாக நறுக்கி 15 நிமிடம் அப்படியே தட்டில் பரப்பி வைக்க வேண்டும். இதனால் வெண்டைக்காயில் உள்ள வழுவழுப்புத் தன்மை ஓரளவு குறையும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் வரமிளகாயை சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய சின்ன தக்காளியை சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பொதுவாக பொரியலில் தக்காளியை சேர்க்கமாட்டோம். ஆனால் வெண்டைக்காயின் பிசுபிசுப்பு நீங்குவதற்கு கொஞ்சம் தக்காளியை சேர்க்க வேண்டும்.
* தக்காளி நன்கு வதங்கியதும், அதில் நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, திறந்த நிலையில் வெண்டைக்காயை வதக்கி வேக வைக்க வேண்டும். அப்படி வதக்கும் போது ஆரம்பத்தில் சற்று பிசுபிசுப்புத்தன்மை இருக்கும். ஆனால் மிதமான தீயில் வைத்து வதக்க வதக்க பிசுபிசுப்பு போய்விடும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் வேர்க்கடலையை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* அதன்பின் அதில் மல்லி விதைகளை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் சீரகத்தை சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும்.
* வெண்டைக்காய் நன்கு வெந்து பிசுபிசுப்புத்தன்மை போனதும், சாம்பார் தூள் சேர்த்து நன்கு கிளறி மூடி வைத்து, 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
* வெண்டைக்காய் நன்கு வதங்கியதும், அதில் பொடித்து வைத்துள்ளதை சேர்த்து கிளறி 1 நிமிடம் வதக்கி இறக்கினால், சுவையான வெண்டைக்காய் பொரியல் தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, April 4, 2025, 14:50 [IST]
Desktop Bottom Promotion