எப்பவும் செய்யுற வெண் பொங்கலை ஒருவாட்டி இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..

Posted By:

Ven Pongal Recipe In Tamil: தினமும் இட்லி தோசை செய்து போரடித்துவிட்டதா? சரி வெண் பொங்கல் செய்யலாம் என்றால் ஒரே சுவையில் செய்து அலுத்துவிட்டதா? அப்படியானால் அடுத்தமுறை வெண் பொங்கல் செய்வதாக இருந்தால், அத்துடன் தக்காளியை அரைத்து சேர்த்து செய்யுங்கள். இப்படி வெண் பொங்கலை செய்யும் போது, சுவை வித்தியாசமாகவும், அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடக்கூறியவாறும் இருக்கும்.

அதுவும் ஆடி முதல் செவ்வாய் அன்று வீட்டில் நிறைய பேர் ஸ்பெஷலாக சமைக்க நினைக்கலாம். அப்போது அனைவருக்கும் சர்பிரைஸ் கொடுக்கும் வகையில், தக்காளியை அரைத்துப் போட்டு செய்யும் போது, வெண் பொங்கல் பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

Ven Pongal How To Make a Tasty And Spicy Ven Pongal Recipe

உங்களுக்கு தக்காளி வெண் பொங்கலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி வெண் பொங்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மாவு பச்சரிசி - 3/4 கப்
* பாசிப்பருப்பு - 1/4 கப்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2 (அரைத்தது)
* தண்ணீர் - 3 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* நெய் - 3 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* முந்திரி - 10 (உடைத்தது)
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து, நல்ல மணம் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், அரைத்த தக்காளியை சேர்த்து, நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 3 1/2 கப் நீரை ஊற்றி, வறுத்து வைத்துள்ள அரிசி மற்றும் பருப்பை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, பெருங்காயத் தூளையும் சேர்த்து கிளறி, குக்கரை மூடி, 6-7 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கரண்டியால் நன்கு கிளறி விட வேண்டும். முக்கியமாக அப்படி கிளறும் போது, அரிசியும், பருப்பும் லேசாக குலையுமாறு அழுத்திவிட்டு கிளறி விட வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், மிளகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் உடைத்த முந்திரியை சேர்த்து வறுத்து, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு வதக்கிய பொருட்களை குக்கரில் உள்ள பொங்கலுடன் சேர்து கிளறி, அடுப்பில் அந்த குக்கரை மீண்டும் வைத்து, 3 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். இப்படி கிளறிவிடும் போது தாளித்த பொருட்கள் பொங்கலுடன் ஒன்று சேரும். பின் அடுப்பை அணைத்துவிட்டு இறக்கினால், சுவையான தக்காளி வெண் பொங்கல் தயார்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion