உளுந்து வடை

By Maha

தென்னிந்திய உணவுகளில் வடை மிகவும் பிரபலமானது. அதிலும் உளுந்து வடை என்றால் சொல்லவே வேண்டாம். ஏனெனில் தென்னிந்திய ஹோட்டல்கள் எங்கு சென்று இட்லி அல்லது பொங்கல் கேட்டாலும், அத்துடன் இந்த உளுந்து வடையையும் தான் வைத்து தருவார்கள்.

ஆனால் இத்தகைய வடையை காலையில் மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. மாலையில் காப்பி அல்லது டீ குடித்துக் கொண்டே, வீட்டில் செய்து சாப்பிடலாம். சரி, இப்போது அந்த உளுந்து வடையை எப்படி எளிதில் செய்வதென்று பார்ப்போமா!!!

Uddina Vada

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1 கப்
மிளகு - 2 டீஸ்பூன்
இஞ்சி - 1 இன்ச்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 3
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் உளுத்தம் பருப்பை 2 கப் தண்ணீர் விட்டு, இரவு படுக்கும் போது ஊற வைத்து விட வேண்டும்.

பின் மிளகை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் உளுத்தம் பருப்பை கழுவி, அதனை லேசாக தண்ணீர் விட்டு, நன்கு மென்மையாக சற்று கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அரைத்த உளுந்து மாவில் மிளகுத் தூள், நறுக்கி வைத்திருந்த இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

அதே சமயம் ஒரு பாலிதீன் கவரை எடுத்துக் கொண்டு, அதில் எண்ணெய் சிறிது தடவி, கொஞ்சம் உளுந்து மாவை எடுத்து, வட்டமாக தட்டி, எண்ணெய் காய்ந்ததும், அதில் போட்டு பொன்னிறமாக முன்னும், பின்னும் பொரித்து எடுக்க வேண்டும்.

இதேப் போன்று அனைத்து மாவையும் செய்ய வேண்டும். இப்போது சுவையான உளுந்து வடை ரெடி!!! இதனை தேங்காய் சட்னி மற்றும் ஒரு கப் காப்பி அல்லது டீ குடித்துக் கொண்டே சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

Story first published: Thursday, February 7, 2013, 17:19 [IST]
Desktop Bottom Promotion