தக்காளி பிரியாணி

By Maha

மதிய வேளையில் எப்போதும் சாம்பார், பொரியல், குழம்பு என்று சாப்பிட்டு அலுத்துவிட்டதா? அப்படியெனில் தக்காளி பிரியாணி செய்து சாப்பிடுங்கள். இதை செய்வது மிகவும் சுலபமானது மட்டுமல்லாமல், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாகவும் இருக்கும்.

சரி, இப்போது அந்த தக்காளி பிரியாணியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து, எப்படி இருந்ததென்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Tasty Tomato Biryani

தேவையான பொருட்கள்:

பழுத்த தக்காளி - 6 (நறுக்கியது)
பாசுமதி அரிசி - 1/2 கிலோ
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
அன்னாசிப்பூ - 2
பிரியாணி இலை - 1
பச்சை மிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய புதினா - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் அரிசியை நீரில் ஊற வைத்து, 1 முறை மட்டும் நீரில் கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ மற்றும் கசக்கிய பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.

பின் அதில் வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், முழு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்

அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கி, அதோடு சிறிது உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

தக்காளியானது நன்கு மென்மையாக வதங்கியதும், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அதோடு நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

பின்பு அதில் அரிசியை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கினால், தக்காளி பிரியாணி ரெடி!!!

Story first published: Wednesday, September 30, 2015, 12:47 [IST]
Desktop Bottom Promotion