புத்தாண்டு ஸ்பெசல் சாம்பார்

By Mayura Akilan

Sambar
எந்த ஒரு பண்டிகை என்றாலும் சாம்பார் முக்கியமாக இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொருவிதமாக சாம்பார் வைப்பார்கள். தமிழ்நாட்டில் புத்தாண்டு அன்று வைக்கப்படும் முருங்கைக் காய், கத்தரிக்காய் அரைத்து விட்ட சாம்பார் கூடுதல் சுவையோடு இருக்கும்.

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு – 1 கப்
முருங்கைக்காய் – 2
கத்தரிக்காய் – 3
காரட் - 1
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 2
புளி – எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் – 1 சிறிய ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிது
கடுகு, உளுந்து வெந்தையம் – தாளிக்க
பெருங்காயத்தூள் – சிறிதளவு
அரைக்க தேவையானவை
வரமிளகாய் – 5
கொத்தமல்லி – 3 டீ ஸ்பூன்
சீரகம் – 1 டீ ஸ்பூன்
மிளகு – 1 டீ ஸ்பூன்

சாம்பார் செய்முறை

முதலில் துவரம் பருப்பை மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

அரைக்கவேண்டிய பொருட்களை வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்து மிக்சியில் பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.

முருங்கை, கத்தரி, காரட் போன்றவைகளை பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி போட்டு சேர்த்து வதக்கவும். அத்துடன் காய்கறிகளை சேர்த்து வதக்கவும். அத்துடன் சிறிதளவு உப்பு போட்டு அரைத்து வைத்துள்ள பொடியை பொட்டு நன்றாக கிளறி சிறிதளவு தண்ணீர், கரைத்து வைத்த புளி ஊற்றி கொதிக்க வைக்கவும். இத்துடன் வேகவைத்துள்ள துவரம்பருப்பை போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும்.

காய்கள் நன்றாக வெந்த உடன் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, வெந்தையம் போட்டு தாளித்து ஊற்றவும். சாம்பாரை அடுப்பில் இருந்து இறக்கும் முன்பு கடைசியாக பெருங்காயத்தூள் போடவும். சுவையான அரைத்து விட்ட சாம்பார் ரெடி. சாதத்திற்கு ஏற்ற சத்தான சாம்பார்

Desktop Bottom Promotion