பசலைக்கீரை பன்னீர் சப்பாத்தி

By Maha

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய கீரைகளில் ஒன்று தான் பசலைக்கீரை. இந்த பசலைக்கீரையை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதில் ஒன்று தான் சப்பாத்தி. இந்த சப்பாத்தி மிகவும் ஆரோக்கியமானது. குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய உணவுகளில் முக்கியமானது. மேலும் இது காலையில் செய்வதற்கு ஏற்ற ஒரு காலை உணவும் கூட. அதுமட்டுமல்லாமல் இதில் பால் பொருட்களில் ஒன்றான பன்னீர் சேர்த்து செய்யக்கூடிய ரெசிபி.

சரி, இப்போது அந்த பசலைக்கீரை பன்னீர் சப்பாத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Palak Paneer Chapathy

தேவையான பொருட்கள்:

பசலைக்கீரை - 1 கப்
பன்னீர் - 500 கிராம்
கோதுமை மாவு - 2 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
ஓமம் - 1 டீஸ்பூன் (வறுத்தது)
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பசலைக்கீரையை நன்கு கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்பு பன்னீரை துருவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் மிக்ஸியில் பசலைக்கீரை மற்றும் பச்சை மிளகாய் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரைத்த கலவை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி மற்றும் ஓமம் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, மென்மையாக பிசைந்து, இறுதியில் பன்னீரை தூவி பிசைந்து கொள்ள வேண்டும்.

பிறகு அதனை சிறு உருண்டைகளாக்கி, சப்பாத்தி போன்று தேய்த்துக் கொள்ள வேண்டும்.

இறுதியில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல்லானது காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை போட்டு, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான பசலைக்கீரை பன்னீர் சப்பாத்தி ரெடி!!!

Story first published: Wednesday, October 30, 2013, 5:33 [IST]
Desktop Bottom Promotion