செட்டிநாடு கீரை கூட்டு

By Maha

செட்டிநாடு ரெசிபிக்களில் அசைவம் மட்டும் பிரபலமில்லை, சைவ ரெசிபிக்களும் பிரபலமானது தான். குறிப்பாக இந்த ஸ்டைல் ரெசிபிக்கள் மிகவும் சுவையாகவும், மணமாகவும் இருக்கும். இங்கு செட்டிநாடு ரெசிபிக்களில் ஒன்றான செட்டிநாடு கீரை கூட்டு எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்.

அதைப் படித்து அதை செய்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். குறிப்பாக இத்துடன் நெய் சேர்த்துக் கொண்டால், இன்னும் அருமையாக இருக்கும். சரி, இப்போது அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Chettinad Keerai Kootu Recipe

தேவையான பொருட்கள்:

பசலைக்கீரை - 1 கட்டு
வேக வைத்த பாசிப் பருப்பு - 1 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 5 பற்கள்
பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள பசலைக்கீரையை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

கீரையானது நன்கு வெந்ததும், அதில் பாசிப்பருப்பை சேர்த்து, அத்துடன் 2 கப் தண்ணீர் ஊற்றி கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 10-15 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

அடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, பின் அதனை கீரையுடன் சேர்த்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், செட்டிநாடு கீரை கூட்டு ரெடி!!!

இந்த ரெசிபியை வீடியோவில் பார்க்க...

Story first published: Friday, November 21, 2014, 12:53 [IST]
Desktop Bottom Promotion