வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் தேங்காய் போளி - 10 நிமிடத்தில் எப்படி செய்யணும் தெரியுமா?

Posted By:

Varalakshmi Vratham Special Coconut Poli Recipe In Tamil: 2025 ஆம் ஆண்டின் வரலட்சுமி நோன்பானது ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையில் வருகிறது. அதுவும் வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 08 ஆம் தேதி வருகிறது. இந்த வரலட்சுமி நோன்பை மேற்கொள்வதன் மூலம் செல்வம், தானியம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், குழந்தைகள், வெற்றி, புகழ் போன்றவை கிடைக்கும்.

வரலட்சுமி நோன்பு அன்று பூஜை செய்யும் போது லட்சுமி தேவிக்கு 7 அல்லது 9 விதமான பலகாரங்களை வைத்து படைத்து வழிபடுவார்கள். அந்த பலகாரங்களில் பெரும்பாலும் இனிப்புக்கள் தான் இருக்கும். இந்த வரலட்சுமி நோன்பு நாளில் லட்சுமி தேவிக்கு ஸ்பெஷலான ஒரு பலகாரத்தை செய்து படைத்து வழிபட நினைத்தால், தேங்காய் போளியை செய்து படைத்து வழிபடுங்கள்.

Varalakshmi Vratham Special Recipe How To Make a Coconut Poli Recipe

தேங்காய் போளியை செய்வது கடினமாக பலரும் நினைக்கலாம். ஆனால் உண்மையிலேயே அது தான் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இந்த போளியை செய்தால், வீட்டில் உள்ளோரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த போளிக்கு உரிய மேல் மாவை மட்டும் செய்து 1 மணிநேரம் ஊற வைத்து விட்டால், பின் 10 நிமிடத்தில் போளியை செய்துவிடலாம்.

உங்களுக்கு தேங்காய் போளியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் போளி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மைதா - 1 1/4 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/2 கப்
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன் + 2 1/2 டேபிள் ஸ்பூன்

உள்ளே வைப்பதற்கு...

* பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* வெல்லம் - 1 கப்
* தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 கப்
* நெய் - 2 டீஸ்பூன்
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கைகளால் கிளறி விட வேண்டும்.
* பின் அதில் 1/2 கப் நீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும். இப்படி பிசையும் போது மாவு கைகளில் ஒட்டும் படி இருக்கும்.
* அதன் பின் அதில் 1 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு பிசைய வேண்டும். அப்படி பிசையும் போது கைகளில் ஒட்டிக் கொண்டிருந்த மாவு, நன்கு திரண்டு கைகளில் ஒட்டாமல் இருக்கும்.
* பிறகு அதில் 2 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மூடி வைத்து, குறைந்தது 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பை நீரில் கழுவி போட்டு, அதில் 1/2 கப் நீரை ஊற்றி, 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பாசிப்பருப்பை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் பொடித்த வெல்லத்தை சேர்த்து, 2 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி, வெல்லத்தை கரைக்க வேண்டும்.
* வெல்லம் நன்கு கரைந்ததும், அதில் துருவி வைத்துள்ள தேங்காய் மற்றும் வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் 2 ஸ்பூன் நெய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி, நீர் ஓரளவு வற்றும் வரை வேக வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து அந்த தேங்காய் பூர்ணத்தை உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக பிசைந்து வைத்துள்ள மைதா மாவை கொஞ்சமாக எடுத்து உருட்டி, எண்ணெய் தடவிய வாழை இலையில் வைத்து, தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் அதன் நடுவே ஒரு தேங்காய் பூர்ண உருண்டையை வைத்து, மைதா மாவால் மூடி ஒருமுறை அழுத்தி, கைகளில் எண்ணெய் தடவிக் கொண்டு தட்டையாக கைகளால் போளி போன்று சற்று மெல்லியதாக தேய்த்து விட வேண்டும்.
* பின்னர் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றி, தட்டி வைத்துள்ளதை சேர்த்து, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான தேங்காய் போளி தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, August 7, 2025, 14:20 [IST]
Desktop Bottom Promotion