வரலட்சுமி நோன்பு ஸ்பெஷல்.. சுவையான இளநீர் பாயாசம் செய்வது எப்படி?

Posted By:

Varalakshmi Vratam 2023: இன்று வரலட்சுமி நோன்பு என்பதால், பலரது வீடுகளில் மாலை வேளையில் லட்சுமி தேவிக்கு பூஜை செய்து, அவருக்கு பாலால் செய்யப்பட்ட பிரசாதத்தை படைத்து வழிபடுவதுண்டு.

நீங்களும் உங்கள் வீட்டில் வரலட்சுமி பூஜை செய்கிறீர்களானால், ஒரு சுவையான பிரசாதத்தை செய்து லட்சுமி தேவிக்கு படைக்க விரும்பினால், வழக்கமான பாயாசத்தை செய்யாமல் இளநீர் பாயாசத்தை செய்யுங்கள். இந்த இளநீர் பாயாசம் மிகவும் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.

Varalakshmi Vratam Special Recipe: Elaneer Payasam In Tamil

முக்கியமாக இந்த பாசாயம் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இளநீர் குடிக்க விரும்பாத குழந்தைகளுக்கு, இந்த மாதிரி செய்து கொடுத்தால், நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு இளநீர் பாயாசம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இளநீர் பாயாசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* தண்ணீர் சேர்க்காத பால் - 2 கப் (1/2 லிட்டர்)
* கண்டென்ஸ்டு பால் - 1/4 கப்
* சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
* இளநீர் - 2
* துருவிய தேங்காய் - 2 கப்
* இளநீர் - 1/4 கப்
* ஏலக்காய் - 4-5
* நெய் - 1 டீஸ்பூன்
* முந்திரி - 10

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்க்காத பாலை ஊற்றி, அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து 20-22 நிமிடம் பாதியாகும் வரை சுண்ட காய்ச்ச வேண்டும். முக்கியமாக அவ்வப்போது பாலை கிளறி விட வேண்டும். இல்லாவிட்டால் அடிபிடித்துவிடும்.
* பின் அதில் 1/4 கப் கண்டெண்ஸ்டு மில்க், 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, 2 நிமிடம் அடுப்பில் வைத்து, பின் இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு இளநீரை எடுத்து, அதன் வழுக்கையை எடுத்து மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் சிறிது இளநீர் தண்ணீரை ஊற்றி அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் மற்றொரு இளநீரின் வழுக்கையை எடுத்து, அதை சிறு துண்டுகளாக வெட்டி, அதையும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், இளநீர் தண்ணீர் மற்றும் 5 ஏலக்காயைப் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த தேங்காயை வடிகட்டி, கெட்டியான தேங்காய் பாலை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சிறு துண்டுகளாக்கி, நெய்யில் போட்டு, பொன்னிறமாக வறுத்து, அதை ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த இளநீர் பேஸ்ட், துண்டுகளாக்கப்பட்ட இளநீர் வழுக்கை, காய்ச்சி ஆற வைத்துள்ள பால் மற்றும் தேங்காய் பால் ஆகியவற்றை ஒன்றாக எடுத்து, முந்திரியைத் தூவி கிளறினால், சுவையான இளநீர் பாயாசம் தயார்.

குறிப்பு:

உங்களிடம் கண்டென்ஸ்டு மில்க் இல்லாவிட்டால், சர்க்கரையை சற்று அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். கண்டென்ஸ்டு மில்க் சேர்க்காமலும் பாயாசம் நன்றாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Friday, August 25, 2023, 14:40 [IST]
Desktop Bottom Promotion