1 கப் வரகரிசி வெச்சு.. இந்த மாதிரி தோசை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும்.. சத்தானதும் கூட...

Posted By:

Varagu Arisi Masala Dosa Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் தோசை பிரியர்களா? பெரும்பாலும் உங்கள் வீட்டில் காலையில் தோசை தான் செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான தோசையை செய்து சாப்பிடாமல், ஒருமுறை சிறுதானியங்களில் ஒன்றான வரகரிசி கொண்டு தோசை செய்து சாப்பிடுங்கள்.

இந்த வரகரிசி தோசையை வெறுமனே செய்து சாப்பிடாமல், அதற்கு ஒரு உருளைக்கிழங்கு மசாலாவை செய்து, வரகரிசி மசாலா தோசை செய்து சாப்பிட்டால், இன்னும் ருசியாக இருக்கும். இந்த தோசையை காலையில் 2 சாப்பிட்டாலே போதும், வயிறு நிறைந்துவிடும். எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இந்த தோசையை 1 சாப்பிட்டாலே போதும், எடையும் குறையும், அடிக்கடி பசியும் எடுக்காமல், நீண்ட நேரம் வயிறும் நிறைந்திருக்கும்.

Varagu Arisi Masala Dosa How To Make a Kodo Millet Masala Dosa Recipe

உங்களுக்கு வரகரிசி மசாலா தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வரகரிசி மசாலா தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* வரகரிசி - 1 கப்
* உளுத்தம் பருப்பு - 1/4 கப்
* அவல் - 1/4 கப்
* வெந்தயம் - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/2 கப்
* உப்பு - 1 டீஸ்பூன்

மசாலாவிற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/2
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 துண்டு (துருவியது)
* பச்சை மிளகாய் - 4 (கீறியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* வேக வைத்த உருளைக்கிழங்கு - 5
* தண்ணீர் - 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் வரகரிசி, 1/4 கப் உளுத்தம் பருப்பு, 1/2 கப் அவல் மற்றும் 2 டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் நீரை ஊற்றி, குறைந்தது 6 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 6 மணிநேரம் கழித்து, ஊற வைத்ததை மிக்சர் ஜாரில் போட்டு, 1/2 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, மூடி வைத்து, 8 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும்.
* 8 மணிநேரம் கழித்து, அரைத்து வைத்துள்ள மாவில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்தால், வரகரிசி தோசை மாவு தயார்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய இஞ்சி, கீறி வைத்துள்ள பச்சை மிளகாய், 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து நன்கு வெங்காயத்தின் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து, 1 டீஸ்பூன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, தக்காளி மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்து துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்குகளை சேர்த்து கிளறி, கரண்டியால் கிழங்கை மசித்து விட்டு, 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, 2 நிமிடம் வேக வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், உருளைக்கிழங்கு மசாலா தயார்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அரைத்து வைத்துள்ள வரகரிவை மாவை தோசையாக ஊற்றி மேலே எண்ணெய் ஊற்றி, வெந்ததும் திருப்பிப் போட்டு, பின் மீண்டும் தோசையை திருப்பிப்போட்டு, நடுவே உருளைக்கிழங்கு மசாலாவைப் பரப்பி மடித்து பரிமாறினால், சுவையான வரகரிசி மசாலா தோசை தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, May 6, 2025, 8:13 [IST]
Desktop Bottom Promotion