துவரம் பருப்பு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..

Posted By:

Thuvaram Paruppu Dosa With Vengaya Chutney In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி தோசை சுடுவீர்களா? அதுவும் எப்போதும் ஒரே மாதிரி தான் தோசை சுடுவீர்களா? அப்படியானால் ஒருமுறை வீட்டில் உள்ளோருக்கு புரோட்டீன் அதிகம் நிறைந்த துவரம் பருப்பு தோசையை சுட்டு கொடுங்கள். இந்த துவரம் பருப்பு தோசையானது சோம்பு, வரமிளகாய் எல்லாம் ஊற வைத்து மாவு அரைப்பதால், நல்ல வாசனையுடன் இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும்.

Toor Dal Dosa With Onion Chutney How To Make Thuvaram Paruppu Dosa With Vengaya Chutney

இந்த துவரம் பருப்பு தோசைக்கு வெங்காய சட்னி அருமையான காம்பினேஷனாக இருக்கும். ஒருமுறை இந்த காம்பினேஷன் டிபனை காலையில் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். அதோடு வாரம் ஒருமுறை இந்த காம்போவை செய்யுமாறும் சொல்வார்கள்.

இந்த துவரம் பருப்பு தோசை மற்றும் வெங்காய சட்னி ரெசிபி குறித்து அபூர்வாஸ் விருந்து என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த துவரம் பருப்பு தோசை மற்றும் வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே துவரம் பருப்பு தோசை மற்றும் வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு தோசைக்கு..

* இட்லி அரிசி - 1 கப்
* துவரம் பருப்பு - 1/2 கப்
* வரமிளகாய் - 7
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பூண்டு - 7-8 பல்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

வெங்காய சட்னிக்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 8
* காஷ்மீரி வரமிளகாய் - 3
* வெங்காயம் - 4 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி மற்றும் துவரம் பருப்பை எடுத்துக் கொண்டு நீரில் 2 முறை கழுவி விட்டு, பின் சுத்தமான நீரை ஊற்றி, அத்துடன் வரமிளகாய், சோம்பு சேர்த்து 2-3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* அரிசி பருப்பு ஊறியதும், அவற்றை மிக்சர் ஜாரில் சேர்த்து, அத்துடன் தோலோடு பூண்டு பற்களையும் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து, மூடி வைத்து குறைந்தது 1-2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* அதற்குள் சட்னி செய்து விடலாம். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், காஷ்மீரி வரமிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி ஓரளவு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில் சிறிது நீரை ஊற்றில் அலசி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் சட்னியை தாளிப்பதற்கு ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், வெங்காய சட்னி தயார்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தயாரித்து வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி எடுத்தால், சுவையான துவரம் பருப்பு தோசை தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, May 7, 2026, 6:46 [IST]
Desktop Bottom Promotion