3 தக்காளியும், உளுத்தம் பருப்பும் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. போட்டி போட்டு சாப்பிடுவாங்க...

Posted By:

Tomato Ulunthu Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி தான் செய்யப் போகிறீர்களா? அந்த இட்லிக்கு வீட்டில் உள்ளோர் விரும்பி சாப்பிடக்கூடியவாறு ஒரு அசத்தலான சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் சற்று புளிப்பான சட்னியை செய்ய வேண்டுமா?

அப்படியானால் வீட்டில் தக்காளியும், உளுத்தம் பருப்பும் இருந்தால், அதை வெச்சு சூப்பரான தக்காளி உளுந்து சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு ஈஸியாக இருக்கும். இந்த சட்னியை இட்லியுடன் மட்டுமின்றி, தோசையுடனும் சாப்பிடலாம். இந்த சட்னியை செய்தால் வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

Tomato Ulunthu Chutney How To Make a Tomato Ulunthu Chutney Recipe

உங்களுக்கு தக்காளி உளுந்து சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி உளுந்து சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டீஸ்பூன் + 1 டீஸ்பூன்
* முழு உளுத்தம் பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 5
* பழுத்த தக்காளி - 3
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* புளி - சிறிய துண்டு
* பூண்டு - 2 பல்
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 2 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 4 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பை சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின் அதில் 1/2 டீஸ்பூன் சீரகம், 1 டேபிள் ஸ்பூன் மல்லி சேர்த்து, உளுத்தம் பருப்பு பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வரமிளகாய் சேர்த்து வறுத்து இறக்கி, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறு துண்டு புளியை சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த உளுத்தம் பருப்பு கலவையை சேர்த்து, அத்துடன் பூண்டு பற்களை சேர்த்து நன்கு மென்மையாக பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வதக்கிய தக்காளியை சேர்த்து, அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். வேண்டுமானால், சிறிது நீரை ஊற்றி கலந்து கொள்ளலாம்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் மற்றும் 2 பூண்டு பற்களை தட்டிப் போட்டு தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான தக்காளி உளுத்தம் பருப்பு சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, April 8, 2025, 7:00 [IST]
Desktop Bottom Promotion