2 தக்காளியும், 1 கப் கடலை மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணி பாருங்க..

Posted By:

Tomato Ribbon Pakoda Recipe In Tamil: தற்போது பிள்ளைகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. பொதுவாக குழந்தைகள் வீட்டில் இருந்தாலே எந்நேரமும் சாப்பிட ஏதாவது கேட்டுக் கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே, அவர்களுக்கு சுவையான பல ஸ்நாக்ஸ்களை செய்யலாம்.

அதுவும் மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது, உங்கள் பிள்ளைகள் மொறுமொறுவென்று சாப்பிட ஏதாவது கேட்டால், அப்போது வீட்டில் தக்காளியும், கடலை மாவும் இருந்தால், அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் தக்காளி ரிப்பன் பக்கோடாவை செய்யுங்கள். இந்த ரிப்பன் பக்கோடாவை ஒருமுறை நிறைய செய்து வைத்துக் கொண்டால், குழந்தைகள் சாப்பிட கேட்கும் போது எடுத்துக் கொடுக்க வசதியாக இருக்கும்.

Tomato Ribbon Pakoda How To Make a Tomato Ribbon Pakoda Recipe

உங்களுக்கு தக்காளி ரிப்பன் பக்கோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி ரிப்பன் பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* தக்காளி - 2
* கடலை மாவு - 1 கப்
* பச்சரிசி மாவு - 1/2 கப்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* ஓமம் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* சூடான எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் தக்காளியை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் வடிகட்டியை வைத்து, அதில் அரைத்த தக்காளியை ஊற்றி வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் கடலை மாவு, பச்சரிசி மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் ஓமத்தை கையால் நசுக்கி சேர்த்து, அத்துடன் பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து, 2 டேபிள் ஸ்பூன் சூடான எண்ணெய் ஊற்றி, ஸ்பூன் கொண்டு நன்கு கிளறி விட வேண்டும்.
* கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், கைகளால் மாவை நன்கு மென்மையாக பிசைய வேண்டும்.
* பின் அந்த மாவை இரண்டாக பிரித்து, ஒரு பாதியை ரிப்பன் பக்கோடா அச்சு வைக்கப்பட்டுள்ள முறுக்கு அச்சில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் இந்த மாவை பிழிந்து விட்டு, முன்னும், பின்னும் நன்கு வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் பொரித்து எடுத்தால், சுவையான தக்காளி ரிப்பன் பக்கோடா தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, December 24, 2024, 15:13 [IST]
Desktop Bottom Promotion