தினமும் இட்லி, தோசைன்னு செய்யாம ஒருமுறை இந்த காலை உணவை செய்யுங்க.. டேஸ்டியும் ஹெல்த்தியும் கூட..

Posted By:

Tomato Paneer Stuffed Paratha Recipe In Tamil: தினமும் உங்கள் வீட்டில் காலையில் இட்லி, தோசை தான் செய்வீர்களா? அப்படியானால் இன்று சற்று வித்தியாசமாகவும், ஆரோக்கியமாகவும் ஒரு காலை உணவை செய்யுங்கள். அதுவும் தக்காளி, பன்னீர் கொண்டு ஸ்டப்டு பராத்தாவை செய்யுங்கள்.

இந்த பராத்தா அட்டகாசமான சுவையில் இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். மேலும் இது செய்து மிகவும் சுலபமாகவும் இருக்கும்.

Tomato Paneer Stuffed Paratha How To Make a Tomato Paneer Stuffed Paratha Recipe

உங்களுக்கு தக்காளி பன்னீர் பராத்தாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி பன்னீர் பராத்தா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* தக்காளி - 8
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* கோதுமை மாவு - 2 கப்
* எண்ணெய் - சிறிது

உள்ளே வைப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 1
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4
* மிளகாய் தூள் - 1/2
* கரம் மசாலா - 1/2
* பன்னீர் - 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* சீஸ் - துருவியது
* வெண்ணெய் - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தக்காளியை லேசாக கீறிவிட்டு, காம்பு பகுதியை நீக்கிவிட்டு, எண்ணெயில் போட்டு, மூடி வைத்து, 2 நிமிடம் முதலில் வேக வைத்து, பின் மூடியை திறந்து தக்காளியை திருப்பிப் போட்டு, மீண்டும் 2 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* பின் தக்காளியை எடுத்து ஒரு அகலமான வடிகட்டியில் வைத்து சற்று குளிர வைக்க வேண்டும்.
* பின்பு தக்காளியின் தோலை உரித்து நீக்கிவிட்டு, தக்காளியை அப்படியே மசித்து விட்டு, தக்காளியின் சாற்றினை தனியாக எடுத்துக் கொண்டு, மசித்த தக்காளியை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் தக்காளி சாற்றினை எடுத்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் உப்பு, சிறிது கொத்தமல்லி மற்றும் கோதுமை மாவை சேர்த்து, நன்கு மென்மையாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, மாவின் மேலே எண்ணெய் தடவி, மூடி வைத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் தக்காளி வேக வைத்த அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீண்டும் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய பன்னீரை சேர்த்து 2 நிமிடம் கிளறி, கொத்தமல்லியைத் தூவி இறக்க வேண்டும்.
* பின்பு பிசைந்த மாவை சிறிது எடுத்து, சப்பாத்தி போன்று மெலிசாக தேய்க்க வேண்டும்.
* பின் அதன் நடுவே தயாரித்து வைத்துள்ள பன்னீர் கலவையை சிறிது வைத்து, துருவிய சீஸை தூவி முக்கோண வடிவில் மடித்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் சிறிது வெண்ணெய் தடவி, செய்து வைத்துள்ள பராத்தாவை வைத்து, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான தக்காளி பன்னீர் பராத்தா தயார். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்ய வேண்டும்.

Image Courtesy: Akshaya. com

[ of 5 - Users]
Story first published: Saturday, May 11, 2024, 8:18 [IST]
Desktop Bottom Promotion