இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க... உடம்பில் தேங்கியுள்ள விடாப்பிடியான கொழுப்பு ஈஸியா கரையும்...

Posted By:

Thinai Pachai Payaru Kanji Recipe In Tamil: உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருக்கும் பலரும் ஒவ்வொரு நாளும் காலையில் என்ன சாப்பிடுவது என்று யோசிக்கலாம். உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு மிகச்சிறந்த காலை உணவு என்றால் அது கஞ்சி தான். அதுவும் சிறு தானியங்களைக் கொண்டு கஞ்சியை தயாரித்து குடிக்கும் போது, சுவையாக இருப்பது மட்டுமின்றி, சத்தானதும் கூட.

அதுவும் திணை அரிசியுடன், பச்சை பயறை சேர்த்து கஞ்சி செய்யும் போது, அந்த கஞ்சி அட்டகாசமான சுவையுடன் இருக்கும். மேலும் இதில் எடையைக் குறைக்க நினைப்போர் மட்டுமின்றி, சர்க்கரை நோயாளிகளும், குழந்தைகளும் கூட சாப்பிடலாம்.

Thinai Pachai Payaru Kanji How To Make a Thinai Pachai Payaru Kanji Recipe

உங்களுக்கு திணை பச்சை பயறு கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே திணை பச்சை பயறு கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* திணை அரிசி - 1 கையளவு
* உடைத்த பாசிப்பயறு - 1 கையளவு
* மிளகு - 1/4 டீஸ்பூன்
* இஞ்சி - 1/2 இன்ச்
* பூண்டு - 4 பல்
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தண்ணீர் - 4 கப் + தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் - 2 பெரிய சில்லு
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கையளவு திணை அரிசியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் உடைத்த பாசிப்பயறை 1 கையளவு சேர்த்து நீரை ஊற்றி 2 முறை நன்கு அலச வேண்டும்.
* பின்பு அதில் 1 கப் நீரை ஊற்றி, 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு இடி உரலில் 1/4 டீஸ்பூன் மிளகு சேர்த்து நன்கு இடித்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் இஞ்சியை தட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து பூண்டு பற்களை உரலில் போட்டு நன்கு தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதன் பின் அதில் மிளகுத் தூளை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் ஊற வைத்துள்ள திணை அரிசி மற்றும் பருப்பை சேர்த்து சிறிது நேரம் வறுக்க வேண்டும்.
* அடுத்து அதில் 4 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குக்கரை மூடி, மிதமான தீயில் வைத்து 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் தேங்காயை துண்டுகளாக்கி சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அந்த தேங்காயை வடிகட்டி பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து குக்கரைத் திறந்து, அதில் தேங்காய் பாலை ஊற்றி கிளறி, அடுப்பில் வைத்து, ஒரு கொதி வந்ததும், கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான திணை பச்சை பயறு கஞ்சி தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, April 7, 2025, 7:00 [IST]
Desktop Bottom Promotion