பருப்பு குழம்பு - சிம்பிளா 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..

Posted By:

Paruppu Kulambu Recipe In Tamil: மதிய வேளையில் சமைக்க காய்கறி எதுவும் இல்லையா? சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதே சமயம் சுவையான சமையலையும் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பருப்பு குழம்பு செய்யுங்கள். இந்த குழம்பு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சூடான சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிடும் போது அட்டகாசமாக இருக்கும். மேலும் இந்த குழம்பு இட்லி, தோசையுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

Paruppu Kulambu How To Make Dal Kuzhambu Recipe

உங்களுக்கு இந்த பருப்பு குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பருப்பு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* புளி - பெரிய நெல்லிக்காய் அளவு (3/4 கப் சுடுநீரில் ஊற வைத்தது)

இடிப்பதற்கு..

* சீரகம் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 5 பல்
* சின்ன வெங்காயம் - 10
* பச்சை மிளகாய் - 5

குக்கரில் வேக வைப்பதற்கு...

* துவரம் பருப்பு - 150 கிராம் அல்லது 3/4 கப்
* தண்ணீர் - 2 1/4 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* இடித்து வைத்துள்ள பொருட்கள்
* பெரிய அளவு தக்காளி - 1 (நறுக்கியது)

தாளிப்பதற்கு..

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* சின்ன வெங்காயம் - 20 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* புளிச்சாறு
* சுடுதண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* வேக வைத்த பருப்பு
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் புளியை சுடுநீரில் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் இடி கல்லில் சீரகம், பூண்டு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு தட்டிக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் குக்கரில் துவரம் பருப்பை கழுவி சேர்த்து, அத்துடன் 2 1/4 கப் நீரை ஊற்றி, மஞ்சள் தூள், இடித்து வைத்துள்ள பொருட்கள் மற்றும் நறுக்கிய தக்காளியை சேர்த்து கலந்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை லேசாக மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் புளிச்சாற்றினை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, புளியின் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் வேக வைத்த பருப்பை சேர்த்து, குழம்பு மிகவும் கெட்டியாக இருந்தால், சுடுநீரை ஊற்றி கலந்து, 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான பருப்பு குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, July 27, 2026, 14:56 [IST]
Desktop Bottom Promotion